ஓல்கா போலந்தில் 1962ல் பிறந்தவர். இவரது நாவல்கள் நூற்றாண்டுகள், கண்டங்கள், புராணங்கள், அசல் உலகம் எல்லாவற்றையும் தாண்டிப் பயணம் செய்பவை. போலந்தில் பெரிதும் மதிக்கப்படும் இவர் 2018ல் புக்கர்விருதை வென்ற பிறகே உலக வாசகர்களுக்குப் பரவலாகத் தெரிய வந்தார். அதே ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல்பரிசை இவர் 2019ல் பெற்றதில் இருந்து இவரது படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டு வருகின்றன. கிண்டில் பக்க அளவில் 1137 பக்கங்கள் இருக்கும் இந்த நாவல் 2022 புக்கரின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பதினேழாம் நூற்றாண்டில் கதை தொடங்குகிறது. இது புராதன போலந்து நாட்டின் மறக்கப்பட்ட கதை. யூதர்களுக்கு ஒரு மதம் இருந்தது, மொழி இருந்தது, உடை இருந்தது, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இருந்தது, சட்ட திட்டங்கள் இருந்தது, கட்டுக்கோப்பாக ஒரே குழுவாக இயங்கும் கூட்டு மனநிலை இருந்தது ஆனால் அவர்களிடம் இல்லாதது யூதர்களுக்கான தனிநாடு. போலந்தில் இருந்த யூதர்கள் வலுக்கட்டாயமாக கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கு நடுவே சுல்தான்கள் இஸ்லாமிற்கு மாறாவிடில் கொல்லப் போவதாக மிரட்டுகிறார்கள். அவர்களுக்காக ஒரு Messaiah இப்போதைய யுக்ரேனில் பிறந்து வருகிறான். இது Jacobன் கதை மட்டுமல்ல. பதினெட்டாம் நூற்றாண்டின் போலந்தின் கதை.
நாவலில் வாசகர்கள் நான்குவிதம் என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக நுரைப்பஞ்சு வாசகர். எல்வற்றையும் உறிஞ்சிக் கொள்வார்கள், ஈரம் நாள்கழித்து வெளிவருவது போல, காலம்கடந்தும் வாசித்ததை நினைவுகூர்வார்கள், ஆனால் அவர்களால் எது முக்கியம் என்பதைப் பிரித்துணர முடியாது. அடுத்தது புனல் வாசகர்கள். எல்லாம் உட்செல்லும் அதே வேகத்தில் வெளியேறிவிடும். வடிகட்டி வாசகர்கள் வண்டலை மட்டும் தக்க வைத்துக் கொள்வார்கள். சல்லடை வாசகர்கள் உமியை வெளியே தள்ளி, தானியத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.
ஏழு பாகங்களாக, ஐம்பது வருடங்களின் கதையைச் சொல்லும் நாவலில் யூதர்களின் மதம், கிருத்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் கருத்துகள், மாயை, இறப்பு, யூதர்களின் பாதுகாப்பின்மை, நெறிமுறைகள் போன்ற நூற்றுக்கணக்கான
topics, ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள்
என்று விரியும் நவீன காப்பியம் இந்த நூல்.
பல கதைகள் கடிதங்கள், மேப், ஆவணங்கள், கவிதைகள் மூலமாகச் சொல்லப்படுகின்றன. Jacobன்இறந்த பாட்டியும் கதை சொல்கிறாள். அவள் நாவலின் முக்கியமான கதாபாத்திரம்.
Jacobன் கதையை அவன் சொல்வதில்லை. பலரும் சொல்கிறார்கள். குறிப்பாக அவன் தோழனும், சீடனுமாகிய Nahman சொல்கிறான். ஆனால் கதையின் நடுவே Nahman எதையுமே உயர்வுநவிற்சியுடன் சொல்வதாக உதாரணத்துடன் ஒரு சம்பவம் வருகிறது. Jacob ஒரு புனிதரா, தீர்க்கதரிசியா இல்லை Con manஆ? ஓல்கா எந்த சார்புநிலையும் எடுக்கவில்லை, நாவலில் பல கதாபாத்திரங்கள் Jacobக்கு ஆதரவாகவும், எதிராகவும் அவர்களது கருத்துக்களைச் சொல்கிறார்கள். உயரமாக, அழகாகத் தோற்றப்பொலிவுடன் இருந்தால்
அவன் தலைவன் என்பது எல்லாக் காலகட்டங்களிலும், எல்லா நாடுகளிலும் நம்பப்படுகிறது.
இந்த நாவலை உருவாக்குவதற்கு முன் ஒரு Shelf நிறைய Jacob Frank குறித்த வரலாற்று நூல்களைப் படித்து, முக்கியமான சம்பவங்கள், உண்மைகளைத் தனியாக எழுதிக் கொண்டார். Antique booksல் இருந்தும் குறிப்புகள் எடுத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான புகைப்படங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டார். கதைக்காக ஏராளமான பயணங்கள், நாவல் நடக்கும் பகுதிகளில் எல்லாவற்றையும் பார்வையிட்டிருக்கிறார். Podalia, Ukrainன் பல கிராமங்கள், இஸ்தான்புல் போன்ற பல இடங்கள். ஆறுவருடங்கள் இந்த நாவலுக்கு எடுத்துக்கொண்டு 2014ல் போலிஸ் மொழியில் முதன் முதலாக இந்த நாவல் வெளிவருகிறது. நோபல்கமிட்டி இந்த நூலை இவருடைய Magnum opus என்று குறிப்பிட்டிருக்கிறது.
Jacob ஒருசிக்கலான கதாபாத்திரம். யூதராகப் பிறந்து பின் இஸ்லாமை ஏற்றுப்பின் கத்தோலிக்க மதத்திற்கு மாறி என்று மதவிசயத்தில் மட்டுமல்ல, பெண்கள் விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பலவீனம், பணவிசயத்தில் ஏமாற்று என்று இத்தனையும் இருந்தாலும் ஒரு பெரியகூட்டம் அவனைப் பின்பற்றக் காரணம், அவன் பேசிய எளிமையான மொழி, மக்களின் மொழி. பல குருக்கள், புனிதநூல்கள் போல கடினமான மொழியை உபயோகிக்கவில்லை.
தீவிர ஆய்விற்குப்பின் Facts மற்றும் Fiction இரண்டும் கலந்து, வரலாற்றுச் சம்பவங்கள், இடங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு, ஏராளமான கருத்தாங்களை மதநூல்களில் இருந்தும், பிறநூல்களிலும் இருந்தும் எடுத்து, ஆற்றொழுக்கு போன்ற வேகமான மொழிநடையில் செல்லும் நாவல் இது. மொழிபெயர்ப்பாளரின் சாதனையும் கூட இந்த நாவல். மற்ற வரலாற்று நாவல்கள் போல் பெண்கள் எழுதும் நாவல்களில் வரலாற்றில் பெண்களின் பங்கு மறைக்கப்படுவதில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிகத் திறமையாக எழுதப்பட்ட இந்த நாவலில் சகலத்தையும் மறந்து, நான்கு நாட்கள், வேறொரு உலகத்தில் தொலைவதற்குத் தயாராக இருக்கும் அனைவருக்கும் இந்த நூலைப் பரிந்துரை செய்கிறேன்.