Cobalt Blue – Sachin Kundalkar- Translated from Marathi by Jerry Pinto:
சச்சின் மராத்தியில் இரண்டு திரைப்படங்களுக்கு தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நாவலாசிரியர். தன்னுடைய இருபத்திரண்டாம் வயதில் இந்த நாவலை இவர் வெளியிட்டார்.
சமீபத்தில் வெளிவந்த B.R. Collinsன் The Binding நாவல் உட்பட அண்ணன், தங்கை இருவரும் ஒரே ஆணைக் காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில நாவல்கள் பல. இந்தியாவில் நாம் தொடத்தயங்கும் ஒரு கதைக்கரு. மராத்தியில் வந்திருக்கிறது என்பது ஆச்சரியம். தமிழில் 2091ல் இலைமறைவு காய்மறைவாக இந்தக் கருவை யாரேனும் எழுதக்கூடும்.
இந்தியாவில் பெண்கள் வெகுசீக்கிரம் ஒருவரை ஒருவர் தொடுமளவிற்கு நெருங்குவதைப் போல் ஆண்களால் முடிவதில்லை. என்னுடைய இருபது வயதுக்குப் பிறகான ஆண்நண்பர்கள் எல்லோருமே Personal spaceக்கான வளையத்தைக் காத்து நின்றவர்கள். பள்ளி, கல்லூரி காலத்தில் தோள்மேல் கைபோட்டு, மேல்சாய்ந்து பழகிய நட்புக்குள் ஸ்ருதிபேதம் வரவேயில்லை. பின்னாளில் Hugging கலாச்சாரத்தில் ஆணோ பெண்ணோ அது ஒரு ஜாக்கிரதையான தழுவல். உணர்வுக்கடத்தல் எதற்கும் வாய்ப்பில்லா ஒரு அணைப்பு. ஆணை ஆண் தொடுகையில் மின்சாரம் பாய்ந்ததென்றால் அலைவரிசையில் எங்கோ மாறியிருக்கிறது என்றே அர்த்தம்.
என்ன இருக்கிறது அதில் என்ற எதிர்பார்ப்பின் பரபரப்பில் கலவி கொள்ளும் பள்ளிப்பருவத்தினர் பின்னாளில் காதல் கொள்ளும்போது சர்வஜாக்கிரதையாக இருப்பார்கள் என்பது பொதுவிதி. விதி என்றால் விதிவிலக்குகள் கண்டிப்பாக இருந்தே தீரும்.
Cobalt blue (ராமர் நீலமா?) எப்போதும் அமைதியைக் குறிக்கும். ஆனால் இந்தக் கதையில் இருவரது வாழ்வில் ஏற்படும் சூறாவளியைக் குறிக்கிறது. இந்த தலைப்பின் காரணம் Cobalt blue இருவருக்கு ஏற்படுத்தும் வெவ்வேறு அதிர்வுகளைக் குறிக்கிறது என்றும் சொல்லலாம்.
ஒரு சின்ன நாவலில் LGBT issues, மராத்தி நடுத்தரவர்க்க பிராமணக் குடும்பத்தின் சூழல், பழக்கவழக்கங்கள், மதிப்பீடுகள், தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் பிரச்சினைகள், இந்தியத் திருமணங்கள் பற்றிய குறிப்புகள், குடும்பத்தில் ஒவ்வொருவரும் தீவு போல் மனம்விட்டுப் பேசமுடியாத சூழல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு உணர்வுகளின் கொந்தளிப்பே எல்லாவற்றையும் மீறி மேலோங்கி நிற்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நாவலாசிரியர். பெங்களூரில் இருந்து மும்பை விமானப்பயணத்திற்குள் இந்த நாவலைப் படித்து விடலாம். ஆனால் அதன்பிறகு இந்த நாவல் தரும் After effects………
இரண்டு கதைசொல்லிகள் Tanay மற்றும் Anuja. முதல் கதைசொல்லி Second person singularஐ அழைத்துக் கதை சொல்கிறார். இரண்டாமவர் டயரிக்குறிப்புகள் மூலம். இரண்டு வேறுவேறு உணர்வுகள், இரண்டு கோணங்கள். மூன்றாமவரின் தரப்பில் கதையில்லை எனினும் உங்களால் அவரது கோணத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக்கதையை ஒப்பிடுகையில் பெங்களூர் சர்ச் தெருவில் நாம் பாவாடை தாவணி அணிந்து செல்லும் சிறுமியைப் போல் இருக்கிறோம். வளரும் எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
I