Diaz அர்ஜெண்டினாவில் பிறந்து, ஸ்வீடனில் வளர்ந்து பின் வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தவர். இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். Borges பற்றிய முக்கியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை எழுதியுள்ளார். இவரது மற்றொரு நாவல் புலிட்சர் விருதின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகியது. இந்த நாவல்
புக்கரின் நெடும்பட்டியலில் இடம்பெற்ற ஒன்று.
இந்த நாவல் ஒரு வரலாற்று நாவலை Post modern யுத்தியில் சொல்வது என்று சொல்லலாம். Wall Stteetல் 1929ல் நடந்த மிகப்பெரிய சரிவையும், அதற்குக் காரணமான ஒரு Financial geniusம் பற்றிய கதையிது. இன்னொரு வகையில் இது ஒரு Stock market story. பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதைத் தெரியாதவர்கள் இந்த நாவலை முழுதாகப் புரிந்து கொள்வது கடினம்.
நாவல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி பங்குச்சந்தையை வென்ற ஒரு Genius மற்றும் அவரது exceptionally genius மனைவியும் பற்றியது. இருவருமே Eccentrics ஆனால் ஒருவரிடம் மற்றொருவர் தனது சாயலைக் கண்டுகொள்கிறார்கள். இரண்டாவது பகுதியில் வேறு பெயர்களில் கிட்டத்தட்ட அதே கதை நடக்கிறது. மூன்றாவது பகுதியில் முதல்பகுதி ஒரு கற்பனை நாவல் என்றும், இரண்டாவது பகுதி அந்த நாவலின் உண்மைக்கதை என்றும், இந்தப்பகுதியில் அந்த நாவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு சுயசரிதை எழுத Ghost writerஐ ஏற்பாடு செய்து அந்த நூலை அவர் முடிப்பதும் நடக்கிறது. நான்காவது பகுதி மனைவியின் டயரிக் குறிப்புகள்.
Diaz உண்மையில் வாசகர்களுடன் நடத்தும் ஒரு விளையாட்டே இந்த நாவல். உண்மை என்பது யாருடைய உண்மை என்பதில் மாறுபடக்கூடியது. பணபலமும், அதிகாரமும் நிறைந்தவர்கள் உண்மையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். அப்போது புதிய உண்மையே எல்லோருக்குமான உண்மை(Bent and align reality). இந்த நாவல் இதையே மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
திருமணவாழ்க்கை என்பதை வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் தோல்வி என்று வெளியில் சொல்லப் பலநேரங்களில் முடியாமல் போகிறது. அவர்கள் பொதுவாகச் சொல்லும் போது, துணையை ஒரு தெய்வப்பிறவி என்றோ குழந்தை சுபாவம் என்றோ ஏதோ ஒன்றைச் சொல்வது, பெண்வாடையே பார்த்திராதவன், பத்து பெண்களுடனான போக அனுபவங்களை நண்பர்களிடம் பகிர்வது போன்றது.
நூறு வருடங்களுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வையும், அதன் பின்னணியில் நடந்த பல தகவல்களையும், அப்போதைய அமெரிக்கப் பங்குச்சந்தையின் நடைமுறைகளையும், Great depressionன் விளைவுகளையும் அமெரிக்காவில் பிறக்காத ஒருவர், அந்தந்த துறை நிபுணர்களின் உதவியும், Newyork Public Libraryன் ஆவணங்களையும் வைத்து தகவல்பிழை இல்லாமல் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்பது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. Diaz இந்த நாவலை எழுதுவதற்கு ஆய்வுக்கு மூன்று வருடங்களை எடுத்துக் கொண்டார். Trust என்பதன் இரண்டு அர்த்தங்களையும் இந்த நாவல் உள்ளடக்கிக் கொண்டது.
வெளிப்பார்வைக்கு இது Financial genius பற்றிய கதை என்பது போல் தோற்றமளித்தாலும், இது உண்மையில் அவருடைய மனைவியின் கதை. அவரது கதை நான்குவிதங்களில் சொல்லப்பட்டாலும் துளியும் அலுப்பேற்படுத்தாமல், வாசகரைப் பரபரப்பில் வைத்திருக்கும் மொழிநடை, கதைசொல்லல். Great Gatsby படித்தவர்கள் இந்த நாவலைக் கூடுதலாக ரசிக்கமுடியும். நவீன நாவல்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதில் ஆர்வமுள்ளோர் அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது.