ஆசிரியர் குறிப்பு:
தென்காசி அருகே ஊர்மேனிஅழகியான் இவரது சொந்த ஊர். எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப்பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது. ’கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை பற்றிய புத்தகம் புலம் வெளியீடாக வந்திருக்கிறது. இது சமீபத்தில் வந்த சிறுகதைத் தொகுப்பு.
பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாமே நேர்க்கோட்டில் நகரும் கதைகள். சிடுக்குகள் ஏதுமின்றி அன்றாட வாழ்க்கையைச் சுற்றியே நகரும் கதைகள்.
கடைசி மூன்று கதைகளை முதலில் பார்க்கலாம். மையல் சாலாவைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. Once bitten, twice shy. அம்ம உலகத்தை அதிகம் பார்க்காத ஒரு தாயின் inner instinct. இரவைக் கடக்கும் புகைவண்டி அறிவுக்கும் உடலுக்கும் நடக்கும் போட்டி. வடிவ நேர்த்தியிலும், வார்த்தை சிக்கனத்திலும் நன்றாக வந்திருக்கும் கதைகள் இவை மூன்றுமே.
இருள் புன்னகை சிறுவர்கள் கோணத்தில் சொல்லப்பட்ட நல்ல கதை. இந்தக்கதையில் மாமா, அம்மாவிற்குத் தம்பியாக இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் இல்லையா. அல்லது அண்ணாச்சி கண்டிப்பாக வருவாக என்ற வரி தேவையில்லை. நீண்ட மழைக்காலத்தில் அவள் வீட்டிலேயே வளையலைக் கொடுத்திருக்கலாமே! எதற்கு கடைசியில் மெலோடிராமா? கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதையை (கயத்தார்?) வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். கூர்மையாக வந்த கதை அது. மேலே சொன்ன இரண்டுமே இவருடைய நல்ல கதைகள், சின்ன Flaws வாசிப்பனுபவத்தை முழுமையாக Enjoy செய்ய முடியாது ஆக்கி விடுகிறது.
பூனைகள் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வருகின்றன. புஷ்பராணியின் பூனைகள் கதையில் பூனைகள் தனிமையைப் போக்கும் Outlet ஆகின்றன. தொகுப்பின் மீதிக் கதைகள் பெரிதாக என்னை Impress செய்யவில்லை.
இந்தத் தொகுப்பின் பல கதைகள் ஜெகநாத் நடராஜனின் அடுத்து வரும் தொகுப்பின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. திரைத்துறை, சின்னத்திரையில் இருந்து கதை எழுத வருகிறவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை விடக்கூடுதல் அனுபவம் இருக்கும். ஜெகநாத்தின் மொழிநடையும் எந்தத் தடங்கலும் இல்லாது தெளிவாக அவர் வாசகருக்குக் கடத்த நினைக்கும் உணர்வை அளித்து முடிகிறது. இவர் தொடர்ந்து எழுதவேண்டும்.
பிரதிக்கு:
புலம் 98406 03499
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.120.