என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது- அரபியில் நுஜூத் அலியுடன் டெல்ஃபின் மினோவி- ஆங்கிலத்தில் லிண்டா கவர்டேல்- தமிழில் சூ.ம.ஜெயசீலன்:
சூ.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நன்னெறிப்பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. பத்துக்கும் குறைவான வயதில் மணமுடிக்கப்பட்ட ஒரு ஏழைப்பெண்ணின் உண்மைக்கதை இந்நூல்.
1929 ல் இந்தியாவில் குழந்தைமணம் தடைசெய்யப்படும் சட்டம் விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், உலகில் குறிப்பாக அரபிநாடுகளில் இது சாதாரணமாக நடக்கும் விசயமாகவே இருக்கிறது. அரபிப் பெண் எழுத்தாளர்களின் கதைகளில் தவறாது இடம்பெறும் அம்சம் சிறுமிகளைப் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்துவது. அது போல் ஒரு பெண்ணின் கதையாகவே யாருக்கும் தெரியாமல் முடிந்திருக்கும் இந்தப்பெண் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால்.
குழந்தையின் பார்வையில் ஏமனின் ஒரு கிராம வாழ்க்கை சொல்லப்படுகிறது. கிராமத்தில் மரியாதைக்குரிய நபர் நகரம் வந்ததும் அவமானப்படுவது தமிழ்நாட்டைப் போலவே ஏமனிலும் நடக்கிறது. Adulteryக்கு மரணதண்டனைக்கு வாய்ப்புள்ள ஏமனிலும் அது நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மனைவியின் சகோதரி எல்லா இடங்களிலும் irresistible போலிருக்கிறதே.
வறுமை, வறுமை தான் குழந்தை திருமணங்களுக்குக் காரணமாக அமைகிறது. ஒரு வயிற்றுச் சோறு குறையும், சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் கிடைக்கும் என்று சிறுமிகள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். ஹைதராபாத்தின் பல சோகக்கதைகள் நமக்குத் தெரிந்தவை. வசதி இருக்கும் யாரும், எந்த மதத்தினரும், எந்த நாட்டினரும் குழந்தை திருமணத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் அரபுநாடுகளில் பெண்கள் படித்தால் கெட்டுப்போவார்கள் என்று சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது இன்றும் நடப்பது.
கணவனின் தொடர்ந்த பாலியல் வல்லுறவிற்குப் பிறகும் தன் வயது சிறுமிகளுடன் விளையாட வேண்டும் என்று கெஞ்சிக்கேட்கும் சிறுமியிடம் எப்படி அப்படி நடந்து கொள்ளமுடியும்.
ஏமன் இல்லாமல் சவுதி அரேபியாவாக இருந்திருந்தால் ஒருவேளை இவரது கதை வெளியே தெரியாமல் போயிருக்கலாம். தடங்கலே இன்றிப் படிக்கக்கூடிய சரளமான மொழிபெயர்ப்பு
ஜெயசீலனுடையது.
ஒரு ஆவலில் இப்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன்.
நுஜூத் பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டு 2016 நிலவரப்படி இரண்டு குழந்தைகளின் தாய். அவர் நினைத்தது போல் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவரது மாஜிக்கணவர் நான்கு மனைவிகளுடன் சுகபோக வாழ்வு வாழ்ந்து வருகிறார். சாம்சன் கடைசியில் தன் மொத்த பலத்தையும் உபயோகித்தது இதற்குத்தானா என்று யோசித்திருக்கிறேன் முன்பு. இப்போதும் அந்த நினைவு வந்தது.
பிரதிக்கு:
டிஸ்கவரி புக் பேலஸ் 87545 07070
முதல்பதிப்பு ஏப்ரல் 2021
விலை ரூ.180.