காப்பு – பா. திருச்செந்தாழை:
வழக்கம் போல் திருச்செந்தாழையின் கதையில் கரைந்தேன். மொழிநடையின் வசீகரம் ஒரு கையையும், கதை இன்னொரு கையையும் இழுக்கத் திணறிப்போனேன்.
எவ்வளவு நுணுக்கமாக இவரால் கதை எழுத முடிகிறது! வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டுபெண்களின் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி. ஒரு கதாபாத்திரத்தை நல்லவிதமாகச் சொல்லி பின் அந்த பிம்பத்தை உடைப்பது பலரும் செய்தது, ஆனால் கடைசிப்பத்தி தூக்கிவாரிப் போடவைத்தது. திருச்செந்தாழை நிதானம் நிதானம் என்று பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் இதை உண்மையில் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நல்லா இருங்க திருச்செந்தாழை. தொடர்ந்து எழுதுங்க.
சீனன் சாமி- சித்துராஜ் பொன்ராஜ்-
சித்துராஜின் புறம் சார்ந்த விசயங்களை விவரித்து அந்தக் காட்சிக்குள் வாசகரைக் கொண்டு போய் சேர்ப்பதும், அகத்தைச் சுருக்கி எழுதி வாசகர்களை இட்டு நிரப்பச் செய்யும் யுத்தியும் நன்றாக இருக்கிறது. பாம்புக்கதை என்று எடுப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம், அது போல் LGBT கதை, சீனர்களின் வியாபார தந்திரம் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம். தலைக்கு மேல் கத்தி தொங்கும் இளஞ்சேரனின் உணர்வுகளையே நான் தொடர்ந்தேன்.
தமிழுக்குப் புதிதான கதைக்களம் இது, வாழும் ஊர் என்பதால் வெகு இயல்பாக வந்திருக்கிறது. சித்துராஜ் போல் அந்நிய மண்ணில் வாழ்பவர்கள் தமிழின் கதைக்களங்களுக்கு மேலும் வலு ஊட்டுகிறார்கள். இன்னொரு விசயம், இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் வாசிக்கும் நம்முடைய அதே உணர்வை அடைய முடியும்.
மார்ட்டினா- ப.தெய்வீகன்:
எறும்பு ஊர்வதில் ஆரம்பித்து அதிலேயே முடிவதற்குள் ஒரு கதை முடிந்து விடுகிறது.
அதிகம் வெளியில் தெரியாத வரலாற்று துரோகத்தின் பின்னணியில் கதை நகர்கிறது. 1952ல் இருந்து 1963 வரை ஆஸ்திரேலிய மண்ணில் பிரிட்டன் நடத்திய அணு ஆயுதச் சோதனைகள் பற்றிய தகவல்களை கதை படித்தபின்னரே தேடிப் படித்தேன். ஆதிக்குடிகளை இடம்பெயரச் செய்வது அநேகமாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெகுவாக நிகழ்ந்திருக்கிறது.
மார்ட்டினாவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டிருப்பதால் கதைசொல்லிகள் மற்றவர்களாக இருப்பது நல்ல யுத்தி. அதே போல் யாருடைய நிலத்திற்கு யார் குடியுரிமை தருவது என்ற கேள்வியும் எல்லாக் காலங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். முன்னும் பின்னும் நகர்ந்து ஒரு சோகத்தை முழுமையாகப் பதிய வைக்கும் கதை.
மதி நோக்கி அலர் விரித்த ஆம்பல்- லோகேஷ் ரகுராமன்:
ஒரு காத்திருப்பும் பின் அது முடிவதையும் சொல்லும் கதை. இரண்டு வேறுபட்ட குணாதியங்கள் கொண்டோர் இணைவதே எப்போதும் வாடிக்கை. முதலில் நனவோடையாக விரியும் கதை, அவளது Nostslgiaவைப் பற்றி மட்டுமே சொல்கிறது. அதே போல் அவன் குறித்தும் எந்தப் பின்னணியும் இல்லை. ஒருவேளை அவன் மணமானவனாகக்கூட இருக்கலாம். சங்கப் பாடல்களில் வருவது போல் தலைவி, தலைவன் என்பதைத் தாண்டி வேறு அடையாளங்களும் கூறப்படவில்லை. கதை வசீகரமாக இருக்கிறது.
எட்வர்ட் லீவர்ட் வரும் போது – தீஷா ஃபில்யாவ்- தமிழில் அனுராதா ஆனந்த்:
கருப்பினப் பெண்ணின் உரத்த குரல் இந்தக் கதையில் ஒலிக்கிறது. அம்மா- மகளின் Difficult relationship உலகம் முழுதும் தீராத பிரச்சனை. அது போலவே அம்மாவிற்கு மகளை விட மகனிடம் இருக்கும் பிரியம்.
Alzheimer நோயால் இளமைக்காலத்தை விட்டு வெளியே வராத அம்மாவின் உணர்வுகள் மற்றும் அவளின் கதை அழகாகச் சொல்லப்படுகிறது. The Seven Husbands of Evelyn Hugoநாவலில் ஏராளமான உறவுகள் வைத்திருந்த போதும் உண்மையில் காதலித்தது ஒருவரைத் தான் என்று நடிகை சொல்வது போல் அம்மாவும் ஒரு காதலை சுமந்திருக்கிறாள். இந்த ஆசிரியர் சிலகாலமாக என் TBRல் இருக்கிறார். அனுராதா அதை நினைவுறுத்தி இருக்கிறார் இந்தக் கதை மூலம். மிகவும் திருத்தமான மொழிபெயர்ப்பு ஒரு அமெரிக்கக் கறுப்பினக் கதையைப் படிக்கும் உணர்வே வரவில்லை. பாராட்டுகள் அனுராதா.
இரட்டை இயேசு – விஜய ராவணன்:
முரகாமியின் கதை போல் ஆரம்பித்து பின் பாதைமாறிப் படுவேகம் கொள்ளும் கதை. விஜய ராவணன் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார். கொரானா காலத்தில் வெளிநாட்டில் மாட்டிக் கொள்பவர்களின் உணர்வுகள் நடுவே இரண்டு கதைகள் வருவது நல்ல யுத்தி. சுவாரசியமான கதை.
டாக்கூரின் கிணறு – முன்ஷி பிரேம்சந்த்- தமிழில் கயல்:
சமூகப்பிரச்சனைகளைச் சொல்லும் பிரேம்சந்த் கதைகள். இந்தக் கதையில் தீண்டாமை, தாகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறது. பிரேம்சந்த் ஹிந்தி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஆனால் அவரைத் தாண்டி நாம் இப்போது வெகுதூரம் வந்துவிட்டோம். கயலின் மொழிபெயர்ப்பு மிக அருமை.
டாக்கூரின் கிணறு – முன்ஷி பிரேம்சந்த்
கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்:
சிக்கலில்லாத மங்கையர் மலர் கதை. இறந்தவர் ஆவி அக்காவின் மேல் வந்து உண்மையைச் சொல்லி, திருத்தவும் செய்வது Interesting.
இரவானால் – ஐசக் பேசில் எமரால்ட்:
Dystopian story ஒன்றை Surreal techniqueல் சொல்லும் கதை இது. ஐசக்கின் மொழிநடை நன்றாக இருக்கிறது. சர்ரியல் என்பது Realityஐ இன்னொரு வகையில் சொல்வது என்பதைப் புரிந்து சொல்லப்பட்ட கதை. உணர்ச்சிகளை அழுத்தமாகச் சொல்ல சர்ரியல் காட்சிகளை கொண்டு வந்திருக்கிறார். Doomsdayல் மிஞ்சியவர்களின் கதை.