ஆசிரியர் குறிப்பு:
ஈழத்தின் பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். கவிதை எழுதுவதில் ஆரம்பித்த இவரது இலக்கியப் பயணம், பீலிக்கரை, பாக்குபட்டை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடனும் கட்டுபொல்
என்ற நாவலுடனும் தொடர்ந்திருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பும், தமிழகத்தில் வெளிவரும் முதல் நூலுமாகும்.
நேரடிக் கதைசொல்லலில் இருந்து சற்றே விலகியிருப்பவை பிரமிளாவின் கதைகள். பெண்களின் அகஉணர்வை கதைகளில் அழகாகச் சித்தரிப்பவர்களில் இவரும் ஒருவர். ஈழத்தில் மலையகத்தின் கலாச்சாரம் தனி. மலையகத்தின் மகளான பிரமிளா, தன்னுடைய கதைகளில் அடிக்கடி அந்தப் பிரதேசத்து மலையும் காடுமான நிலவர்ணனையும், பிரத்யேகமான பிரச்சனைகளையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
Metaphors இவரது கதைகளில் அடிக்கடி வெகு சாமர்த்தியமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அரசமரததடியில் புத்தர் சிலையுமில்லை, பிள்ளையார் சிலையுமில்லை. அரசஇலை பெண்ணுடலின் பாகம் என்று திசை திருப்பப்படும் கதை, கடைசியில் காவிநிற உடும்பு உருவகமாக வருகையில் பூரணத்துவம் பெறுகிறது. தலைப்புக் கதை முழுவதுமே உருவகக்கதை. புதிய யுத்தி.
Arranged marriageகளின் ஆயபயன்களைச் சொல்லும் கதை.
அடுத்ததாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைக்கருக்கள். ஜில் ப்ராட்லி கதை தமிழுக்குப் புதியது. சிங்கள-தமிழ் இனவெறுப்பைச் சொல்லி, அகண்ட கான்வாஸ்ஸான சர்ரியல் ஓவியங்களுக்குச் சென்று எதிர்பாராத முடிவை சென்றடைகிறது. அவள் பழைய காதலனை வேண்டாம் என்று சொல்வதில் இருந்து, சிவநேசனிடம் வலிய முழுதாகப் பார்க்க வேண்டுமா என்று கேட்பதில் இருந்து கதை முழுதும் வேறு தளத்தில் நகர்கிறது. அது போலவே மாட்டியா, உரப்புழுக்கள், புத்தனின் சிசுவல்ல போன்ற கதைகள். Gender வேற்றுமை அடையாளமே தெரியாது எழுதும் வெகுசில பெண் எழுத்தாளர்களில் பிரமிளாவும் ஒருவர். கதைக்குத் தேவைப்படும் இடத்தில் கெட்ட வார்த்தை சொன்னான் என்று எழுதாமல், Profanityஐ உபயோகிப்பதில் தவறில்லை.
பதினோரு கதைகள் கொண்ட தொகுப்பின் அநேகக் கதைகளிலுமே மையக்கதாபாத்திரம் பெண் தான். ஜில் ஒரு Extreme என்றால், காடு கதைப் பெண் இன்னொரு துருவம், அல்லிராணி இன்னொரு Extreme. பழையனூர் நீலி கூட ஒரு கதையின் பாத்திரம். பரிமளமும் சுரேகாவும் சூழ்நிலைக் கைதிகள் என்றால் மாயாவும், அல்லிராணியும் சூழலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்பவர்கள்.
ஒடுக்கப்படும் பெண்ணின் காமம் ஓரிரவு, ஆணின் காமம் மாட்டியா, நிகழ்வு ஒன்று, எதிர்வினைகள் இரண்டு.
பிரமிளா அதிகமாக எழுதுபவர் இல்லை. ஒவ்வொரு கதைக்கும் கால இடைவெளி எடுத்துக் கொள்பவர். அல்லிராணியே கடைசிக்கதையாக இருக்க வேண்டும், எனில் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது.
வார்த்தை சிக்கனம் இவரது பெரும்பாலான கதைகளில் கையாளப்பட்டிருக்கும். வாசகர் விஸ்தரித்துக் கொள்ள இடைவெளிகளை வேண்டுமென்றே கதைகளில் விட்டிருப்பார்.
இந்தத் தொகுப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகச்சிறப்பான அறிமுகமாக இருக்கும். சில மணிநேரம் விரும்பித் தொலையலாம் இந்தக் கதைகளில்.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஸர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.150.