ஆசிரியர் குறிப்பு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தவர். கல்கி, அமுதசுரபி, தினமணி போன்ற பத்திரிகைகளில் இவர் கதைகள் பிரசுரமாகி, பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். பதினைந்து வார ஆன்மீகத்தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
முதல் கதையை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்கு இணையானது, முதல் தொகுப்பைக் கையில் ஏந்துவது. ஆண் எழுத்தாளர்களே கூட இது பிரசவவலி என்று கூறக் கேட்டிருக்கிறேன். வண்ணதாசன் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற அவரது முதல் நூலுக்கு எழுதியிருந்ததைப் படித்துப் பாருங்கள். முதல் தொகுப்பை வெளியிட்டவர்கள் யாராக இருந்தாலும் goody goody விமர்சனங்களையும், முழுக்கவே எதிர்மறையிலான விமர்சனங்களையும் புறம் தள்ளி விட்டு (இரண்டிலுமே உண்மையில்லை) மீதி இருக்கும் விமர்சனங்களை உற்றுப் பாருங்கள்.
தனக்கு மிகவும் பரிட்சயமான உலகத்தில் இருந்தே கதைகளை எடுத்திருக்கிறார்.
ஆராயி கதையில் இருபது வருடங்களுக்கு மேல் மாமியாருடன் இருந்த மருமகளுக்கு இயல்பாக வரும் நெருக்கம், நானும் ஒரு பெண் விஜயகுமாரி போல் ஒரு பெண் அவள் நிறத்தினால் சிரமப்படுவது, சாமியாடிப்பெண் மலையிறங்குமுன் தன் குறையைத் தீர்த்துக் கொள்வது, தன்னை விட்டு வேறொருவரைத் தேடியவனை இவள் மறுதலிப்பது, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்களை பெண்பிள்ளைகளே துணிச்சலை வரவழைத்துக் கொண்டு எதிர்ப்பது போன்ற எல்லோருக்கும் தெரிந்த எளிய உலகம்.
இவருடைய மொழிநடை இயல்பாகப் போகிறது. ” சாவி சாவி ன்னு அவள் பின்னாடியே…. பூட்டுத் திறக்கிறவனாட்ட போயிட்டே இருந்தான்”. ஆனால் சின்ன வட்டத்திற்குள் கதைகள் Very predictable என்ற வகைமைக்குள் போய்ச் சேர்கின்றன. சந்தோஷ் தவிர அநேகமான ஆண்கள் கயவர்களாக வருகிறார்கள். இவர் மட்டுமென்றில்லை, பொதுவாகவே பெண்கள் எழுதுவதில் உறவு, குடும்பம் போன்றோரின் தலையீடுகள் அவர்களை Comfort zoneஐ விட்டு நகரவிடாது செய்கின்றன.
இந்தத் தொகுப்பின் சிறந்த கதை மணம். முதலாவதாக மனிதனை மனிதன் அதிகபட்சமாகக் கேவலம் செய்வதற்கு முத்தாவின் வாழ்க்கை. இரண்டாவது ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் எளியவர் வாழ்வை நாசம் செய்வது. மூன்றாவது கதைசொல்லி அதே குடும்பத்தை பல வருடங்கள் கழித்து சந்திப்பது. கடைசியாக மலவாடை மனதில் இருந்து விலகி மல்லிகை மணம் தங்குவது.
இந்த நான்கு பகுதிகளிலும் கதை Perfection என்ற புள்ளியை விட்டு நகரவேயில்லை.
இப்போது எங்கிருந்தோ வந்தான் கதையை
எடுத்துக் கொள்வோம். காகிதச்சங்கிலிகள் கதை போல் ஆரம்பிக்கும் கதையில் Donor கிடைத்து விடுகிறார் (பணம் கொடுத்து). முதலில் பத்து லட்சத்திற்கு ஒத்துக் கொண்டவன் நோயாளியைப் பார்த்ததும் ஒருவேளை ஒரு கோடி முதலிலேயே கொடுத்தால் தான் கிட்னியைத் தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்தால்………… சட்டென்று தோன்றியதைச் சொன்னேன், இது போல் கதைகளை Complex ஆக்க நூற்றுக் கணக்கான வழிகள் இருக்கும். படித்ததும் பாதிப்பை ஏற்படுத்தாத கதைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவே உதவும். இவர் செய்ய வேண்டியது மணம் போன்ற கதைகள் மனதில் உதயமாகும் வரை காத்திருப்பது என்பது என்வரையில் தோன்றுவது. கடைசியில் தான் எப்படிக் கதை எழுத வேண்டும் என்பதை எழுத்தாளரே தீர்மானிக்கின்றார். தொடர்ந்து எழுதுங்கள் விஜி முருகநாதன்.
பிரதிக்கு:
படைப்பு பதிப்பகம் 94893 75575
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ. 150.