உறவுகளை நாம் ஒன்று Romanticize அல்லது Glorify செய்கிறோம். உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இப்போதுள்ள துணையைத் தேர்வு செய்வீர்களா? திரையுலகில் அடிக்கடி மணமுறிவு ஏற்படுதல், அங்கே கிடைக்கும் அபரிதமான வாய்ப்புகளினால். சந்தர்ப்பம் கிடைக்காத ஆஷாடபூதிகள் ஒருவில் ஒருசொல் ஒருஇல் என்றே சொல்வார்கள்.
வாழ்க்கைத்துணை என்ற ஒரு உறவு மட்டுமல்ல, எல்லா உறவுகளுமே பொறுமையின் எல்லையைத் தாண்டுகையில் கண்ணாடிப்பாத்திரம் போல் நொறுங்கிவிடுகின்றன. தனாவின் வில்லுவண்டி கதையின் முடிவு நம்மனதில் வெளித்தெரியாது உறைந்திருக்கும் குரூரம். படித்தான், வேலைக்கு சென்றான், மணமுடித்தான், குழந்தைகள் பெற்றான், பணிஓய்வு பெற்றான், பிள்ளைகளுக்கும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இறந்தான் என்பவன் எல்லோருக்கும் நல்ல மனிதன். வேலை போகிறது, சாப்பாட்டிற்கு வழியில்லை போன்ற சிரமதசைகளைக் கடக்கையில் உறவுகள் நிறமிழக்க ஆரம்பிக்கின்றன.
எதையும் எதிர்பாராது எல்லாவற்றையும் தாங்கிப் பிரியம் செலுத்தும் உறவுகள் அபூர்வமாக இருக்கின்றன. ஐந்து வருடங்கள் எதற்கும் உபயோகமில்லாமல் படுக்கையைவிட்டு நகர முடியாது போன்ற கடுங்காலத்தைக் கடக்கும் உறவுகள், விலகிச்செல்ல இருக்கும் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ளாத, எல்லாமே அபூர்வ உறவுகளே, ஆனால் பெரும்பாலான உறவுகள் அந்த பரிசோதனையைத் தாங்கும் வலு பெற்றிருப்பதில்லை.
Stockholm syndromeஐ நாம் அன்பான உறவுகள் என்ற கற்பிதத்தில் அகமகிழ்ந்து போகிறோம். இடையில் என்னிடம் நிறையப்பேர் இது எனது Soulmate என்று வேறு அறிமுகம் செய்திருக்கிறார்கள். நீண்ட கால மணவாழ்க்கையின் பின் முதலில் மனைவி இறந்தால் கணவன் அதிககாலம் உயிரோடிருப்பதில்லை. அதற்கும் அன்பின் ஆணிவேர் தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், நாம் வெவ்வேறு கிரகங்களில் இருக்கிறோம்.