ஆசிரியர் குறிப்பு:
லங்கேஷ்பாரதி, ஷான்பாக் புத்தகங்கள் உட்பட பலநூல்களைக் கன்னடத்திலிருந்து இருந்து தமிழுக்கும், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையையும், பெருமாள் முருகனின் பூக்குழி உட்பட சில நூல்களை தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்தவர். தி.ஜாவின் சில சிறுகதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு மொழியில் இலக்கியம் வளர்கிறது என்றால் பெண்கள் அதிகம் எழுதுவதும் ஒரு அறிகுறி. குடும்ப சென்டிமென்ட் கொண்ட மங்கையர் மலர் வகையறாக் கதைகளை அல்ல, அம்பை பாணிக் கதைகள். கனடாவில் முக்கிய எழுத்தாளர்கள் என்றால், முதலில் விரலை மடிக்கும் பெயர்கள் Atwood , Alice Munro. பத்து கதைகள் அடங்கிய தொகுப்பில் நான்கு பெண் எழுத்தாளர்களின் ஐந்து கதைகள்.
தொகுப்பாசிரியர் அநேகமாக பரிசு வென்ற அல்லது நல்ல வரவேற்பைப் பெற்ற கதைகளை மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆகவே இந்த தொகுப்பு சமகால கன்னடச்சிறுகதைகளின் ஒரு சோற்றுப்பதம். ஒன்பது ஆசிரியர்களின் கதைகளில், ஒரு கதை கூட நேர்க்கோட்டில் நகரும் யுத்தியில் சொல்லப்படவில்லை.
Happily lived ever after என்று முடியவில்லை.
கதைக்களங்களும் Contemporary world literatureஐ ஒட்டியே இருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், கன்னட அடையாளத்தை இழக்கும் Global தன்மை கொண்ட கதைகள்.
மறதிக்கு என்ற பெயரில் தி.ஜா ஒரு கதை எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட அதில் நடக்கும் சம்பவம் தான் சாந்தி கே அப்பண்ணாவின் பயணம் கதையிலும். ஆனால் இரண்டு கதைகளுக்கும் நடுவில் ஒரு பெரிய கலாச்சார மாற்றம் சத்தமில்லாமல் நிகழ்ந்திருக்கிறது. மறதிக்கு ஜனகத்தின் மீது இன்னும் பரிதாபம் மேலிடுகிறது. பாவம் சற்று முந்திய காலத்தில் பிறந்து விட்டாள். சாந்தியின் இன்னொரு கதை தோள்களும் சொல்ல வேண்டிய விசயங்களை நுட்பமாகச் சொல்லி முடிகிறது.
மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் சுபதாவின் கதை முழுக்கவே உளவியல் கதை. குடும்பம் ஏற்படுத்தும் Suffocationsஐச் சொல்லும் கதை.
ஐம்பது ஆண்டுகளாக கதை எழுதாத ஸ்ரீகாந்தாவின் அறுபதுகளில் வந்த கதையை சென்ற மாதம் வெளியான கதை என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள். கிருஷ்ணமூர்த்தி சந்தரின் அலட்டல் இல்லாத Casual tone அந்தக் கதையை நல்ல கதையாக்கி இருக்கிறது. மார்க்வெசின் கதைகளை கன்னடத்திற்கு மொழிபெயர்ப்பு செய்த ஜெயஸ்ரீ காசரவள்ளியின் கதையில் தவிர்க்க முடியாமல் அவர் சாயல் தெரிகிறது.
ஜெயஸ்ரீ தேஷ்பாண்டேயின் பெண்ணிய சாயல் தெரியாது எழுதப்பட்ட பெண்ணியக்கதையும் நன்றாக வந்துள்ளது.
ராகவேந்த்ர கசினீசாவின் நான் கொன்ற பெண் கதை முழுக்கவே Unreliable narrator சொல்லும் கதை. இந்தக் கதையின் Narrator ஒரு மனச்சிதைவு அடைந்தவர்.பூனைகள் உண்மையில் இல்லை அவை Metaphor ஆகவே முழுதும் வருகின்றன. Lust, possessiveness, Jealous எல்லாமே மிகவும் அடங்கிய Toneல் கதைமுழுக்கச் சொல்லப்படுகின்றன. கதைசொல்லி தான் நம்பவிரும்புவதையே கதையாகச் சொல்வதும், வாசகர்கள் Parallel ஆக ஒரு கதையை உருவாக்கிக் கொள்வதும் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன.
அது போன்ற ஒரு முயற்சி இது.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு அதிக நூல்களை மொழிபெயர்த்தவர் அநேகமாக கே.நல்லதம்பியாகத்தான் இருக்க வேண்டும். வேகத்துடன் கலந்த நேர்த்தி. பாரம்பரியக்கதை சொல்லலில் இருந்து விலகிய சிலகதைகளை எளிதாகத் தமிழில் படிக்கும்படியான மொழிபெயர்ப்பு. வாசகர்கள் மட்டுமன்றி வளரும் எழுத்தாளர்களும், அண்டை மாநிலத்தின் சமகால இலக்கியத்தை அறியச்செய்யும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு. Undoubtedly, a book not to be missed.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.180