Azadi- Arundhati Roy:
எழுத்தாளர். சமூகசேவகர். அரசியல் விமர்சகர். களப்பணியாளர் மனிதஉரிமை போராளி. இவருடைய God of Small Things 1997 புக்கர் பரிசை வென்றது. அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. இது இவரது சமீபத்திய நூல்.
My Seditious Heart என்ற இவரது அரசியல் கட்டுரைகள் அடங்கியநூல் இவரது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லும். அருந்ததி போன்ற போராளிகளின் கண்கள் அவர்கள் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கும், மூளையும் அதையே செயலாக்கம் செய்யும்.
இந்தியாவின் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரில் செல்லாது. அங்கே மற்ற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. ஆனால் ஒரு காஷ்மீரி இந்தியராதலால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் கழித்தும் இதுவே நிலைமை. இதை மாற்ற சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
வாதையான நகரங்களில் எந்த மொழியில் மழைபெய்யும் என்ற கட்டுரை, இந்தியாவின் மொழிகளில் விளங்கும் சிக்கல்கள், குறிப்பாக இந்தி மற்றும் உருது எப்படி அடையாளம் காணப்படுகிறது என்பதோடு சிரியன்கிருத்துவ மலையாளத் தாய்க்கும் வங்காளித் தந்தைக்கும் பிறந்து அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் புழங்கும் கலப்புமொழியைக் கற்று வளர்ந்த இவரது மொழிஅடையாளச் சிக்கலையும் சொல்கிறது. இவரது முதல் இரண்டு நாவல்களைப் படித்தோர் இந்தக்கட்டுரையை மேலும் ரசிக்கமுடியும்.
இரண்டாவது கட்டுரை காமாலைக்கண் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல. BJP அரசின் மேல் இவர் சொல்லும் ஒவ்வொரு குற்றச்சாட்டுமே காங்கிரஸ் காலத்திலும் நடந்தது தான். இரண்டுமே நாட்டை படுகுழியில் தள்ளும் கட்சிகள். Pearl Harbourஐ, Twin towersஐத் தாக்கிய நாளைக் கொண்டாடினால் அமெரிக்காவில் சும்மா இருப்பார்களா! புனேயில் நடந்த பேரணி அது போலத்தான். 7/11/2020 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களைப் பாருங்கள். திருவனந்தபுரத்தில் ஒரே சர்ச் 4000 கோடிரூபாய் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வாங்கியிருக்கிறது. 4000 கோடி சிறிய தொகையா, என்ன நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்டது? இதை எல்லாம் ஏன் சமத்துவம், நல்லிணக்கம் பேசும் யாரும் பேசுவதில்லை?
கைப்பற்றப்பட்ட காயப்பட்ட இதயங்கள் என்ற கட்டுரை, இந்த அரசின் தவறுகளைப் பட்டியலிடுவதுடன் காஷ்மீர் பிரச்சினையைப் பேசுகிறது. காஷ்மீர் வரலாற்றுத் தவறு. பெரும்பான்மையான காஷ்மீரீகள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களை இந்தியராக நினைப்பதில்லை. பாகிஸ்தான் உவந்து அளிக்கும் ஆயுதங்களை வாங்கிக் கொள்கிறார்கள். இந்த அரசல்ல, எந்த அரசாலும் தீர்க்கமுடியாத பிரச்சினை இது.
இலக்கியத்தின் மொழி என்ற கட்டுரையிவ்:
” உண்மையும் புனைவும் உரையாடுவதில்லை. ஒன்று மற்றதை விட உண்மையாக இருக்கவும் , மற்றதை விட மெய்சார்ந்து இருக்கவும், மற்றதை விட நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கத் தேவையில்லை. என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் நான் எழுதுகையில் என்னுடைய உடலில் உணரும் வேறுபாட்டை மட்டுமே.”
மௌனமே பலத்த சத்தம் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையைப் பேசுகிறது. ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் உயிர்பயத்தில் தப்பி ஓடினார்கள். அதற்கு இவரது எதிர்வினை “அரசாங்கங்கள் போதுமான நிவாரணம் அளிக்கவில்லை”. சிரிப்பதா இல்லை அழுவதா தெரியவில்லை. நல்லவேளை காஷ்மீர் முஸ்லீம்களைக் கொன்று குவித்துப் பழிக்குபயந்து ஓடிவிட்டார்கள் என்று சொல்லவில்லை.
முடிவின் அறிவிப்புகள் என்ற கட்டுரை மோடி அரசின் தவறான கொள்கைகளும் RSSன் இந்தியா இந்துக்களுடையது என்னும் கோஷமும் இந்தியாவின் முடிவைக் கொண்டுவருவதாகச் சொல்கிறது.
கல்லறை மீண்டும் பேசுகிறது என்ற கட்டுரை இவர் இவ்வருடம் பிப்ரவரியில் Cambridgeல் ஆற்றிய உரை.
அமைப்பு தோல்வியடைகிறது எனும் கட்டுரை உலகத்தில் இருக்கும் எல்லோரையும் இந்த அரசை எதிர்த்துப் போராட அழைக்கிறது.
கடைசிக் கட்டுரை கோவிட் குறித்த கட்டுரை. லாக் டவுனையும் ரபேல் ஒப்பந்தத்தையும் பேசும் கட்டுரையில் நாலுமணி நேரத்தில் 1.38 பில்லியன் மக்களை வீட்டுக்குள் அடைத்த கொடுமையைச் சொல்கிறார்!
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்து விதூஷகர்கள் ஆவதும், இலக்கியவாதிகள் தங்களுக்குத் தெரிந்த அரசியல் சித்தாந்தங்களைச் சொல்லிக் கேலிக்கு ஆளாவதும் எப்போதும் எல்லா நாடுகளிலும் நடப்பது.
முகநூலில் கதை நன்றாக இருக்கிறது என்று இரண்டு மூன்று பின்னோட்டங்கள் வந்தாலே விடாது கதை எழுதும் சூழலில், 1997ல் புக்கர் போன்ற உயர்ந்த இலக்கிய விருதை ( விருதுபெறும் இந்தியாவில் வசிக்கும் முதல் இந்தியர் மட்டுமல்ல ஒரே இந்தியர் இவர் தான். Kiran Desai பதினாலு வயதில் இந்தியாவைவிட்டு சென்றவர், Aravind Adigas ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர்)
பெற்று அடுத்த நாவலை எழுதாமல் போராட்டங்கள், அரசியல் கட்டுரைகள்
என்று தொடர்ந்த வித்தியாசமான பெண்மணி. இவரது முதல் நாவலுக்கு Anticommunist என்ற பெயரும், நீதிமன்ற வழக்குகள் இவருக்கெதிராகவும் தொடரப்பட்டன. புக்கர் விருது அந்த சூட்டைக் குறைத்து விட்டது. அருமையான நாவல் அது.
அருந்ததியின் பார்வைகள் எப்போதும் ஒற்றைப் பரிமாணத்துடனும் Hate Speech ஆகவும் இருப்பதை நடுநிலையாளர்கள் கண்டுகொள்ள முடியும். இலக்கியத்தில் இவருக்கு உள்ள ஸ்தானத்திற்கும், அரசியல் விமர்சனத்தில் இவருக்குள்ள ஸ்தானத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி, இவர் இரண்டும் இரண்டு கால்கள் என்று சொன்னபோதிலும்.
இந்தியா இந்துக்களின் நாடு என்று யார் சொன்னாலும் அதில் உண்மையில்லை. பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது முஸ்லீம்கள் எல்லோரும் அங்குபோய்விடுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவரவருக்கு எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்தியா என் தேசம், இங்குதான் தங்குவோம் என்று இருந்த மக்கள் நம் உறவினர், எந்நாளும் எதிரிகளாக நினைக்கக்கூடாது. மேலும் இந்தியா 780 மொழிகளும், ஏராளமான மதங்களும் இனங்களும் வாழும் தேசம். பெரும்பான்மை என்பது பூரணஉரிமையின் அருஞ்சொற்பொருள் அல்ல.
ஆங்கிலேயர் வந்ததே, கொள்ளையடிக்க, மதத்தைப்பரப்ப என்ற இரண்டு நோக்கங்களுடன் தான். அவர்களினால் உருவான புதுஇனமான ஆங்கிலோ இந்தியனிலும் நம் இரத்தக்கலப்பு இருக்கிறது.
மதங்களை நம்பாத மதம் ஒன்றே இந்தியாவின் தற்போதைய தேவை. அதற்கு முதலில் கடவுளைக் கொலை செய்யவேண்டும். ஒரு கடவுளை நம்புபவர் ஒருநாளும் சிறந்த மனிதாபிமானியாக மாறமுடியாது. காதல் மணங்களில் இந்து ஏன் இந்து அல்லாத ஒரு மதத்திற்கு மாற வேண்டும். அப்படியே அவரவர் நம்பிக்கையைத் தொடரும் அளவிற்கு காதல் வலுவில்லாததா? நமது So called நடுநிலை மற்றும் மதநல்லிணக்கவாதிகள் இது போன்ற விசயங்களை எல்லாம் அறிந்ததாகக் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். அருந்ததியும் வெறுப்பரசியலின் பிரதிநிதியே, அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!
https://www.amazon.in/dp/B0866CS636/ref=cm_sw_r_wa_apa_4i4YFbEB965VW