குமிழி- ரவி:
ஆசிரியர் குறிப்பு:
ரவி, 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடத்தியதன் மூலமும் பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர். தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். இது நாவல்.
புத்தகத்திலிருந்து:
” வௌவால்களைக் காணாத விருட்சமாக வேப்பமரத்தின் குடும்பம் போல் வளர்ந்திருந்த அந்த மரத்தின் நிழலொளியின் கீழ் அவளது புதைகுழியின் காலடியில் மண்டியிட்டேன். கைவிடப்பட்டிருந்த இந்த விடுதியும் அவளது மரணமும் என்னை என்னிடமே மீட்டுத்தந்த இடத்தையும், மனிதரையும் இழந்த துயரமாக வடிந்தது. மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது, நான் இப்போதைய நானாக மாறிக் கொண்டிருந்தேன்.”
சமீப காலத்தில் வேறெந்தப் போரையும் விட ஈழப்போர் நாவல்கள் அதிகம் வந்திருக்கின்றன. LTTEக்கு ஆதரவாக, விமர்சனம் செய்பவையாக நடுநிலைப்பார்வையில் என்று பல. இது PLOTல் இருந்த ஒருவரது நாவல்.
இரண்டு பெரிய இயக்கங்களும் கடைசிவரை ஒன்றாய் இருந்திருந்தால், ராஜிவ் கொலையில் புலிகள் பெயர் அடிபடாமல் இருந்திருந்தால்…………If “ifs” and “buts” were candy and nuts, wouldn’t it be a Merry Christmas?
துரோகி என்று சின்ன சந்தேகம் வந்தாலும் சித்திரவதைக்குள்ளாக்குவது, இயக்கத்தோழர்களுக்கு நடுவிலும் ஜாதி, பொருளாதார அந்தஸ்தினால் ஏற்றத்தாழ்வுகள், இயக்கத்திற்குள் இருக்கும் ஆண்பெண் போராளிகள் தங்களுக்குள் காதல் வசப்படக்கூடாது போன்றவை எல்லாம் ஒரு நாட்டின் இயக்கத்தில் மட்டும் இருப்பது அல்ல.
வகுப்புகள் நடந்து கொண்டிருக்கையில் இடையில் இயக்கத்தினர் தங்களது கவர்ச்சிகரப் பிரச்சாரத்தைப் பிஞ்சுகளுக்கு செய்வதாக ஒரு குறிப்பு வருகிறது. எந்த தீர்மானமும் எடுக்கும் முதிர்ச்சி இல்லாதவர்கள் எப்போதும் கவர்ச்சிக்கே மயங்குவர்.
தமிழககிராமங்களில் இயக்கத்தில் இருக்கும் எல்லோருமே விடுதலைப் புலிகள் தான். தொலைதொடர்பு பிரிவில் இருப்போர் களத்தில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை. மக்கள் இவர்களைத் தங்கள் பிள்ளைகள் போல் அன்பு செலுத்தியதாய் பதிவு செய்யப்படுகிறது.
இந்த நாவல் சுயஅனுபவங்களை நாவல் வடிவில் எழுதியது. ஈழத்தை விட்டுத் தப்பிக்குமுன் தன் இயக்க அனுபவங்களைக் கொடுத்துப் பாதுகாக்க வைத்திருந்தது அழிந்து போகிறது. முப்பத்தைந்து வருடங்கள் கழிந்து நாவல் உருவம் எடுத்து வருகிறது. நினைவிலிருந்து எழுதப்படுவதால் இறந்த பாண்டி வெளிநாடு தப்புவது போல் சிறு நினைவுப்பிழைகள் உண்டு. என்றாலும் இது ஒரு ஆவணம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இது மற்ற போர்நாவல்களிலிருந்து வித்தியாசப்படுவதை வாசித்தவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களின் தொடக்கம் போல் ஒரு Nightmareல் தொடங்கும் நாவல், தன்னிலையில் பின் வேறுவேறு கதைசொல்லிகளால் வளர்கிறது. இடையில் ஒரு அத்தியாயத்திற்கு வேப்பமரம் கதைசொல்லி. ரவியின் மொழிநடை இனிமை. ஈழத்தில் தமிழாசிரியர்கள் வேறுவிதமாக சொல்லிக் கொடுக்கிறார்களா! இந்த நாவல் ஒருவகையில் ரவி இத்தனை வருடங்கள் சுமந்த பாரத்தை இறக்கி வைக்க உதவியிருக்கும்.
இயக்கம் எதுவாயினும், தாய்,தந்தை, உடன்பிறந்தோர், நண்பர்கள், காதல் எல்லாவற்றையும் விட்டு உணர்வின் உந்துதலில் நாட்டுவிடுதலைக்காக போராடிய அப்பாவிகளின் ரத்தம் ஒரே மண்ணில் தான் கலந்திருக்கிறது. தலைமையின் தவறுகள் வேறு வஞ்சங்கள் அவர்கள் தியாகத்தின் அடர்த்தியை ஒருநாளும் குறைக்கப் போவதில்லை. கடைசியில் அத்தனைக்கும் அர்த்தமில்லாமல் போனது. போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனது.
பிரதிக்கு:
விடியல் பதிப்பகம் 94434 68758
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2020
விலை ரூ 180.