What We Know About Her – Krupa Ge:
சென்னையைச் சேர்ந்தவர். Rivers Remember என்ற அல்புனைவு சென்னை வெள்ளத்தின் பின் இவர் எழுதிய நூல். Hindu, Caravan உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வந்துள்ளன. இது இவரது முதல் நாவல்.
யமுனா செங்கல்பட்டிலுள்ள பரம்பரை வீட்டை தனதாக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சிக்கு அவள் அம்மா சம்மதிக்கவில்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்த ஆண் நண்பனுடன் பிரிவு ஏற்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இசை என்ற அவளது முனைவர் ஆய்வுப்படிப்பு தொடர முடியாது நிற்கிறது. எதுவுமே சரியில்லாது, போரடித்த மனநிலையில் இருக்கையில் அவளது பாட்டி தாத்தாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கிறது. பாட்டி அதில் கர்நாடிக் இசையின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான தன் தங்கையை பதின்வயதில் பெண்பார்க்க வந்ததைப் பற்றி எழுதியிருக்கிறார். தனது சின்னப்பாட்டி பதிநாலு வயதில் திருமணம் செய்து கர்நாடிக்கில் எப்படி இவ்வளவு சாதித்தார் என்ற ஆச்சரியம் யமுனாவுக்கு எழுகிறது. பாட்டிகள் இருவரும் இல்லை, தாத்தா இருக்கிறார். சின்னப்பாட்டி குறித்துத் தெரிந்து கொள்ள தாத்தா இருக்கும் வாரணாசிக்கு யமுனா புகைவண்டியில் பயணிப்பதில் இந்த நாவல் ஆரம்பிக்கிறது.
யமுனாவைத் தொடர்ந்தே நாவல் முழுதும் செல்கிறது. இன்றைய பெண்கள் பலரைப்போல் செக்ஸ் என்பது அவளுக்கு சாதாரண விசயம். ஒரே நிபந்தனை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். யமுனாவின் தோழி கவிதாவும் அப்படித்தான். இவர்களுக்கு அது வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பேசிக் கழிக்கும் சமாச்சாரமல்ல. ஆங்கிலத்தில் எழுதுவதன் சுதந்திரம் என்னவென்றால் பாசாங்கு
ஆண்பெண்களை கதைகளில் வடிக்கும் நிர்ப்பந்தம் இல்லை.
நாற்பதுகளில் ஆரம்பிக்கும் கதை நிறைய விசயங்களைப் பேசுகிறது. குழந்தை மணம், ஆணாதிக்க சமூகம், கலப்பு மணம், கர்நாடக சங்கீதம் …….
தலை மழித்த நார்மடிப்பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கசப்புகளை ஏதுமறியாத சிறுமிகள் மேல் உமிழ்வது, பச்சை மண்ணான ஐந்து வயதுப் பெண்குழந்தை காலை அகட்டி வைத்தால, யாருக்காக இப்படி வைத்திருக்கிறாய் என்று கேட்பது, மூன்று நாட்களில் பெண்கள் ஏதோ பாவம் செய்தவர் போல் வீட்டாரால் ஒதுக்கி வைக்கப்படுவது, பெண் பருவமடைந்தால் முதலில் தாய் பார்க்கக் கூடாது என்பது போல் பல தகவல்களால் அந்தக்கால தெலுங்கு பிராமணச்சமூகம் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அம்மா-பெண் உறவு வேறுவேறு தலைமுறைகளில் ஒரு Love and hate relationship ஆக இருப்பது நாவலில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. அதே போல் தாத்தா- பேத்தி உறவும் நாவலில் நன்றாக வந்திருக்கிறது. கடிதங்கள் மூலம் சின்னப்பாட்டியின் இரகசியங்கள் வெளிவருகின்றன.
பத்து வருடங்களாக இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். செங்கல்பட்டு, வாரணாசி, சென்னை எல்லாமே பழகிய இடங்கள் இவருக்கு. இந்தப்பிரதியை நூறுமுறையேனும் திருத்தி எழுதியிருப்பேன் கடந்த ஒன்பது வருடங்களில் என்று கூறியிருக்கிறார் ஒரு பேட்டியில். நாற்பதில் வந்த காளமேகம் படப்பாட்டு, நாற்பத்து மூன்றில் சென்னையில் வந்த வெள்ளம், வாரணாசியின் நில வர்ணனைகள் என்று எல்லாமே கச்சிதமாக வரலாற்றுச் சம்பவங்களுடன் பொருந்துகின்றன. இது இந்திய நாவல். இன்னும் சொல்லப்போனால் நடுநடுலே தமிழ் வார்த்தைகள் வருவதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்நாவல். இன்னொருவகையில் சொன்னால் ஆங்கிலநாவல்களுக்கு இணையாக கதையிலோ, சம்பவங்களிலோ, லாஜிக்கிலோ எந்த Flawவுமே கண்டுபிடிக்க முடியாத தமிழ்நாவல்.
Good work indeed, looking forward more from you.
Westland Publications
First Edition April, 26, 2021
Price Rs.499.