யாவரும்.காம் மே 2021 கதைகள்:
மந்தாரம் – சுஷில் குமார்:
சற்றே அமானுஷ்யமும், நாஞ்சில் வட்டார வழக்கும், மீதியை வாசகர் நிரப்பிக் கொள்ளும் கதைசொல்லலும் சுஷில்குமாரின் successful template ஆகிப்போனது.
நம்பிக்கைகள் சஞ்சலத்தைப் போக்குகின்றன. கான்சர் இருக்குமா இல்லையா என்ற பயத்தை விட அதன் Result பயமுறுத்துவதில்லை. எதுவானாலும் மனம் அதற்கு பக்குவப்படுத்திக்கொள்ளும். முடிவு தெரியாத நேரம் தான் நரகம். முடிவு எடுக்க மூடநம்பிக்கைகள் உதவும் என்றால் End justifies the means என்று எடுத்துக் கொள்ளலாம்.
http://www.yaavarum.com/%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
கனவுக் காய்ச்சல் – ரே பிராட்பரி – தமிழில் நரேன்:
பதின்பருவத்து தனிமை மற்றும் பெரியவர்கள் மீதான அவநம்பிக்கையும் இந்தக்கதையில் முக்கியமான விசயங்கள். மருத்துவரோ அல்லது பெற்றோரோ மனதளவில் அவனுக்குப் பெரிதாகத் துணையில்லை.
நோய் உண்மையான நரம்புத்தளர்ச்சியோ அல்லது பிரமையாகவோ இருக்கக்கூடும். அவனுடைய அபிலாஷைகள், “பெயரில்லாமல் இருப்பதற்கு” , கைகால் கட்டுகளை அவனே அவிழ்ப்பது, எறும்பு சம்பவம் என்று அதன்பின் நடப்பது எல்லாமே Bradbury இதனை Gothic story ஆக மாற்றியிருப்பதைத் தெரிவிக்கிறது.
கன்னிச்சாமி – கா.சிவா;
நம்பிக்கைகளை வைத்தே மனிதவாழ்வு இயங்குகிறது. முதல்முறையாக சாமியாடியாக வரும் சின்னையாவிற்கு ஒரு குழப்பம். அவன் காதலித்த மீனாட்சிக்கு ஒரு குழப்பம். இரண்டும் ஒரு கோட்டில் இணைவது கதையை சுவாரசியமாக்கி இருக்கிறது. கடைசிவரி தேவையில்லை இந்தக் கதைக்கு.
ராட்டினம் – தென்றல் சிவக்குமார்:
தென்றல் எப்போதோ ஒருமுறை எழுதினாலும் நல்ல கதைகளை எழுதி வருகிறார். வண்ணதாசனின் பிரியங்களால் ஆன உலகத்தில் லா.ச.ராவின் மொழிநடை சற்றே கலப்பது போன்ற உணர்வு. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை எந்தத் திருப்பமும் இல்லாது நேர்கோட்டில் செல்லும் கதை. கதை சொல்லலும் நேர்த்தியாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.
மௌன கூடாரம் – ஐ.கிருத்திகா
அதிர வைக்கும் கதை. எல்லாப் பெண்களுமே சிறுவயதில் வீட்டில் இளவரசியாகத் தான் வளர்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் ஆனதும் ராணியாவது வெகுசிலர் தான். இரட்டை சடையை முன்னால் போட்டுக் கொள்வதில் இருந்து மீண்டும் எத்தனையோ சின்னச்சின்ன நிகழ்வுகள் அனுபவம், பார்த்ததில் இருந்து வழமை போல் கதையில் வருகின்றன. முன்பு புத்தகத்தை முன்னால் வைத்துக் கொண்டும் நடப்பார்கள். தொடர்ந்து நல்ல கதைகளை எழுதுகிறார் கிருத்திகா.
ஆயிரம் பொன்- யோகேஷ்வர்:
முதல்கதை என்று குறிப்பிட்டிருக்கிறது. நிறைய வாசியுங்கள். வாசிப்பே கண்டிப்பாக எழுத்துக்குக் கூட்டிச்செல்லும்.
இந்த இதழ் யவனிகா ஸ்ரீராம், கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள், பச்சோந்தியின் குறுங்கதையும் கவிதைகளும், ராஜி வாஞ்சியின் இனிமையான மொழிபெயர்ப்பில் Robert Frostன் கவிதை(நல்ல வேலிகள் நல்லுறவை வளர்க்கும்) கட்டுரைகள் என்று பலவித அம்சங்களோடு நிறைவான வாசிப்பைத் தரும் இதழாக மலர்ந்திருக்கிறது.