ஆசிரியர் குறிப்பு:
அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவத் தம்பதிகளுக்குப் பிறந்த இவரும் மருத்துவர். UKல் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவருடைய முதல் நாவல், அற்றவைகளால் நிரம்பியவள் சுயசரிதைக்கூறுகள் நிறைந்த புனைவு (Auto Fiction) இது சமீபத்தில் வெளிவந்த இவரது இரண்டாவது நாவல்.
அற்றவைகளால் நிரம்பியவள் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர் எழுதிய நாவல். Medical terminologies, அனாடமி குறித்து ஏராளமான விஷயங்கள் இருக்கும் நூல். அவற்றை அலைபாயும் அஞ்சனா என்ற பெண் மருத்துவரின் வாழ்க்கைக்கதையுடன் இணைத்திருப்பார். அஞ்சனாவில் பிரியா எவ்வளவு இருக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் நிலா என்பது பிரியாவே என்பதை அவரே சொல்லி விட்டார்.
இந்தியாவில் துணிச்சலுடன் பெண்கள் தங்களைப் பற்றி எழுதியவை எனில் எனக்கு உடன் நினைவுக்கு வருவது Kamala Dasன் My story மற்றும் Prabha Khaitanன் A Life Apart ஆகிய சுயசரிதை நூல்கள். கிருஷ்ணா சோப்டியும் மிகவும் Boldஆன சுயசரிதை எழுதியிருப்பதாக தோழி சொன்னார், ஆனால் ஆங்கிலத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. இவருடைய இரண்டு நாவல்களிலுமே தன்னைத் துணிச்சலாக வெளிக்காட்டிக் (Expose) கொண்டிருக்கிறார் பிரியா. அந்த வகையில் தமிழில் இவை முதலில்.
இந்த நாவலின் முக்கியமான இழை அம்மா மகன் உறவின் அலைவரிசைகள், Ecg report போல கீழும் மேலுமாக. அடுத்த இழை கடந்த காலம். இதில் கடந்த காலம் ஏன் முக்கியமானது என்பது நாவலை முடிக்கையில் தெரியவரும். நிலாவின் பிறந்த வீட்டு உறவுகள் அடுத்த இழை. இங்கிலாந்தில் தற்போதைய வாழ்க்கை ஒரு இழை. கலாச்சார வித்தியாசங்கள் (குறிப்பாக இந்தியரின் பாசாங்குகள்) மற்றொரு இழை. இது போல் பல இழைகள் இந்த நாவலில். நிலா, பாட்டி, அத்தை, அம்மா எல்லோரையும் கனவில் கொண்டு வந்து பேசச்செய்வது நன்றாக வந்திருக்கிறது. அது ஒரு நல்ல யுத்தியும் ஆகும்.
காதலில், இருக்கும் உறவுகளை எல்லாம் கத்தரித்து ஒருவரை மட்டும் நம்பி முன் செல்வது Cost benefit analysis போடாமலேயே தெரியும் முடிவு. எந்தவித ஆணோ அல்லது பெண்ணோ அதற்கு Worth ஆனவர்கள் இல்லை. பாட்டி சொல்லும் போது கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும் பணக்காரனாகவாவது பார்த்துக் காதலித்திருக்கலாம் என்பது வாடகைக்கு, மளிகைக்கு கையைப் பிசையும் காதலர் மட்டுமே அறிந்த உண்மை. மற்றவர்கள் Glorify செய்யட்டும். இங்கிலாந்தில் தனிமையில் இரவு ஒருமணிவரை, பாம்பு வழியில் இருக்குமா என்றுபயந்து கொண்டே கழித்த முந்தைய வாழ்க்கை இப்போது யோசித்துப் பார்த்தால் அழகான நாட்கள் என்று நிலா சொல்வதை யோசிக்க வேண்டும். காதல் என்ற உணர்வு மிக அழகானது, உலகத்தில் எல்லோரையும் விட்டு என்னைத் தேர்ந்தெடுத்த துணை என்று நினைப்பது மனதில் பூரிப்பை ஏற்படுத்துவது, ஆனால் நிதர்சன வாழ்க்கை தரும் இல்லாமைகளும், போதாமைகளும் பத்து காதல்களை சாப்பிட்டு நம்மை தண்ணீர் குடிக்க வைப்பவை.
School bullying சிலகாலமாகவே ஐரோப்பா, US, ஜப்பான் போன்ற நாடுகளில் பூதாகரமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. குழந்தையை பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கும் ஒற்றைப் பெற்றோரின் பரிதாபகரமான நிலைமை நாவலில் அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு Mid pointல் வாழ்க்கையை முதலில் இருந்து ஒருமுறை ஓட்டிப் பார்ப்பதுடன் அதைப் பதிவு செய்யும் துணிச்சல் எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. தாய்- மகன் உறவு, காதல் தாம்பத்யத்தில் கசந்து போவது என்பதோடு இந்த நாவல் முடிந்து விடவில்லை. ஒரு வாழ்க்கையின் போராட்டங்களும், நிதர்சனங்களும் இந்த நாவலில் நேர்மையாகப் பதிவாகி இருக்கின்றன. நிலாவை நியாயப்படுத்த பிரியா முயற்சி செய்யவில்லை. அப்படி இருந்திருக்கலாம், இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்வது எளிது. In Nila’s shoes we would have taken the same pathway.
பிரதிக்கு:
பரிசல் புத்தகநிலையம் 93828 53646
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ.300.