Everett அமெரிக்க எழுத்தாளர். முப்பது நூல்களுக்கு மேல் எழுதியவர். தெற்கு கலிபோர்னியா பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிபவர். இந்த நூல் புக்கர் நெடும்பட்டியல் 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் ஒன்று.
ஒரு துப்பறியும் கதை எப்போதும் சீரியஸாக இருக்கும். ஆனால் இது வேடிக்கையாகச் சொல்லப்படும் துப்பறியும் கதை. இது போன்ற கதைகளுக்கு புக்கர் பட்டியலில் எப்படி இடம் கிடைக்கும்? ஏனென்றால் இந்தத் துப்பறியும் கதை அமெரிக்காவில், குறிப்பாகத் தெற்குப்பகுதி மக்களது நிறவெறியைப் பற்றிப் பேசுவதற்கு இந்த வடிவத்தை எடுத்துக் கொண்டது.
2020ல் Floyd (I can’t breath Man) க்கு கிடைத்த நீதி, நூறு வருடங்களுக்கு முன் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. அப்போது விசாரணைகள், கைது என்று எதுவுமே இல்லாது கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் ஏராளம். கறுப்பினத்தவரைக் கொன்றது வெள்ளையர் எனில் அந்த வழக்கு நீதிமன்றம் போகும்வரை கூட உயிருடன் இருந்திருக்காது. ஒரு வெள்ளையினப்பெண் 1955ல் தவறாகப் பேசினான் என்று குற்றம்சாட்டியதற்குக் கொல்லப்பட்ட பதினான்கு வயது கறுப்பினச் சிறுவனின் மரணத்திற்கு அறுபத்தைந்து ஆண்டுகள் கழித்து யாரோ குரூரமாகப் பழிவாங்க ஆரம்பிப்பதுடன் நாவல் தொடங்குகிறது.
இப்போது அமெரிக்காவில் நிறவெறி இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இருக்கிறது. ஒரே குற்றத்தைச் செய்த வெள்ளையருக்கும், கறுப்பருக்கும் ஒரே தண்டனையை வெள்ளை நீதிபதிகள் வழங்குவதில்லை. கறுப்பினத்தவரைக் கண்டால் பயமாக இருக்கிறது என்று இன்றும் வெள்ளையர் சொல்கிறார்கள். கறுப்பினத்தவரை மணந்த வெள்ளைப் பெண்களை சரிசமமாக நடத்துவது இல்லை. இது போல் பல.
அமெரிக்காவில் எப்போதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், எழுத்து சுதந்திரம். இத்தனை காலம், ஒடுக்கப்பட்டதற்கு கறுப்பினத்தவர் பழிவாங்கப் புறப்படுகிறார்கள். வெள்ளையின ஆண்கள் நாடு முழுவதும் கொடூரமான விதத்தில் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் விதைப்பைகள் அவர்கள் உடலில் இருந்து அகற்றப்பட்டு, ஏற்கனவே இறந்து போன கருப்பரின் கையில் வைக்கப்படுகிறது. நாவல் முழுவதுமே Nigger என்ற வார்த்தை வெறுப்புத் தொனியில் சொல்லப்படுகிறது.
இந்த நாவலை எழுதிய Everett ஒரு கறுப்பினத்தவர்.
Donald Trumpன் ஆட்சிகாலத்தில் கதை நடப்பதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் மக்களுரை அப்படியே Trump பேசுவதை Mimic செய்யப்பட்டிருக்கிறது. 105 வயதில் Mama Z என்ற பெண்மணி வருகிறார். Missisipiயின் நூறாண்டு வரலாற்றைக் கைகளில் வைத்திருப்பவர். வழக்கமான துப்பறியும் கதைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மர்மமுடிச்சை அவிழ்ப்பது போல் நகராமல் மேலும்மேலும் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. முடிவும் கூட ஒரு Open endingக்கான கேள்வியுடன் முடிகிறது.
Satire இந்த நாவல் முழுவதும் உரையாடல்கள் மூலம் வருகிறது. நாவலில் வரும் வெள்ளையினத்தவர் அநேகமாக குற்றம் செய்பவர்களாக வருகிறார்கள். கொலைகளைப் பற்றி விசாரணை செய்ய வரும், வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கறுப்பினத்தவர். இந்த நாவலை ஒரு Caution ஆகவோ, Racist Alleoryஆகவோ எடுத்துக் கொள்ளலாம். வரலாற்றில் சம்பவங்கள் மறுபடி நடப்பது தெரிந்ததே, ஆனால் Victimகள் மாறுவது என்பது அடிக்கடி நிகழ்வதில்லை.