Behind Her Eyes – Sarah Pinborough:
சாரா இங்கிலாந்தில் பிறந்த ஆங்கில எழுத்தாளர். BBC இல் Screen Play writer ஆகப் பணியாற்றியவர். இருபத்தைந்து நாவல்களுக்கு மேல் வேறுவேறு Genreல் எழுதியவர். இந்த நாவல் மிகவும் பிரபலமானது. Netflix series இதே பெயரில் இந்தப்புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டு வெளிவந்தது.
லூவிஸ்ஸின் கணவன் வேறு பெண்ணிற்காக இவளை விட்டு சென்றதும், அவள் மகன் சிறுவன் ஆடமைத் தவிர வேறு உண்மையான உறவு அவளுக்கு இல்லை. டேவிட் போன்ற அழகான டாக்டர் அவளிடம் ஈடுபாடு காட்டுகையில் அவளுக்கு மறுக்கும் சக்தி இல்லை. ஆனால் டேவிட்டின் மனைவி அடெல் அவளிடம் சிநேகமாகுகையில் ஏற்கனவே இருக்கும் தூக்கக்கோளாறு நோயுடன், குற்றஉணர்வும் சேர்கிறது. இருவரில் ஒருவரின் தொடர்பை அவளால் துண்டிக்க முடியவில்லை. அவளுக்குத் தெரியாதது டேவிட்டிடம் ஒரு இரகசியம் இருக்கிறது. அடெல்லிடமும் ஒரு இரகசியம் ஒளிந்திருக்கிறது. யாரிடம் தான் இரகசியம் இல்லை. முழுதாக மனதைத் திறந்து யார் தான் யாரிடம் தான் காட்டமுடியும். ஆனால் சில இரகசியங்கள் புதைகுழிமேல் கால் வைப்பதற்கு ஒப்பானவை.
இந்த நாவல் ஒரு mind game. மொத்தம் நான்கு பேர் இந்த விளையாட்டில். ஒருவர் எப்போதோ நடுவில் வந்து போகிறவர், இன்னொருவர் வெறும் கைப்பாவை. இதைப் படிக்கையில் உங்களை அறியாமல் நீங்களும் இந்த Mind gameற்குள் நுழைந்து விடுகிறீர்கள். மீதி இருக்கும் இருவரில் யார் Mind game play செய்வது என்று கண்டுபிடிக்க வேகமாக பக்கங்களை புரட்டுகிறீர்கள். இருநூறு பக்கங்கள் மீதி இருக்கையில், வீட்டில் எல்லோரும் தூங்குவதை ஒருகணம் பார்த்து விட்டு, வெகுசூடாக காப்பி தயார்செய்து அருந்திக் கொண்டே புத்தகத்தில் ஆழ்ந்து விடுகிறீர்கள்.
ஆங்கிலேயர்கள் இறந்தபின் ஆன்மா உடலை விட்டு வெளியேறுகிறது என்பதை நம்புகிறார்கள். ஆனால் கூடுவிட்டு கூடு பாய்வது என்பது இந்தியர்களின் வாய்மொழிக்கதைகளில் சொல்லப்பட்டது. எத்தனையோ காலம் கழித்து ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இந்த நம்பிக்கை உதவியிருக்கிறது.
டேவிட்டைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் டேவிட் ஒரு அத்தியாயத்தில் கூட கதைசொல்லியாக இல்லை. அடெல்லும் லூவிஸ்ஸும் மாறிமாறி கதையை சொல்கிறார்கள். நடுவில் கதை பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அடிக்கடி சென்று வருகிறது. இந்த எல்லா யுத்திகளும் சேர்ந்து கதையின் வேகம் ஆரம்பத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை குறையாது பார்த்துக் கொள்கின்றன. கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் என்பதே நாவலை முடித்தவுடன் தான் தெரிய வருகிறது. இதன் முடிவை நாவலை முடிக்குமுன் சொல்பவருக்கு ஒருகோடி பரிசு என்று கூட அறிவிக்கலாம். எப்படியும் ஒருவரால் கூட கண்டுபிடிக்க முடியாது.