மயில் புராணம் கணையாழியில் வந்த கதை. ஆசிரியர், பிரிவினையின் வலி, நாடுகடத்தப்படுதல், இழந்த நினைவுகள் ஆகியவற்றைப் பேசுகிறார். கதை மொத்தமுமே உருவகக்கதை. இந்தியாவும் பாகிஸ்தானும் மாறிமாறி அணு ஆயுத சோதனை நடத்தி இராஜஸ்தானில் இருந்த மயில்கள் பயத்தில் இறக்கின்றன. மயில்கள் அழகானவை, அமைதியானவை நம் நேசத்திற்குரியவை. அஸ்வத்தாமா அழிவின் சக்தி. அழிவில்லாதவன் அஸ்வத்தாமன். அன்னப்பறவைகள் அழிதல் நீர்நிலைகள் வற்றுதல் அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் நடந்த போரின் உருவகம். ஏற்கனவே நடந்த அழிவைப் பார்த்தும் நம் இரண்டுநாடுகள் திருந்தவில்லை என்பது இவரது ஆதங்கம்.
அஸ்வத்தாமன் தான் உலக அழிவை ஏற்படுத்தும் பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்தியது. பிரமாஸ்திரம் அணு ஆயுதம். கௌரவர் பாண்டவர் போல் பாகிஸ்தானும் இந்தியாவும் சகோதரர்கள். இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் அஸ்வத்தாமா விடாமல் தொடர்கிறான்.
பிரிவினையின் போது இஸ்லாமியர் என்பதால், குர்ரத்துலைன் ஹைதர், இஸ்மத் சுக்தாய் முதலியோர் முதலில் பாகிஸ்தான் சென்று பின் அங்கிருக்க முடியாமல் இந்தியா வந்து விட்டனர். மண்ட்டோ, இந்த்ஜார் ஹுசைன் முதலியோர் அங்கேயே தங்கிவிட்டனர். பிரிவினையால் அழிந்தோம், இந்துக்கள், சீக்கியர் போன்றவர் மீது காட்டிய வெறுப்பு அர்த்தமற்றது இப்போது பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களே எதிரி போன்ற விசயங்கள், கிரிக்கெட் வெற்றி போன்ற சிறியவிசயங்களில் மகிழ்ச்சி அடைந்தாலும் பாகிஸ்தான் தோற்ற தேசமாகிவிட்ட நிதர்சனத்தின் வலி ஹீசைனின் பல கதைகளில் வெளிப்படும். அவரது தீர்க்கதரிசனம் பொய்க்கவில்லை. அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் Pakistan bankrupted state என்பது உலகிற்குத் தெரியவரும்.
ஹுசைன் குரான், பைபிள், இராமாயணம், மகாபாரதம், புத்த சமண நூல்களைக் கற்றவர். இவற்றின் சிதறவ்கள் அங்கங்கே இவர் கதைகளில் வரும். இவரது கதைகள் பெரும்பாலும் தொடக்கம், கதை, முடிவு என்ற வழமையான வடிவத்தில் இருப்பதில்லை. போதிய வாசகஅனுபவம் இல்லாதவர்களுக்கு இவரது மயில்புராணம், வளைவுப்படிகள், பேரியம் கார்பனேட் போன்ற கதைகள் சவாலாக இருக்கும். 2013ன் புக்கர் இறுதிப் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றது.
ஆமை, தோணி, முழுமையான ஞானம் முதலிய கதைகள் புத்த, இந்து, விவிலிய புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. தொன்னூற்று மூன்று வயதுவரை வாழ்ந்த இவர், இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்து இணைந்த இந்தியாவில் இருபத்திரண்டு வருடமே இருந்திருந்தாலும் இறுதிவரையில் இந்தியமண்ணின் மீதான நேசம் இவரிடம் இருந்தது. மண்ட்டோ, Faiz போல எண்ணிக்கையில் அதிக வாசகர்களைக் கொண்டிராத போதும் உலக இலக்கியவாதிகளின் மதிப்பைப் பெற்றவர் ஹுசைன்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நல்லதம்பியின் சரளமான மொழிபெயர்ப்பு, வழமைபோல் தமிழில் எழுதப்பட்ட படைப்பைப் படிப்பது போலவே இருக்கிறது.
உருதிலிருந்து ஆங்கிலம் பின் கன்னடம், தமிழ் என்று வந்தும் இந்தக்கதைகளின் ஆன்மா சிதையாமல் இருப்பது எல்லா மொழிபெயர்ப்பாளர்களின் திறனும், ஈடுபாடும் என்பதே உண்மை.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 270/-
.