Magee, அயர்லாந்தில் பிறந்தவர். அவருடைய முதல் நாவல் Undertaking, Women Prize for Fiction இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. பல விருதுகளைப் பெற்றவர். இந்த, இவரது இரண்டாவது நாவல் புக்கர் 2022 நெடும்பட்டியலில் இருந்து இறுதிப் பட்டியலுக்கு முன்னேறவில்லை.
அயர்லாந்தின் ஒரு தீவுக்கு Lloyd எனும் ஆங்கிலேய ஓவியர், அவருடைய Careerன் சரிவை மீட்க வருகிறார். அதே நேரத்தில் JP என்று அழைக்கப்படும் பிரஞ்சு தந்தைக்கும் அல்ஜீரியத் தாய்க்கும் பிறந்து பிரஞ்சுக்காரனாக வளர்ந்த எழுத்தாளர், Irish மொழி அழிந்து கொண்டிருப்பதன் அபாயத்தை புத்தகமாக எழுத அதே தீவுக்கு வருகிறார். இவர்கள் இருவருமே மற்றவர் வருவது தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டார்கள். குணநலன்களில், சித்தாந்தத்தில் மிகவும் வேறுபடும் இருவர்.
வடக்கு அயர்லாந்து Protestantகளாலும் தெற்குப்பகுதி கத்தோலிக்கர்களாலும் நிரம்பியது. இருவரும் மாறிமாறி அடுத்தவரைக் கொல்லும் காலகட்டத்தில் கதை நடக்கிறது. அயர்லாந்தே ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திற்குள்ளான முதல் தேசம், எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயரின் பிடியில் சிக்கித்தவித்தது. இன்றும் வடக்கு அயர்லாந்து UKயின் ஒரு பகுதி.
புக்கர் இங்கிலாந்து தேசத்தில் தோற்றுவிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் எங்கள் மொழியை அழித்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலமாக வைக்கும் நாவலை ஒரு அயர்லாந்து எழுத்தாளர் எழுதி, அது புக்கர் நெடும்பட்டியலில் வருவதற்கு, புக்கர் ஜூரிகளின் விசாலமான மனதே காரணமாக இருந்திருக்க முடியும். காலனி ஆதிக்கத்தில் தாய்மொழிகள் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் முன்னிலை வகிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புகள் என்று எல்லாமே ஆங்கிலம் பேசுபவர்க்கு மட்டுமே என்றாகும் போது Native language தேயத்தொடங்குகிறது.
Lloyd, JP இருவருக்குமே மிகவும் வித்தியாசமான கடந்தகாலமும், அழுத்தமான நிகழ்காலமும் உண்டு. இருவரும் வேறுவேறு காரணத்திற்காகத் தங்களை உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுடன் தீவின் மூன்று தலைமுறைப் பெண்கள், ஆண்கள் இல்லாத வீட்டின் ஒரே ஆணான நான்காம் தலைமுறையைச் சேர்ந்த James எனும் சிறுவன், அவ்வப்போது வந்து போகும் இருவர் என்று மொத்தமே இவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது.
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்களில் என்ன நடந்ததோ அதுவே இந்த நாவலிலும் நடக்கிறது, ஆனால் அது ஆங்கிலேய வெறுப்பைக் காட்ட உபயோகிக்கப்படுகிறது. உரையாடல்கள் மிகுந்த பலம் இந்த நாவலுக்கு. கூர்மையான வரிகள். அதே போல் முக்கிய இரண்டு கதாபாத்திரங்களின் முன்கதை நனவோடை யுத்தியில் நகர்தல். அதிகமாகக் கலவரம் நடந்த 1970களின் கடைசிப்பகுதியைக் காலமாக எடுத்திருக்கிறார் இந்த நாவலில். அயர்லாந்து தீவின் வாழ்க்கை, கலாச்சாரம், உணவு, பொருளாதாரச் சிக்கல்கள் என்று எல்லாமே கதையுடன் கலந்து வருகிறது.
காலனியாதிக்கப் பாதிப்பு அயர்லாந்தை துண்டாக்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் போகும் இடத்தில் எல்லாம் தீராத பிரச்சனையை உண்டாக்கிவிட்டு ஒரேயடியாகப் போய்விடுவார்கள்.