முன்னுணர்தல்- யுவன் சந்திரசேகர்:
Clairvoyance பற்றிய கதைகள் ஏராளமாக வந்திருக்கின்றன. மம்முட்டியின் ஐயர் தி கிரேட் படம் கூட முழுமையாய் இதையே பேசும். யுவனின் மொழியில் இந்தக் கதையை படிப்பது சுகமாக இருக்கிறது. ஆனால் ஆதித்தகரிகாலன் கொலையை எச்சரிப்பது கதைக்குப் பொருந்தவில்லை. வேறு யாருக்கும் தெரியாது எனக்கு மட்டும் தெரிகிறது என்பதற்கு ஆரம்பத்தில் மாடியில் துணி காயப்போடுவதில் இருந்து, நாய்கள் உட்கார்ந்திருப்பதில் இருந்து ஒரு Gothic effectஐ கடைசிவரை கொண்டு செல்கிறார். ரசித்துப் படிக்கலாம்.
வீடு – வண்ணநிலவன் :
கட்சி வேலை என்று வருமானத்தைத் தொலைத்து கடைசியில் குடும்பத்தை நிர்கதியாக விட்டுச்சென்ற இளைஞர்கள் எத்தனையோ பேர். வீடெங்கும் குழந்தை வாடை, ஜூலியின் லாஜிக் போன்ற இடங்களில் வண்ணநிலவன் தெரிகிறார். யதார்த்தமான அவருக்கேயுரிய மொழிநடை. ஆனால் இது மட்டுமா வண்ணநிலவன்? இவருடைய போன கதை வாணவேடிக்கையில் ஏமாறுவதற்கும் இந்தக் கதைக்கும் என்ன வித்தியாசம்? ஒருவேளை நாம் தான் மனதில் நிறுத்திய தாவணிபோட்ட பெண்ணை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டுமோ, அறுபது வயதில் அந்த முகத்தைப் பார்ப்பது வீணோ?
கணக்கு – கே.ஜே. அசோக்குமார்:
விஜியின் உணர்வு சரியா இல்லை தவறா என்பதைப் பற்றிய கதையில்லை இது. ஒரு கோணத்தைக் காட்டி விலகிக் கொள்வது. ஜெயசீலியின் நெருக்கம் அருவருப்பை ஏற்படுத்துவது, R K திரும்பத்திரும்ப சார் சொன்னார் என்று அழுத்திச் சொல்வது, கடைசியில் RKயின் விஜியுடனான உரையாடல் எல்லாவற்றையுமே அலட்டிக் கொள்ளாத மொழியில் அழகாகக் சொல்லி இருக்கிறார் அசோக்குமார். ப்யூலா போல் வாழ்க்கையின் நிகழ்வுகளை சாதாரணமாகக் கடப்பவர்கள் யதார்த்தவாதிகள். ஒருவேளை R K ஆறடி உயரத்தில் ஆஜானுபாவாக இருந்திருந்தால் விஜிக்கு இதே உணர்வு வந்திருக்குமா? நல்ல Presentation.
வியாழன் – பிரபு மயிலாடுதுறை :
History repeats ஆனால் பன்னிரண்டு வருடம் வரலாற்றிற்கு குறுகிய காலம் அல்லவா? ஆட்டுவித்தார் பாடலின் இடையில் வரும் வரிகளே கதைக்கரு. வாளியிலேயே கண்டமா இல்லை Too much conincidences ஆ. ஆனால் வலியப்போய் செய்யும் உதவி சிக்கலில் தான் முடியும்.
பேய்வீடு- வர்ஜீனியா வுல்ப்- தமிழில் மதுரா;
நீங்கள் என்று அழைப்பது வாசகரையும் கதையில் சேர்த்துக் கொள்ளும் யுத்தி. சம்பவத்தை சொல்பவர்கள் இடையில் உணர்ச்சி வசப்பட்டு ” பெத்தவளை இந்த பாடுபடுத்திற நீ எல்லாம் மனுசனா” என்பதில் வரும் நீ கதைகேட்பவர் அல்ல. அடுத்து ஆவியைக் கடைசிவரை பார்க்கவேயில்லை, ஆரம்பத்தில் தூக்கத்தில் இருந்து முழிப்பது இறுதியிலும் அதுவே ஆகையால் ஆவி என்ற உணர்வு கூட கொடுங்கனவாக இருக்கலாம். நனவோடையுத்தியில் சொல்லப்படுவது கதையின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பு மதுரா, தொடர்ந்து செய்யுங்கள். பாராட்டுகள்.