ஆசிரியர் குறிப்பு:
எழுத்தாளர் சாரதி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர். இயற்பியல் படித்தவர். களப்பணியாளராக மக்களின் போராட்டங்களில் ஈடுபட்டவர். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
சாரதி கி.ரா உட்பட கரிசல் மண்ணின் எல்லா படைப்பாளிகளுடனும் சுற்றித் திரிந்தவர், இலக்கியம் பேசியவர். எண்பதுகளில் இருந்து கதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும், மிகக்குறைவாக எழுதி நாற்பதாண்டுகள் கழித்து முதல் சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.
நினைவும் கனவும் கலந்த, மாயயதார்த்த சாயல் மிகுந்த மொழியில் சில கதைகள் ( கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி, கண்ணாடியுள் கசிந்துருகும் இசையின் வர்ணங்கள், சாந்தா) இந்தத் தொகுப்பில் வந்திருக்கின்றன. நிழலைக் கட்டியணைக்கும் ஆவலில் துடிக்கும் பாத்திரங்களோடு வாசகர்களும் ஒரு அரைமயக்க நிலையில் படிக்கக்கூடிய கதைகள் இவை. வெள்ளைவால் குருவிக் கதை உருவகக்கதை. இயந்திரமாய் மாறிய மனிதர்களுக்கு குருவி புத்தி சொல்லும் கதை.
பசி என்பது அடிவயிற்றில் கொழுந்துவிட்டு எரியும் தீ. உணவுவேளை சற்று தள்ளிப் போனதென்றால் பசிக்கிறது என்று நாம் சொல்லும் பசி அல்ல அது. பசியை மையமாக வைத்த இரண்டு கதைகளும் வித்தியாசமானவை. :இவனும் சுதாகரும்’ கதை தெரியாத வீட்டுக்கு உணவு உண்ணச் செல்லும் யாருக்கும் நடக்கக்கூடிய கதை.
ஆனால் யாசகம் Powerful story. நிதர்சனம், அதிகம் அறிமுகமில்லாத பெண்ணின் எதிர்வினை, தோற்றத்தை வைத்துத் தரும் மதிப்பீடு, எல்லாவற்றையுமே பஷ்பமாக்கும் பசி என்று ஒரு Perfect combination. “நல்லசிவன் வந்து கொண்டிருந்தான்” என்பதில் கதை முடிந்தது என்று பக்கத்தைப் புரட்டாது கதையை ஜீரணம் செய்து கொண்டு திருப்பினால் ஒரு அரைப்பக்கப் பின்னிணைப்பு. விளங்காமல் போய்விடுமோ என்று சிறுகதையாசிரியர்கள் பலரும் அஞ்சுவது தெரிகிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான தனிப்பட்ட பிரச்சனைகளை சொல்லும் கதைகள் ‘இணக்கம்’ மற்றும் ‘ அவனின் கழிவறை’. Erratic periods இப்போது பெண்களுக்கு Most common என்றாகி விட்டது. Stress அதிகரிக்கையில் Periods வருவதும் இயல்பாகி விட்டது. அதை வைத்துப் பல பரிமாணங்களுடன் நெய்யப்பட்ட கதை இணக்கம். அவனின் கழிவறை Constipation அவஸ்தைகள்.
துர்ஷினியின் பிரவேசம் Sci fi கதை. ‘இருள் வெளியில் சுற்றித்திரியும் ஆதவன்’ மரணத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட நல்லதொரு கதை. கால்கள், உருமாறும் பிம்பங்களில் கரையும் அப்பா இரண்டுமே இல்லாத ஒன்றின் மீதான ஏக்கம் பூதாகரமாக மாறுவது. செந்நிற நாமமும் கறுப்புநிற இரயில் பெட்டியும், ஜாதிக் கலவரத்தைச் சொல்லும் கதை. ஜாதியோ, மதமோ அது எதுவாக இருந்தாலும் ஆயிரத்தில் இருப்பவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு கோடியில் இருப்பவர்கள் விலை தருவது.
பதினைந்து கதைகள் அடங்கிய தொகுப்பு இது. சாரதியின் மொழி தனித்துவமானது. யாருடைய சாயலும் இதில் இல்லை. நினைவுக்கும் கனவுக்கும் இடையிலுள்ள தாழ்வாரத்தில் உலவும் மொழி. இணக்கம் எனக்குத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை. ஆணுக்கும் பெண்ணுக்கும் மலரப்போகும் உறவு அர்த்தங்களையும் தர்க்கங்களையும் தாண்டியது என்பதைக் கதையில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். பாயாசம் இன்னும் கொஞ்சம் இலையில் விட்டிருக்கலாம் என்று தோன்றுவது போல், இவர் இன்னும் கூட சில கதைகளை எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பிரதிக்கு:
நூல்வனம் 91765 49991
முதல்பதிப்பு ஜனவரி 2021
விலை ரூ. 200.