பியற்றிஸ் லம்வாகா:
ஆப்பிரிக்காவின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர். உகாண்டாவைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். உகாண்டா பெண்களின் கதையை ஆவணமாக்கி வருகிறார்.
எம்.ரிஷான் ஷெரீப்:
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர்.
சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தொடர்ந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறார்.
மொழிபெயர்ப்புக்காகப் பல விருதுகளைப் பெற்றவர்.
லம்வாகாவின் முதல் கதையை ரிஷான் மொழிபெயர்த்ததில் இருந்து, இந்த எழுத்தாளரைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அதற்குள் தொகுப்பாகத் தமிழில் வந்துவிட்டது. ஏராளமான புத்தகங்கள், குறைவான ஆயுள், One Life is not enough.
உகாண்டாவின் சின்ன கிராமத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த விசயங்களே கதைகள். ஒரு டயரியின் வெவ்வேறு பக்கங்கள். போராளிகள் வீட்டுக்கு வந்து தண்டல் வசூலிக்கிறார்கள்.
சின்னப்பெண் கடலை விற்றுவரச்சென்ற சந்தையில் குண்டு வெடிக்கிறது. அவள் இறந்திருந்தால் அவளது உடல்பாகங்களை அள்ளி எடுத்துவர சாக்குப்பையுடன் அவள் அம்மா செல்கிறாள்.பள்ளியில் படிக்கும் மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, போருக்கு பயன்படுத்துகிறார்கள்.
உண்மை சம்பவங்களை கதைகளாக்கும் போது மொழியின் பலம் இன்றியமையாதது. அது இவருக்கு இயல்பாகவே வந்திருக்கிறது.
உகாண்டா மனிதஉரிமை மீறல்களுக்குப் பேர் போனது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரே ஜனாதிபதி. கொலை, கொள்ளை சர்வசாதாரணம். உகாண்டா மட்டுமல்ல ஆப்பிரிக்கா முழுவதிலுமே பெண்கள் இரண்டாவது குடிமக்கள். Turbulent உகாண்டாவில், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளே கதைகளாக வந்திருக்கின்றன. அநேகமாக எல்லாக் கதைகளிலும் மையக்கதாபாத்திரம் பெண்ணாக இருப்பதால், பெண்களின் குரலை தன் கதைகளில் இவரால் உரத்து ஒலிக்க வைக்கமுடிகின்றது.
உகாண்டாவின் மக்கள் வாழ்க்கை, நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்கள் போன்ற Culture குறித்த ஏராளமான தகவல்கள் கதைகளுக்குள் விரவிக் கிடக்கின்றன. முட்டையை மிதித்தால் ஒரு பெண் மீண்டும் தூய்மையாகி விடுவாள், மூதாதையரின் சடங்குகளை ஒழுங்காக நிறைவேற்றாவிட்டால் துன்பம் வந்து சேரும்,
ஆண்கள் சமைத்தால் ஆணுறுப்பு தீயில் வெந்துவிடும் என்பது போன்ற நம்பிக்கைகள் ஆப்பிரிக்கா சமூகத்தைப் பற்றிச் சொல்கின்றன.
Female genital mutilation என்பது ஆப்பிரிக்கா போன்ற ஆணாதிக்க சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம். அவளுக்குத் தனியாக உணர்வு என்று ஒன்று இருக்கக்கூடாது, ஆண்கள் குடித்து மகிழ்கையில் அல்லும் பகலும் அவள் கடின வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும், ஆண் அழைக்கையில் திருப்திபடுத்த வேண்டும் என்று கற்கால வாழ்க்கைகை பெண்கள் வாழ்வதைக் கதைகள் சித்தரிக்கின்றன.
பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் ஒன்பது கதைகள் ஒரே கதையின் வேறுவேறு நிகழ்வுகள். கடைசி மூன்று கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. மாறுபட்ட அரசியல் நோக்குக்கு வித்தியாசமான பழிவாங்கல்.
கடைசிக்கதை நூறுசதவீதம் தமிழ் இலக்கியச்சூழலுக்குப் பொருந்தும் கதை. ஒவ்வொரு வரியும் இங்கே நடந்திருப்பது.
பெண்களின் கண்ணோட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தேசத்தில், ஆண்கள் தங்களது அடிமைகள் என்று பெண்களைக் கருதும் சூழலில், அவர்களது உணர்வுகளை இந்தக் கதைகள் சொல்கின்றன. தண்ணீர் சுமந்து வருபவன் ஆண்மகனல்ல என்ற சிந்தனை வருமளவிற்குப் புரையோடிய சமூகம். தலைப்புக் கதை, பெண்ணின் உடலில் ஒரு பாகம் போய்விடுவதால் ‘C’ என்ற எழுத்து Missing என்பதை implicit ஆகச் சொல்கிறது.
ரிஷானின் மொழிபெயர்ப்பு தெளிந்த நீரோடை போன்ற மொழியில், லம்வாகாவை நமக்கு நெருக்கமாக உணரவைக்கிறது.
இலக்கியம் என்பதே முன்பின் தெரியாதவர் தெரிவிக்க விரும்பும் உணர்வை அவர் அதிகமாகச் சொல்லாமல் நாம் புரிந்து கொள்வதுதானே.
பிரதிக்கு :
வம்சி புக்ஸ் 9445870995
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.200.