ஆசிரியர் குறிப்பு:
கரூரைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர். இதற்கு முன் சாந்தினி சொர்க்கம், கயல்வெளி ஆகிய நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுள்ளார். முந்தைய இரண்டுமே தன் வரலாற்று நூல்கள். இதுவும் சமீபத்தில் கிண்டிலில் வெளிவந்த நூல்.
Snippet :
“காலத்தை போல பாடம் நடத்தும் ஆசான் இந்த உலகத்தில் எங்குமே இல்லை மாம்ஸ். அந்த பாடத்தை படிக்கும் முதல் பெஞ்ச் மாணவனா இருப்பது ஒன்றுதான் நம் வெற்றிக்கான நிரந்தர வழியாக இருக்கும்.”
நண்பர் Real Estateல் நன்றாகவே சம்பாதித்தார். ஆனால் அப்ரூவல் இல்லாத இடங்களை விற்கமுடியாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு அவரை தொழிலில் இருந்து விலக்கி,
Rice Puller தேடுவதை தொழிலாக்கி விட்டது. சந்தனக் கும்பாக்கள், குடங்கள், செம்புகள் என்று இந்தியா முழுவதும் அவர் பார்க்காத சாமியார், ஜமீன் வீட்டார்கள் இல்லை. ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து, ஒரு ரூபாய் வரவில்லை, ஆனால் அனுபவக்கொள்முதல்.
குணசீலன் RPஐத் தேடிப் போகவில்லை, பதிலாக ரத்னக்கற்கள், நாகமணி, தங்க வேட்டை இத்யாதிகள்.
குணாவின் முதல் இரண்டு நூல்களில், ஏணியில் ஏறஏற பாம்புகொத்த, எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நின்ற கதையைப் படித்து விட்டு, உண்மையிலேயே இந்த நூலை எதிர்பார்த்திருக்கவில்லை. புதையலைத் தேடுவதில் ஏதும் தவறில்லை ஆனால் இது கடின உழைப்பாளியின் மற்றொரு முகம். நூலின் இறுதியில் இருக்கும் நவரத்தின கற்கள் பற்றிய குறிப்புகள் பலருக்கு உதவியாக இருக்கக்கூடும்.
கன்னிக்காட்டில் ராஜநாகம் மலைப்பாம்பு சைஸில் படுத்திருக்கிறது. குகைக்குள் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறி இருக்கிறது. மண் சரிந்து குகையில் நுழைந்த பாதை மூடியிருக்கிறது. ஒன்றே கால் இலட்சம் பணத்தை மோசடியில் இழந்து ரயிலுக்குக் காசில்லாமல் திருட்டுத்தனமாய் பயணம் செய்ய நேர்ந்திருக்கிறது. ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மரணம் பலமுறை மிக அருகில் வந்து முத்தமிடாமல், மூச்சுக்காற்றை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. அனுபவங்கள். அனுபவங்கள்.
Alistair MacLeanன் Adventure நாவல்கள் படிப்பது போல் குணசீலனின் அதிசயமணிகள் நாவல் விரைந்து ஓடுகிறது. விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற மனநிலையைப் புரிந்து கொள்ள மனதளவிலேனும் சூதாடியாக இருக்க வேண்டும். மாதாந்திரச் சம்பளத்திற்குப் பங்கம் வராத வேலைகளும், பயணத்திற்கு மூன்று மாதம் முன்பு பதிவுசெய்யப்படும் பயணச்சீட்டு இத்யாதிகளுடன் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்பவர்கள் குணாவின் இந்த நூலையும், தேடலையும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது. அது பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைத் தொடுவதற்கும், கண்டுபிடித்தால் கையை வெட்டுவார்கள் என்ற குடும்பத்தின் பெண்ணைத் தொடுவதற்குமுள்ள வித்தியாசம்.
பிரதிக்கு:
Amazon.in
முதல்பதிப்பு 11Th July 2022.
விலை ரூ.200.