ஆசிரியர் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் பணிபுரிகிறார். பத்திரிகைகள் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட இவரது சமீபத்தில் வெளியான முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
கதைக்கருக்கள் என்று எடுத்துக் கொண்டால், மணமான பெண்ணுக்கு ஏற்படும் Crush, அம்மா இன்னொருவரை மணந்து கொண்டதைத் தாங்க முடியாத மகன், ஆறாம் வகுப்பில் படித்த பெண்ணை, அறுபது வயதில் கண்டுபிடிப்பவர், திருநங்கைகள் பற்றிய ஆராய்ச்சி செய்பவன், செக்காவின் கடைசி தினங்கள், பெண்ணுடல் மீது நிகழ்த்தும் வன்முறை, மரங்களை நேசிப்பவன், special child போல நடந்து கொள்ளும் குழந்தை, கவனத்தைத் திருப்பியதும் Normal ஆவது என்பது போன்று ஒன்றுக்கொன்று வேறுபாடான கதைகள்.
தலைப்புக் கதையான அப்பாவின் காது ஒரு Perfect story. Horn அடிக்காமலேயே வண்டியைப் பெரும்பாலும் ஓட்டும் எனக்கு தொடர் Horn சத்தம் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும், சுற்றியிருப்பவர்கள் எதுவுமே நடக்காதது போன்ற முகபாவத்துடன் இருப்பார்கள். சத்தத்தை வெறுத்தவர் ஒரு நிலையில் சத்தத்தை உருவாக்குவதும், அவர் நிரந்தரமாக அமைதியான பிறகு வந்தவர்கள் சத்தத்தை உருவாக்குவதும் வாழ்வின் முரண்நகைகள். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை இந்தக் கதையில் ஒரு ரிதம் இருக்கிறது.
இப்போது ‘இன்னொரு அப்பா’ கதையை எடுத்துக் கொள்ளலாம். மரணப் படுக்கையில் அம்மா குழந்தையின் எதிர்கால நலனுக்காக திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறாள். பத்து வயதுப் பையனை வைத்திருக்கும் பெண்ணுக்கு உடல்தேவை இருக்காதா? ஒரு துணை இல்லை என்றால் யார் கூப்பிட்டாலும் போய்விடுவேன் என்று பயமாக இருந்தது என்று அவள் சொல்லக்கூடாதா? Having said all this, this story is nothing but melodrama.
அதே போல் அசுவத்தாமன் உள்ளிட்ட சில கதைகள் Melodramaவிற்கும் ஒருபடி கீழ். முதல் கதையும், கடைசிக் கதையும் வித்தியாசமாக முயற்சி எடுத்திருக்கிறார்.
என்னுடைய சிறுவயதில் வீட்டின் அருகே இருந்த மருத்துவர் எல்லா நோய்க்கும் ஒரு சிவப்புநிற திரவத்தையே கொடுப்பார். அந்த வயதிலேயே எனக்கு அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் நானும் இப்போது அதையே செய்கிறேன். நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள். எழுதியதை சிலநாட்கள் ஆறப்போடுங்கள்.
தோசை மாவிற்குக் கூட அரிசி, பருப்பை ஊற வைக்கிறோம். சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையில் வேறு சாத்தியக்கூறுகள் உள்ளதா பாருங்கள் அல்லது தேவையில்லாதவற்றை நீக்குங்கள். மன்மதக்கலை போலத் தான் எழுத்தும். முதலில் கட்டாந்தரையில் நீச்சல் அடிப்பது போலத் தோன்றும், அப்புறம் நாளாகஆக மீன்குட்டியாகி விடுவோம்.
பிரதிக்கு:
கதையாடி பதிப்பகம் 86672 98553
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.150.