ஆசிரியர் குறிப்பு:
சிங்கப்பூரில் வசிப்பவர். சிங்கப்பூர் தமிழ்முரசின் இணையாசிரியர. மூன்று கவிதைத் தொகுப்புகள், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரது ஏற்கனவே வெளிவந்த படைப்புகள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
அலிசா சிறுகதை சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தக்கதை பின் அதிலிருந்து விலகி, Ubin தீவின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சிறுமியின் பார்வையில் கதை நகர்த்துதல் மற்றுமொரு Conscious decision, கதை அதனால் இன்னும் அழகாகி இருக்கிறது. கதாசிரியர் வேண்டுமென்றே விட்ட இடைவெளிகள் (செல்வராணிக்கும் தாத்தாவுக்கும் எதனால் பேச்சு வார்த்தை இல்லை, செல்வராணி ஏன் வரவில்லை? போன்றவை) வாசகப் பங்களிப்பைக் கோரிக் கதையின் ஆழத்தைஅதிகரித்திருக்கின்றன. பாட்டி வீட்டில் அன்றாட வாழ்க்கையின் பல மாற்றங்களை அலிசா அனுசரித்து வாழ்க்கையைத் தொடரக் கற்றுக் கொள்கிறாள். பாட்டியை விட தாத்தா தான் அவளுக்கு adaptabilityஐக் கற்றுத்தருகிறார். வார்த்தைகளால் சொல்லாமல் பார்த்து கற்றுக் கொள்ளவைக்கும் குரு. கதையின் கடைசிப்பகுதி, தாத்தா எப்போதும் நெருக்கடியில் உதவ வருவார் என்ற நம்பிக்கையை அலிசாவின் மனத்தில் அழியாது பதிக்கப்போகிறது.
என் வரையில் 2021ல் வெளிவந்த(நான் வாசித்த) சிறந்த பத்து சிறுகதைகளில் இளவெய்யில் கதையும் ஒன்று. ஒரு பெண்ணால் மட்டுமே எழுதக்கூடிய கதை
Charlotte Gilman அவருடைய Yellow Wall Paper என்ற கதையில் postpartum depression குறித்து எழுதியிருப்பார். லதா இந்தக் கதையில் அதையே தமிழ்சூழலுக்கு விரித்து எழுதியிருக்கிறார். நீலமலருக்கு Career சரிவு, கணவன் போனதலைமுறைக் கணவன் போல் குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் குறித்து பட்டுக் கொள்ளாமல் இருப்பது, மாமியார் உதவிக்கு வராமல் உபத்திரவம் செய்வது, அம்மாவின் அட்வைஸ்கள் என்று எதுவுமே அந்த Depressionஐக் குறைக்க வழிசெய்யவில்லை.
அதற்கு அவள்கொடுக்கும் விலை?
வித்தியாசமான பெண் கதாபாத்திரங்கள் இந்தக் கதைகளில் வந்து போகின்றன. காவடி பாட்டி வயது வித்தியாசம் அதிகமுள்ள கணவனிடம் அடியும் உதையும் வாங்கி, அவனது ஏழு பிள்ளைகளையும் வளர்த்து, நாள் முழுக்க கடும் உழைப்பைக் காலமெல்லாம் செய்து, கடைசியில் புருஷனைப் பெருமையாகப் பேசுகிறாள். சீனலட்சுமி அது போல மற்றுமொரு வித்தியாசமான பெண். அவளது பிறப்பு மற்றவர்களை அவளை அலட்சியப்படுத்த வைப்பதும், அவளது விநோதமான பொழுது போக்கும். தேக்காவின் அக்கா மறக்கமுடியாத கதாபாத்திரம். வலியில் வரும் அந்தப் பெண். படித்து முடித்தும் பல பெண்களின் சித்திரங்கள் வந்து போகின்றன.
அதே போல் வித்தியாசமான கதைக் களங்களும். நேதாஜி மட்டுமல்ல வேறெந்தத் தலைவராக இருந்தாலும் அவரது அடிப்பொடிகள், தலைவரின் Ideologyஐ நிறைவேற்ற விடப்போவதில்லை. நிர்வாணம் கதையில் அம்மா-மகள் உறவில் மெல்லமெல்ல ஏற்படும் மாற்றம். பூனைக்கதையும் ஒரு வித்தியாசமான களம். ஒரு paranoia குறித்த கதையை Fantasy கதை போல் சொல்லியிருப்பார். கடலுக்குப் பெண் சென்று மீன் பிடிப்பதும், கையோ அல்லது காலோ செயலிழந்து போவதும் ஏதோ ஒரு வகையில் லதாவைப் பாதித்த விஷயங்கள்.
ஒரு வாழ்வின் துளி, கீற்று அல்லது பரிமாணத்தைக் காட்டிவிட்டு விலகும் கதைகளே இவை.
எல்லாக் கதைகளுமே சிங்கப்பூரில் நடக்கும் கதைகள். காலம் மட்டுமே வேறுவேறு காலம்.
லதாவின் கதைகளில் பெண்கள் Extra marital affairsஐத் தேடிப் போகவில்லை, காதலனை என்ன ஆனாலும் பிரியமாட்டேன் என்று அதீத பெண்மை உணர்வுடன் அட்டையாய் ஒட்டிக் கொள்வதுமில்லை, இருந்தாலும் எல்லாக் கதைகளுமே அழுத்தமாக வந்திருக்கின்றன. அலட்டிக் கொள்ளாத மொழிநடை, இறந்த காலம், நிகழ்காலம் எச்சரிக்கை இல்லாமல் சட்டென்று வந்து கலப்பது இவரது பாணி எழுத்து. பல கதைகள் வல்லினத்தில் படித்தவை என்றாலும் தொகுப்பாய் வாசித்தல் தனிசுகம். பத்து வருடங்களில் எழுதிய கதைகள் என்று சிறுகுறிப்பு சொல்கிறது, தொகுப்பில் ஒன்பது கதைகளே இருக்கின்றன. லதாவின் இந்தத் தொகுப்பு இலக்கிய வாசகர்கள் தவறவே விடக்கூடாத நூல். எல்லாக் கதைகளுமே வல்லினத்தில் வந்திருக்கின்றன. நான் இணைய/ அச்சு இதழை நடத்தி முதன்முறை கேட்டு லதா கதையைக் கொடுக்கவில்லை என்றாலும், பத்துமுறை கூட தொடர்ந்து சலிக்காமல் கேட்பேன். லதாவின் கதைகள் என்னைக் கண்டிப்பாகக் கேட்கவைக்கும்.
பிரதிக்கு:
தமிழினி 88672 55103
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.160.