ஆசிரியர் குறிப்பு:

இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டு, சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது இவரது முதல் நாவல்.

ஒரு பழுத்த ஆன்மிகவாதி கடவுளை எவ்வளவு தீர்க்கமாக நம்புகிறானோ, அதே தீர்க்கத்துடன் கடவுள் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மதங்கள் மனிதநேயத்தை அழிக்கும் பெருநோய்கள். நான் பிறந்த மதத்தில் ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்த மதத்தை விமர்சிக்கும் நோக்கம் எப்போதும் எனக்கில்லை. இலக்கியத்தையும் அது சார்ந்த உண்மைகளையும் தாண்டிப் பயணம் செய்யும் எண்ணமும் எனக்கில்லை.

நீங்கள் அறுபது வயதை நெருங்குபவர்களாய் இருப்பின் உங்களது சிறுவயதில் எத்தனை பர்தாவைப் பார்த்திருக்கிறீர்கள்? எப்படி, எப்போது நுழைந்தது இது? தமிழ்பேசும் மக்களிடையே சமஸ்கிருதம், லத்தீன், அரபி வழிபாடுகளைச் செய்யும் நீங்கள் யார் என்பதைக் கேட்க எனக்கும் ஆசை. ஆனால் இந்த நாடகத்தில் நான் பார்வையாளன், வசனமில்லை, எனவே மௌனித்திருக்கிறேன்.

லண்டனில், இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து நடக்கும் கூட்டத்தில், பெயரிடப்படாத எழுத்தாளரை, சுரையா சந்திக்கிறாள். பின்னர் பலமுறை நடக்கும் சந்திப்பில் அவளது கதையைச் சொல்கிறாள். அதுவே இந்த நாவல். சிறுமியாக டயானா கட் செய்து மகிழும் சுரையாவிற்கு, வீட்டிற்கு வெளியாள் வந்தால் தாவணி அணிய வேண்டும் என்பது பீவியின் நிர்ப்பந்தம். ஆட்கள் வந்தால் அவசரமாக தாவணியைத் தேடும் சுரையாவிற்கு, பின்னாளில் வீட்டில் உள்ளவர் மட்டுமல்ல, வெளியிலும் கண்களைத் தவிர மீதியுடலை மறைக்கும் பர்தாவை அணியக் கட்டாயப்படுத்துவார்கள் என்பதை யூகித்திருக்க வாய்ப்பில்லை.

மாஜிதாவின் ஊரான ஒட்டமாவடியே பெரும்பான்மைக் கதையின் களம். அந்த கிராமத்தில் மத்தியவர்க்க இஸ்லாமியக் குடும்பத்தின் வாழ்க்கை கண்முன் விரிகிறது. எவ்வளவு தூரம் பார்த்ததைச் சொல்கிறார் என்பது மாஜிதாவிற்கே வெளிச்சம். ஆனால் ஹயாத்து லெப்பையும், பீவியும் கண்முன் உயிருடன் நடமாடுகிறார்கள். இருவருக்குமிடையேயான வாதவிவாதங்கள் தாண்டி மறைந்திருக்கும் நேசம். காலையில் கடிதம் கொடுத்து, மாலையில் வீட்டைவிட்டு ஓடிய காதல் அல்லவா!

ஈரானின் குரல் இலங்கை மாவடியில் எதிரொலிக்கிறது. பர்தா அணிவது மதச்சடங்கு என்றாகிறது. பெண்கள் என்ன அணிய வேண்டும்? என்ன அணியக்கூடாது என்பதை மற்றவர்கள் எப்படிசொல்ல முடியும்? சுரையா போல், பர்தா அணிவதை வெறுத்துக் கீழ்படிய மறுப்பவர், கட்டாயத்திற்காக விருப்பமில்லாது அணிபவர், விரும்பியே அணிபவர் என்று பெண்களில் மூன்று பிரிவாகிறது.

மூன்று பிரிவிற்குமே வெளியில் இருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் இருக்கிறது, முகத்திரை விலக்கிய மாணவிகளின் கையில் பிரம்படி, பர்தா போட மறுத்த ஹீராவை எல்லோரும் விரோதியைப் போல பாவித்தது, பர்தாவை விரும்பி அணிந்து கொண்ட பர்ஹானா, இங்கிலாந்தில் நிறவெறித் தாக்குதலை எதிர்கொள்வது என்று அணிபவர், அணியாதவர் எல்லோருக்குமே சிக்கல். ஆனால் எல்லாச் சிக்கல்களும் பெண்களுக்கு மட்டுமே.

எல்லா மதங்களிலும் இயக்கம் என்ற பெயரில் வரும் தீவிரவாதக்குழு மொத்த சமுதாயத்தையும் பாழ் செய்கிறது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். எல்லா மதங்களிலும் இயக்கத்தில் இருப்பவரே உண்மையான மதவாதி, அவர் சொல்வதே வேதம் என்று கேட்டு நடப்பவர்கள் இருக்கிறார்கள். கடைசியில் பொது அமைதி கெடுகிறது.

சுரையாவின் வாழ்க்கை வாயிலாக பர்தா என்பதைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நாவலில் பதிவாகி இருக்கின்றன. கயிற்றின் மேல் நடக்கும் விளையாட்டில், தடுமாறாமல் மறுமுனை போய் சேர்கிறார் மாஜிதா. பர்தா மையக்கரு என்றாலும் மாவடி ஊரின் வாழ்க்கை பின்னணியில் வந்திருக்கிறது. பலநிகழ்வுகளில் அனுபவக் கதைகள் கலந்திருக்க வேண்டும். ஆரம்பகால எழுத்தில் இருந்து நல்ல தேர்ச்சி பெற்று விட்டார் மாஜிதா. மெல்லிய பகடி இவர் எழுத்தில் இழைந்தோடுகிறது. தங்கு தடையின்றி பாயும் மொழிநடை. அவரது சிறுகதைத் தொகுப்பை முந்திக் கொண்டு இந்த நாவல் வந்திருக்கிறது. பெண்ணியம், வேறு சித்தாந்தங்கள் ஏதுமின்றி எங்கள் தரப்பில் இவையெல்லாம் இடர் என்ற பார்வையை முன் வைக்கும் எழுத்து. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது. இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து மட்டுமல்ல, எல்லா சமூகங்களில் இருந்தும், குறிப்பாகப் பெண்கள் நிறைய எழுத முன்வர வேண்டும். பெண்கள் அதிகஅளவில் பங்குபெறாத எந்த இலக்கியமும் மரக்குதிரைச்சவாரி.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 200.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s