அகழ் மே-ஜுன் 2021 இதழ் சிறுகதைகள்:
டைனோசர் முட்டை – ஜேகே:
ஜேகேயின் வித்தியாசமான பார்வை தொடர்கிறது. யாருடைய கோணத்தில் கதை சொல்கிறோம் என்பது முக்கியமானது. Best Day Ever நாவலில் யார் Victimஆகக் கதை சொல்கிறானோ அவன் விக்டிம் இல்லை என்பது பாதி நாவலுக்குப் பிறகே தெரியவரும். அதேயுத்தி இந்தக் கதையும் கூட. இன்னொன்று Flash back. அது கதைக்கு எவ்வளவு தேவையானது என்று கதை முழுதும் படித்தால் தான் தெரியும். சந்தேகப்படும் ஆணின் மனநிலை கதைமுழுதும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இணங்கும் வரை கெஞ்சுவது, இணங்கி விட்டால் இது இவளுக்கு முதல்முறையாக இருக்காது என சந்தேகம் கொள்வது ஒரு சோற்றுப்பதம்.
https://akazhonline.com/?p=3300
தண்டவாளம்- காஞ்சனா பிரியகாந்த- தமிழில் பிரியதர்ஷினி சிவராஜா:
நிழல்கள் மீட்டாத தண்டவாள சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி? – கலாப்பிரியா.
இலங்கையில் தமிழில் போலவே சிங்களத்திலும் நல்ல இளம்எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். ரிஷான் ஷெரீப், பிரியதர்ஷினி இருவரும் தமிழுக்குத் தொடர்ந்து கொண்டு வருகிறார்கள்.
pseudo intellectuals எல்லா இடங்களிலும் இருந்து அவர்களை வியப்புடன் பார்ப்பவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டே இருக்கிறார்கள். காதலர்களில் இருவரில் ஒருவர் எந்த இனம் என்று சொல்லாததில் இந்தக்கதை இனபேதத்தைவிட காதல் என்ற பெயரில் வரும் Parasites பற்றியே சொல்கிறது.
https://akazhonline.com/?p=3309
நியமம்- மயிலன் ஜி.சின்னப்பன்:
இந்த எழுத்தாளரின் கதையைப் படியுங்கள், நிச்சயம் நன்றாக இருக்கும் என நான் படிக்காத கதையைக்கூட சொல்லமுடியும் வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர் இவர்.
உளவியல் தான் கதை. எது நியமம்? (Norm). தன்னைப் போலப் பிறரை நினைப்பது. நந்தினியின் அப்பாவின் மீது விழும் அடி ஒவ்வொன்றும் இங்கேயும் விழும். மனைவியிடம் சின்ன விசயத்திற்குக் கோபப்படுபவர்கள், அடுத்த பெண்ணிடம் பொறுமையாக, கண்ணியமாகப் பதில்சொல்லிக் கொண்டிருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். கல்யாணம், செக்ஸ் இல்லைன்னா எதுவும் பரவாயில்லையா? இந்தக்கேள்வியை நந்தினியிடம் கேட்டால் என்ன சொல்வாள்?
இந்தக்கதையில் எழுதிய வரிகளுக்கிடையே எழுதாத விசயங்கள் நிறைய இருக்கின்றன. “நிறைவுக்கான பொறுமை” என்பது போல் பூடகமான வரிகள் சட்டென்று கடந்து விடுகின்றன.
https://akazhonline.com/?p=3315
முகை- லாவண்யா சுந்தரராஜன்:
இந்தக்கதை நிகழும் காலம் எண்பதுகளாக இருக்கக்கூடும். சுவரொட்டிகளும் அதையே சொல்கின்றன. எழுபதுகளின் சிறுநகர்களில் சிறுபெண்கள் எதற்கெடுத்தாலும் சிரிப்பதைப் பார்த்ததாக நினைவு.
இப்போது வளரும் பிள்ளைகளுக்கு இருக்கும் பக்குவம் எதுவும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்பிள்ளைகள் மீசை தாடி வளர்ந்து பெரியமனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற துடிப்பு போல பெண்பிள்ளைகளுக்கு தாவணி போட சீக்கிரம் சேலைகட்ட ஆசை. அறியாமையும் தயக்கமுமாய் நடந்த சிறுபெண்கள் தேவதைகள். நினைவுக்கிடங்கில் இருந்து எடுத்து எழுதிய கதை.
https://akazhonline.com/?p=3320
ஆச்சியின் நுட்பம்- சேனன்
ஆச்சியின் எழுத்தாளப்பேரன் யார்? Haha.
மைக்கேல் மதன காமராஜனில் ஊர்வசியின் பாட்டி போல் ஆச்சி. பச்சோந்திக்குக்கூட நிறம் மாறக் கூடுதல் நேரமாகும். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை ஒரு Spontaneous flow எழுத்தில் இருக்கிறது. நகைச்சுவை எளிதாக இவருக்கு வருகிறது. தமிழ்நாட்டில் கூட யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் செல்வாக்காக இருப்பார் என்று யாரோ அரசியல்வாதியைச் சொல்வார்கள். மறந்து விட்டது. ஆச்சி அவருக்கு சற்றும் குறைந்தவரல்ல. குமரன், முருகன் இரண்டும் ஒரே கடவுளின் பெயர் தான், பரவாயில்லை.
https://akazhonline.com/?p=3323
வெம்மை- உமாஜி;
உமாஜியின் கதை பிறழ் மனதின் சித்திரங்கள். ” அவள் இறந்து போன ஒருத்தி” என்று சொல்லாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வளவு சின்னக்கதையில் அளந்து, அளவெடுத்த வார்த்தைகளை உபயோகித்து அந்த உணர்வை உணர வைக்கிறார். வெம்மை எல்லா நேரங்களிலும் இதமானதல்ல.
https://akazhonline.com/?p=3326
அகழ் இந்த இதழின் அத்தனை கதைகளும் சிறப்பு. நேரம் கிடைக்கையில் ஒவ்வொன்றாகவேனும் அவசியம் படியுங்கள். இலவசமாகக் கிடைப்பதனால் அதன் மதிப்பு குறைவதில்லை. சில நேரங்களில் அச்சில் வரும் கதைகளை விட இணைய இதழ்களில் வரும் கதைகள், தரம் கூடுதலாக இருக்கின்றன.