ஆசிரியர் குறிப்பு:
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். Missouriயில் வசிக்கிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதைகள் எழுதிவரும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
முழுக்கவே குமரி மாவட்டக் கதைகள் தான் இந்தத் தொகுப்பில். ‘செற்ற சர்டிபிகேட்’ மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவில். குமரியின் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு மொழியை எல்லாக் கதைகளிலும் உபயோகித்திருக்கிறார். இதில் வரும் கதைகளும் இவர் பார்த்தவை, கேட்டவை தாண்டி வேறெங்கும் பயணம் செய்பவை இல்லையாதலால் ஒரு Authenticity எல்லாக் கதைகளிலுமே இருக்கின்றது.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் அந்த மதத்தின் குறைகளை விமர்சிப்பதில்லை. இந்தத் தொகுப்பின் பல கதைகளில் சி.ஆர்.ஐ சர்ச்சின் பாஸ்டர்கள் வருகிறார்கள். பெரிய மனிதர்களை, பணக்காரர்களை அனுசரித்து வாழும் பாஸ்டர்கள் பெருவாழ்வு வாழ்கிறார்கள். (எல்லா மதங்களிலும் நடப்பது தான். அம்பானி கோவிலுக்குள் நுழையும் அதேநேரம் நாமும் நுழைந்தால் என்ன நடக்கும்! ) மற்றவர்கள் அடிவாங்கி, கர்ப்பிணி மனைவியைக் கூட்டிக் கொண்டு இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடுகிறார்கள். எல்லோரையும் சமமாக நினைத்தவர், கைக்காசைப் போட்டு தேவாலயம் கட்டியவர் எல்லோருமே நிர்கதி அடைகிறார்கள்.
கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விட்டால் சாதிப்பாகுபாடு போய்விடும் என்ற மாயக்குமிழியை சுட்டுவிரல் நீட்டிச் சிதற வைக்கிறார். பெரும்பாலானவர்களால் கீழ்சாதி என்று சொல்லப்பட்டவர்கள், அதற்கும் கீழானவர்களாகச் சிலரைச் சொல்லி அவர்கள் தேவாலயத்தில் சரிசமமாக நடத்தப்படவிடாது பார்த்துக் கொள்கிறார்கள். இல்லை அவர்களுக்காகத் தேவாலயத்திற்குள் நுழையாமல் ஊரை விட்டு தூரம் என்றாலும் சிரமம் பார்க்காது அடுத்த தேவாலயங்களுக்குப் போகிறார்கள்.
கீழ் சாதி என சொல்லப்படுபவர் மீதான அடக்குமுறை தொடர்கிறது. கணவனைக் கட்டிவைத்து அடிக்கும் பொழுது இணங்காதவள், குழந்தையை அடித்தால் பதறிக்கொண்டு சம்மதிக்கிறாள். செற்றையில் கும்பலாக நுழைந்து பெண்ணை மரவள்ளிக்கிழங்குத் தோப்புக்குத் தூக்கிச் செல்கிறார்கள். நன்கு பாடும் திறமையுள்ள பெண்ணை சாதியைச் சொல்லி விரட்டுகிறார்கள். ஊரெங்கும் பாராட்டும் சமையலைச் செய்தவன் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப் படுகிறான்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பில், கீழ்சாதியினர் ஜாக்கெட் அணியக்கூடாது என்று வைத்திருந்த கொடுமை, குமரி தமிழகத்துடன் சேர்வதற்கான போராட்டம் என்று அந்த மாவட்டத்திற்குரிய வரலாற்று நிகழ்வுகளையும் கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். முதல் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்குக் கதைகளில் Flow இருக்கிறது. இவர் செய்ய வேண்டியது கதைகளின் அழுத்தத்தைக் கூட்டுவது. உதாரணத்திற்கு முதல் கதையில் முண்டன் ராமன்பிள்ளையின் மகளை அமெரிக்காவில் இருந்து மணமுடித்துக் கூட்டிவந்திருந்தால் அந்தக்கதையின் தாக்கம் வேறு. இது ஒன்று, இதைப் போல் நூறுவழிகளில் ஒரு கதையின் Depthஐ அதிகமாக்க யோசிக்கலாம். தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு:
சால்ட் பதிப்பகம் 88394 09893
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ. 250