ஆசிரியர் குறிப்பு:
சமகாலப் படைப்பிலக்கத்தில் கட்டுரைகளும், கதைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன் புதுக்கோட்டையில் பிறந்தவர். நுண்ணியிரியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இருமுனை, டார்வின் வால் என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவரும் கதீட்ரல் இவரது முதல் நாவல்.
டால்ஸ்டாயின் War and Peace வரலாற்று நாவல் (Historical Novel). Edward Rutherfurdன் Paris வரலாற்று நாவல். வரலாற்று நாவலை எழுதுவதற்கு ஏராளமான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கும். கதையின் காலகட்டமும் அதில் வரும் சமூகமும் அப்படியே நிதர்சனத்தைப் பிரதிபலித்துக் கதையில் மட்டும் சற்றே புனைவு. Markus Zusakன் Book Thief வரலாற்றுப்புனைவு நாவல் (Historical Fiction)இதில் காலகட்டம் மட்டும் உண்மை, நாவலின் Setting உண்மை, மற்றதெல்லாம் புனைவு. Historical Fantasy என்பது காலத்தைத் தவிர மற்றதெல்லாம் புனைவு. ஆங்கிலத்தில் Outlander series historical fantasy. தமிழில் தாண்டவராயன் கதை, Historical Fantasy. தூயனின் இந்த நாவலும் Historical Fantasyவகைமையைச் சார்ந்தது.
இந்தியத் தந்தைக்கும், ஆங்கிலத்தாய்க்கும் பிறந்த, நுண்ணுணர்வு கொண்ட அவந்திகை, பழங்குடிகளின் எஞ்சிய துளியாக எமிலி, உளப்பகுப்பாய்வு நூலை எழுத இந்தியா வரும், மனஅழுத்தம் மிகுந்த கடந்த காலத்தைத் தாண்டிய நீட்ஷன், சாபம் கொண்ட குடும்பத்திலிருந்து வெளிவந்த கூத்துக்கதையைச் சொல்லும் ஆப்ரஹாம்
இவர்கள் அனைவரையும் விதி ஒன்றாக ஒரு காரியத்துக்காக சிலநாட்கள் ஒரே இடத்தில் இருக்கவைப்பதும், அது தொடர்பான சம்பவங்களுமே கதை.
நாவலின் கணிசமான பகுதி அவந்திகையின் மனக்கிலேசமான திருட்டைச் சுற்றியே நகர்கிறது. இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய எல்லா வார்த்தைகளுமே எங்கோ படித்தது இல்லை கேட்டது தானே. சிந்தனையில் வருவதால் நம்முடையது என்று நினைத்துக் கொள்கிறோமா? நாவல் வேறு திருட்டுகளைப் பற்றியும் பேசுகிறது.
ஆங்கிலக் காலனியாதிக்க காலத்தில் நடைபெறும் இந்த நாவலில் மேலைச் சிந்தனைகளும் இந்தியத்தத்துவ மரபும் இடைவிடாது ஒரு உரையாடலை நடத்திக் கொண்டே இருக்கின்றன. இரண்டின் கலவையான பிரதிநிதியாக அவந்திகை.
தூயனின் மொழிநடை இது போன்ற நாவல்களை எழுதுவதற்கு மட்டுமன்றி, புனைவுவெளியின் எல்லைகளை வாசகர்கள் அவரவர் விருப்பம்போல் விரித்துக்கொள்ளும் வண்ணமும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே தாண்டவராயனில் அசகாயப் பாய்ச்சலை இதே போன்ற கதைக்களத்தில் பா.வெங்கடேசன் நிகழ்த்தி இருந்தாலும், தூயனின் மொழியும், உள்ளடக்கமும் முற்றிலும் வேறானதாக இருப்பதால், இது தமிழுக்குப் புதியவரவே.
Fantasy கதைகளின் சாத்தியங்களைத் தூயன் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனாலும் அடிப்படை உண்மைகள் எந்த Genreலும் மாறுவதில்லை. காற்றிருக்கும் அறைக்குள் புதிய காற்று அதிவேகத்தில் நுழைகையில் பழைய காற்று வெளியேறும். எல்லா Architectureம் இந்த விதிக்குக் கட்டுப்பட்டது தானே. அடுத்தது எமிலி, அந்தப் பிரதியை வேகமாக வாசித்துப் பின் மீண்டும் வாசித்து என்று வந்த பின்னர், எமிலி வாசிக்கவில்லை என்று வருவது இடைஞ்சல் செய்கிறது. ஆனால் கதையின் பிரும்மாண்டம் இது போன்ற சிறுகுறைகளை கவனிக்காது கடக்க வைத்து விடுகிறது. கதையின் ஒரு பாத்திரம் , நடப்புக்கதையை சொல்வதாகச் செய்திருப்பது நல்ல யுத்தி மட்டுமல்ல, ஒரு Open endingக்கு வழிவகுக்கிறது. தவறாது படிக்க வேண்டிய நாவலிது. நிதானமாக, கூடுமானவரையில் ஒரே அமர்வில் இந்த நூலைப் படிப்பது, அதிகபட்ச வாசிப்பின்பத்திற்கான வழி.
நாவல்கள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ. 220.