ஜூடித் ஜெர்மனியில் பிறந்து, வளர்ந்தவர். எழுத்தாளர், புத்தக வடிவமைப்பாளர், புகழ்பெற்ற இயற்கைசரித்திரப் பத்திரிகையின் ஆசிரியர். இதற்கு முன் இவர் எழுதிய Atlas of Remote Islands , The Giraffe’s Neck முதலியவை இருபது மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் 2021 புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிது.
மற்ற புத்தகங்களைப் போலவே இந்த நூலும், இறந்தகாலத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவது, மூளைக்கு மறந்தவற்றை நினைவுறுத்துவது, வாயடைக்கப்பட்டவர்களுக்கு வார்த்தை கொடுப்பது, இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, விருப்பின் ஊற்றிலிருந்து, சிலவற்றை விடாமல் இருத்திக்கொள்வதற்கான யத்தனங்கள்.
எழுத்து எதையும் திரும்பக் கொண்டு வரப்போவதில்லை, ஆனால் உங்களுக்கு அந்த அனுபவங்களின் நடுவே மீண்டும் வாழச் செய்யும்.
நூலின் தலைப்பு சொல்வது போல காலச்சுழலில் மூழ்கித் தொலைந்த பன்னிரண்டு விசயங்களைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். முதல் கட்டுரை Tuanaki என்ற அழிந்து போன Islet பற்றியது. நமது சரித்திரத்தில் தனுஷ்கோடி கடலில் மூழ்கியது. மொகஞ்சாதரோ, ஹரப்பா பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்து இருப்பு நிரூபிக்கப்பட்டது போல், அகழ்வாராய்ச்சி ஆதாரம் எதுவும் இந்தக் குட்டித்தீவைப் பற்றி கிடைக்கவில்லை.
தன்மையில் கற்பனைக் கதைசொல்லி மறைந்த தீவைக் கண்டுபிடிப்பது, ஆழ்ந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்த தகவல்களின் மீதான புனைவு. இந்த நூலையும் நாம் Concept Literature என்றே சொல்ல வேண்டும்.
Caspian Tiger, காட்டில் ஒளிந்திருந்து துப்பாக்கியால் வேட்டையாடுவது, ரோமானியரின் ஆயுதங்களுடன் புலியை நேருக்கு நேர் சண்டையிட்டுக் கொல்வது என்பது போன்ற பல வேட்டைகளால் இன்று இந்த இனம் இல்லாமல் போய்விட்டது.
கொம்புக்குதிரை, பதினேழாம் நூற்றாண்டின் கட்டிடக்கலைக்கு சான்றாக இருந்த வில்லா, Boy in Blueவின் முதல் பிலிம்ரோல், கிரிஸ் நாட்டின் மிகச்சிறந்த பெண்கவிஞர் கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகள் முன் எழுதிய கவிதைகள், பதினான்காம் நூற்றாண்டின் Von Behr Palace, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரானிய மதத்தலைவரின் ஏழு புத்தகங்கள், ஜெர்மனியின் துறைமுகத்தில் இருந்த Oil Paintings, வாழ்நாள் சேமிப்பான புத்தகங்கள், ஜெர்மனியின் People Palace, Lunar Geography பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முதலியவை காலவெள்ளத்தில் அல்லது அதன் மதிப்பு தெரியாது அழிக்கப்பட்டவை.
வாழ்நாள் முழுதும் சேகரித்த புத்தகங்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டி அடுத்த தலைமுறையால் தூக்கி எறியப்படுதல் நமக்குப் புதிதல்ல. பன்னிரண்டு அழிவுகளை நிறைய ஆய்வுகள் செய்து புனைவாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வித்தியாசமான தொனியில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் அழிந்தது, யாருக்குமே தெரியாமல் போனது எவ்வளவு இருக்கும்!
ஜூடித்தின் மொழிநடை அல்புனைவுக்கு உபயோகப்படுத்தும் சரளமான மொழிநடை. தான் சொல்லவரும் விசயத்திற்கு நெருக்கத்தை ஏற்படுத்த பல கட்டுரைகளில் தன்மையில் கதைநகரும் யுத்தியைக் கையாள்கிறார். மிகவும் கலைநுட்பம் வாய்ந்த மொழிநடையை அப்படியே ஆங்கிலத்திற்குக் கொண்டு வந்த மொழிபெயர்ப்பாளர் பாராட்டுக்குரியவர். தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதேனும் Inventory of Lossesஐ எடுத்ததுண்டா?
https://www.amazon.in/dp/1529400791/ref=cm_sw_r_wa_apa_glc_fabc_V9JSBAXJ4B8J3FWM1BZ7