ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜன் புனைவு, அல்புனைவு, விமர்சனம், உரையாடல்கள், மொழியாக்கம் போன்ற பலதளங்களில் இயங்கி வருகிறார். பொறியியல் பட்டதாரி. இந்து தமிழ் நாளிதழில் சிலவருடங்கள் பணியாற்றியவர். கதையும் புனைவும், சிறுவர்களுக்கான தத்துவம் ஆகியவை இவரது முந்தைய நூல்கள். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில், தாண்டவராயன் கதை போன்ற படைப்பை சலனமேயில்லாது கடந்து போகும் தமிழ் இலக்கிய உலகத்தைக் குறித்து விசனப்பட்டார். பா.வெங்கடேசன் The most underrated writer in Tamil. அவருடைய பள்ளியிலிருந்து இரண்டு சீடர்கள், அவர்களுக்கேயுரிய தனித்துவமும் கலந்து வந்திருக்கிறார்கள். தூயன் மற்றும் த.ராஜன்.
பாலூட்டிகள் ஒரு Modern Fable சாயலில் சொல்லப்பட்ட கதை. தாத்தாவைப் பார்க்காத பேரனுக்கு, தாத்தாவின் குணாதிசயங்கள் சில இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் வௌவால் இருவரையும் இணைப்பது என்பது ஜீன்களின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டது. இந்தக் கதையில் பழமை அழிந்து புதிது உட்புகுகிறது. கணவன் மரணத்தை நம்பாத மனைவி வருகிறாள். தென்னங்காடு அழிந்து காங்கரீட் காடு வருகிறது. தாத்தா தான் பேரனாகப் பிறந்திருக்கிறார் என்ற superstitionஐ நிரூபிக்க பலவிதமான தரவுகளும் தரப்படுகின்றன. ஆனால் தாத்தா நிறுத்திய இடத்தை பேரன் பலப்பல வருடங்களுக்குப் பிறகு தொடங்கும் போது இடைப்பட்ட காலம் உறைந்தாற்போல் ஸ்தம்பித்து நிற்கிறது.
பழைய குருடி, தீண்டாமையைப் பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்து பார்த்தால், அறிவுஜீவியின் பொய் தீண்டாமை வரலாற்றை மாற்ற உபயோகப் படுவதைக் கூறுகிறது. ஜாதிமதம் முற்றிலுமாக அழியும் வரை நாம் அனைவரும் இந்தியத்தாயின் மக்கள் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பேயில்லை. எல்லாவற்றிற்கும் முன் சந்தேகம் தலைகாட்டி நிற்கும்.
ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. ராஜனின் மொழிநடை தனித்துவமும், நுட்பமும், சரளமும் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் கதைகள் எல்லாமே நாம் மட்டும் முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய கதைகள். உரையாடல்களை அதிகம் முன்னிறுத்தாமல், புறக்காட்சிகளை வைத்து கதையைக் கொண்டு செல்வது ராஜனின் பாணி. ஆனால் நல்ல கதைகள் அத்துடன் முடிந்து விடுவதில்லை. வின்சென்ட்டின் அறை முழுக்கவே Erotism ஆகச்சென்று இன்னும் அழுத்தமாக முடிந்திருக்க வேண்டும். கதையின் கடைசியில் இருக்கும் டிவிஸ்டின் மேல் கதையின் மொத்த கனமும் போய் விழுவதாகத் தோன்றுகிறது. அது போலவே அரூபி முழுக்கவே Fantasy elementsஉடன் வந்திருக்க வேண்டும். கதையின் ஆரம்பமும் முடிவும் மட்டுமே Fantasy ஆக வந்திருக்கிறது. முதல் தொகுப்பு என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இந்தக் கதைகள் நிச்சயமாக புதிய உலகத்திற்குக் கூட்டிச் செல்கின்றன. ராஜனின் மீதான எதிர்பார்ப்பு நம்மை இன்னும் இன்னும் என்று கேட்க வைக்கிறது போலும். ராஜன் திறமை வாய்ந்த இளைஞர்.
பாலூட்டிகள் ஒரு Perfect story, அது வாசகர்களைக் கூட்டிச்செல்லும் தூரமதிகம்.
மற்ற நான்கு கதைகளிலுமே Improvise செய்ய வாய்ப்பிருக்கிறது. ராஜனின் அடுத்த தொகுப்பிற்குக் காத்திருப்போம்.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு மே 2022
விலை ரூ.250.