ஆசிரியர் குறிப்பு:
சேலத்தில் பணியைத் தொடங்கி அரைநூற்றாண்டு காலத்திற்கு நாளிதழ் செய்தியாளர். எழுத்தாளர். வாதஉரை வீச்சாளர். கவிஞர். சொற்பொழிவாளர். ராஜிவ் காந்தி படுகொலைக் களத்தின் நேரடி சாட்சியாளர்.
நாளிதழ் செய்திகளை உலக அளவில் சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். War reporter போன்ற நாவல்கள் மரணத்தின் முனை வரை சென்று திரும்பியதைச் சொல்லும். International media குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் Irving Wallaceன் The Almighty மற்றும் Jeffrey Archerன் The Fourth Estate நாவல்களைப் படிக்கலாம். ஏராளமான தகவல்களுடன் வாசிக்கவும் மிகவும் சுவாரசியமானவை.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது, அதற்கு மதச்சார்பு என்று எதுவும் கிடையாது. தவப்புதல்வனில் சிவாஜி கிறிஸ்துமஸ் தாத்தாவாக வருவார். அப்போதிருந்த சகிப்புத்தன்மை கூட இப்போது இல்லாமல் போய்விட்டது. ஒரு முஸ்லிம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போடுவதே அவர்கள் மதக்கட்டுபாடுகளின் படி பெரிய விஷயம்.
வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அந்த இடத்தில் இருந்த இவர் காரணத்துடன் சொல்வது முக்கியமான கட்டுரை. அங்கே களத்தில் இருந்த பின் ராஜீவ் கொலை முப்பெரும் விசாரணைகளின் செய்தியாளராக இருந்த இவர் அது குறித்துத் தனியான நூல் கண்டிப்பாக எழுதி இருந்திருக்க வேண்டும். இந்தியாவில் சமகால வரலாறு இப்படித்தான் பின்வரும் தலைமுறைக்குக் கிடைக்காமல் போகிறது. சார்புநிலை எடுக்காதவர்கள் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய கடமை இது.
ஜகவீர பாண்டியன் பற்றிய கட்டுரை தமிழக அரசியலில் பெரும்பாலும் விதைப்பவர் அறுவடை செய்வதில்லை என்பதற்கான சான்று. பிரியங்கா, ரூபியா இடத்தில் இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் ராஜிவின் குழந்தைகளால் மன்னித்து விட்டோம் என்று உரக்கப் பொதுவெளியில் சொல்ல முடிந்தது. El Al Flight 432 attack மட்டுமல்ல, இஸ்ரேல் போன்ற குட்டி தேசத்தில் தீவிரவாதிகளுக்குப் பணியக்கூடாது என்பதில் பலமுறை திடமாக இருந்திருக்கிறார்கள். இங்கே எந்தக் கட்சி ஆண்டாலும், நடுத்தரவர்க்கப் பெண் போல ஊர் என்ன சொல்லும் என்று பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியா போல, நெதர்லாந்து போல இது எங்கள் தேசம், இப்படித்தான் நடப்போம் என்று சொல்லும் தைரியம் மத்தியில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. ரூபீயா சம்பவம் National shame.
ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு, அறுபத்தி மூன்று பக்கங்களில் முடித்துக் கொள்வது என்ன கணக்கு தெரியவில்லை. புகைப்படங்கள், வாழ்த்துப்பா, என்னுரை போன்றவற்றை நீக்கினால் வருடத்திற்கு ஒரு பக்கம் தான் வரும். சாதிமத பேதமற்ற, சார்புநிலை எடுக்காத இவர் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு:
பாரதி புத்தகாலயம் 044- 24332424
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 60.