Nadifa, Somalilandல் பிறந்தவர், Ishiguro ஐந்து வயதில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தது போல இவர் நான்கு வயதில் பிரிட்டனுக்குச் சென்றவர். இவரது முதல் இருநாவல்களும் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் பெற்றன. 2013 ல் சிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரிராகத் தேர்வாகியவர் இவர். லண்டனில் வசிக்கிறார். இவரது இந்த நாவல், இவ்வருட புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
1950 களில் நடந்த உண்மையான சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட புனைவு இந்த நாவல். Mahmood என்ற Somaliaவில் இருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த கறுப்பின மனிதன் மேல் சந்தேகத்தின் பேரில் கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது.
வெள்ளையினப் பெண்ணை மணந்து மூன்று குழந்தைகளைப் பெற்றவன். கறுப்பர் என்பது ஒரு குற்றம் என்றால் வெள்ளையினப் பெண்ணை மணந்தது இன்னொரு குற்றம். சந்தேகத்தில் மாட்டிக் கொண்டது அவனது துரதிருஷ்டம்.
1981ல் பிறந்த பெண் இந்த நாவலாசிரியர்.
நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலுமான பிரிட்டனை மீண்டும் எழுத்தில் கொண்டு வருவது எளிதான விசயமேயில்லை.. காவல்துறை விசாரணை, வழக்கை முன்கொண்டு செல்லுதல், நீதிமன்ற வழக்கு விசாரணை என்று எல்லாமே கடந்த காலத்தில் நடப்பதற்கு நிறையவே ஆய்வுகள் செய்ய வேண்டியதாயிருந்திருக்கும்.
Mahmoodஐ சுற்றியே கதை நகர்கிறது. இன்றைய உலகத்திலேயே கறுப்பராய் இருப்பது கடினம், நூறு வருடங்களுக்கு முன் அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள். இங்கே இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்ததையே, இந்த நாவலிலும் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆங்கிலேயரிடம் விசாரணை நடக்கும், முறையான Trial நடக்கும், சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எல்லா வாய்ப்புகளும் நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் ஆனால் தீர்ப்பை மட்டும் அவர்கள் முன்பே முடிவு செய்து விடுவார்கள்.
Dianaவின் அம்மா மேல் நடத்தை சரியில்லை என்று அவள் தந்தை குற்றம் சாட்டுகிறார். அவரது வார்த்தை மட்டுமே ஆதாரம். யூத இனத்தைச் சேர்ந்த அவர்களது உறவினர் எல்லோரும் அவளை மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். ஆங்கிலேய சமுதாயம் இன்று கூட ஆணாதிக்கம் நிறைந்த சமூகம்.
Nadifa முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர். அவருடைய அப்பாவும் இந்த நாவலின் கதாநாயகனைப் போலவே Sailor. அதனால் ஒரு முஸ்லீமின் மதநம்பிக்கைகள், சிந்தனைகள், மற்ற மதங்களைப் பார்க்கும் பார்வை முதலியவற்றை ஆழமாகச் சொல்ல முடிகிறது. மதத்திற்காக இறப்பவன் மட்டும் Shaheed இல்லை, அறியாத நிலத்தில் யார் என்று அறியப்படாமலேயே இறப்பவனும் Shaheed என்று குரானில் இருந்தே மேற்கோள் காட்ட முடிகிறது.
Nadifa Creative writing விரிவுரையாளராக லண்டனில் பணிபுரிபவர். அதனால் மொழியை எப்படி கையாள வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இதே நாவலை வேறொருவர் எழுதியிருந்தால் திரில்லர் போல் தோற்றம் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியத்தின் புதுக்குரல்களும் இனிமையாகத்தான் இருக்கின்றன.