ஆசிரியர் குறிப்பு;
ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். அமீலா, பெய்யென பெய்யும் வெயில், காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி, தாமரைக்குள ஞாபகங்கள் முதலியன இவரது வெளிவந்த நூல்கள்.
தொகுப்பின் முதல்கதை ” அவனை எனக்குத் தெரியாது’, கடந்த ஐந்து வருடங்களில் தமிழில் வெளியான சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சிறுகதை எழுதுவது எப்படி என்று கற்றுத்தரும் யாரும், சிறுகதையில் மூன்று Flashback நிகழ்வுகளைச் சேர்க்கப் போகிறேன் என்றால் அவசரமாக வேண்டாம் என்பார்கள். ஆனால் இந்தக் கதையின் அடியாழத்திற்கு வாசகரைக் கூட்டிச் சென்று
மூச்சுமுட்ட வைக்கவே அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. ராணுவத்தில் பணியாற்றியவர்கள், Sniper எல்லாம் வெளியில் வந்த பின் வாழ்வாதாரத்திற்காக வேறு பணிகளை ஒப்புக்கொள்வது இயல்பு. ஆனால் விடுதலைப்புலி ஒருவன் அதையே செய்கையில் என்னவாகும்? The more you avoid something the more it will come close to you என்பது இங்கே துவக்கு. Nusa Island என்பது Execution Island என்று இருப்பதை சாமர்த்தியமாகக் கதைக்கு உபயோகித்திருக்கிறார். அதே போல் ஒரு பெண்ணின் நெருக்கம் மனமாற்றத்திற்குக் காரணமாவது, 3/9 என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்வது. ஆனால் முடிவு அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் எளிதில் மறந்து போக முடியாதது. நல்ல கதைகள் சிலநேரங்களில் நிம்மதியை இழக்கச்செய்பவை.
வென்றவர்கள் சொல்வதே உண்மை அதுவே பின்னாளில் வரலாறாக மாறும். தோற்றவர்களுக்கு முகம் மட்டுமல்ல குரலும் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள், உயிர் பிழைத்து வேறுநாட்டுக்குப் போனாலும் போர்க்களத்தில் மரணித்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும் என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது. அவனை எனக்குத் தெரியாது, பொதுச்சுடர், மகள் கதைகள் வேறு, முடிவுகள் வேறு ஆனால் மரணம் சிலநேரங்களில் ஆறுதல்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆதிக்குடிகளை விரட்டிவிட்டு நகரங்களை அமைத்தவை. அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்களை சரித்திரச்சாட்சியுடன் சொல்லும் கதைகள்
மார்ட்டினா, ஆழியாள். மகாஸ்வேதா தேவி இந்தியாவில் பழங்குடிகளுக்கு நேர்ந்த அக்கிரமங்கள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.
இருள்களி போல அநேகமான கதைகளில் ஈழம், வாழ்வில் கடந்து சென்ற பகுதியாகவும் ஆஸ்திரேலியா நிகழ்காலமாகவும் வருகின்றன. ஹிமாரி சொல்வது போல் நம்நாட்டில் வாழும் வரைக்கும் தான் நம் அடையாளம் நமது அகங்காரம். அந்நியநாட்டில் அகதியாகலாம், நிரந்தரக்குடியுரிமைகூடப் பெறலாம். ஆனால் ஒருநாளும் நாம் அவர்களாக முடியாது. தெய்வீகனின் கதைகளில் பல இதையே மீண்டும் நினைவுறுத்திப் போகின்றன.
நகைச்சுவை தெய்வீகனுக்கு மிக இயல்பாகவே வருகிறது. தராசு முழுக்கவே பகடிக்கதை. சத்தமில்லாமல் எல்லாவற்றையுமே கிண்டல் செய்கிறது. வார்த்தைகளின் தேர்வு இவருக்கு நுட்பமாக இருக்கிறது. பொதுச்சுடர் கதையின் கடைசி இரண்டு வரிகள், எப்பேர்ப்பட்ட சரிவை அலட்டாமல் சொல்கின்றன. இது இவரது கதைகள் முழுதும் விரவி இருக்கும் சமாச்சாரம். அதே போல் பிரிட்டன் குண்டு வெடித்தது வரலாறு, Nusa Islandல் போதைக் கடத்தல்காரர்களை Firing squad கொன்றது வரலாறு. எனவே கதைகளுக்கான களங்களை இவர் கவனமாக அமைத்துக் கொள்வது தெரிகிறது. புலம்பல் இல்லை, பிரச்சாரம் இல்லை, மிகைஉணர்ச்சிகள் இல்லை என்றாலும் இவையெல்லாம் செய்வதைவிட அதிக தாக்கங்களை இவர் கதைகள் அளிக்கின்றன. இலக்கியம் எப்போதும் அப்படித்தான், கதைகளைப் படித்தபிறகும் முடியாது நம்முடன் சிறிது காலமேனும் பயணித்துக் கொண்டிருக்கும்.
பிரதிக்கு:
தமிழினி 86672 55103
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ.190.