ஆசிரியர் குறிப்பு:
யாழ்ப்பாணம், மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முட்களின் இடுக்கில், வேருலகு, பிரண்டையாறு, அத்தாங்கு, உடக்கு முதலியன இவரது முந்தைய படைப்புகள். இது இவரது சமீபத்திய நாவல்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று சிறுவயதில் கேட்ட கதைகளில் இருந்து, தமிழில் கதைசொல்லல் வெகுதூரத்திற்குப் பயணம் செய்து வந்து விட்டது. போருக்கு முன்னும், பின்னுமான இலங்கையில் நடக்கும் கதை, ஆனால் போர் குறித்த ஒரிரு வரிகளும், தெருமுனையில் வெடித்த ஓலைப்பட்டாசு போல் கவனத்தை ஈர்க்காது அமைதியாகின்றன. இந்த நாவலின் நோக்கம் ஒரு அகப்பயணத்தை மேற்கொண்டு, போகும் வழியில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது.
நாவலில் பலரது கதைகள் இருக்கின்றன, ஆயின் அது வருடாந்திர சம்பவங்களால், வளர்ந்து கொண்டு போகாமல் தேடல்களால் நிரப்பப்படுகிறது. கத்தோலிக்கப் பாதிரியாய் இருந்த மரிசலின் மார்க்சியக் கொள்கைகளால் கவரப்பட்டு, மணவாழ்க்கையில் எதையோ தேடுகிறார். அவரது மகன் கமலன் இயக்கத்தில் இணைந்து விடுதலையைத் தேடுகிறான்.
நாகம்மாக் கிழவி கார்கோடனைத் தேடுகிறாள். நாவலின் மையக்கதாபாத்திரமான சடையனுக்கு சிறுவயதில் பலதேடல்கள் பின்னர் இயனியைத் தேடுவதில் முழுவாழ்க்கை முடிகிறது.
நாவல் அகப்பயணங்களில், பலரது கதைச் சுருக்கங்களில், உரையாடல்களில் நகர்கிறது. உள்ளே தேடல் தத்துவார்த்தமாகவும், புறத்தே சர்ரியல் காட்சிகள் நிகழ்வதும் இந்த நாவலின் தனித்தன்மை. Metaphors ஏராளமாக உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு நாகம் சில இடங்களில் காமமாகவும், கிழவி தேடுகையில் கடவுளாகவும் மாறுகின்றது. காட்டில் சிங்கத்தையும், புலியையும் அழித்தார்கள் என்று ஒருவரியில் நகர்வது சிங்கம் எதைக் குறிக்கும் புலி எதைக் குறிக்கும் என்பதைப் பொறுத்து விளங்கும்.
காந்தப்புலம் (Magnetic field) ஞானவெளியை ஈர்க்கப் பார்க்கிறது. இடையில் காதல் மலர்கிறது, பிரிவு ஏற்படுகிறது, போரினால் தொடர் இடப்பெயர்வு. ஆழ்மனம் தொடர்ந்து பயணம் செய்யும் போது தூல உடல் நிலைகொள்ளாது காட்டிலும் மேட்டிலும் நடந்து/ஓடிக் கொண்டே இருக்கிறது. காண்பன மறைகின்றன. மறைந்தவை தோன்றுகின்றன. இறந்தகாலமும் எதிர்காலமும் பாதைமாறி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. மொழிநடை பலநேரங்களில் வாய்மொழிக்கதை வடிவத்தைப் பின்பற்றுகிறது. சமீபத்தில் ஒரு இளைஞர் கன்னிமுயற்சியாக இதே போன்ற நாவலுக்கு முயன்றார். அவருக்குக் கூடிவரவில்லை, இவருக்குச் சித்தித்திருக்கிறது. தீவிர இலக்கியத்தில் பயிற்சிபெற்ற வாசகர்கள் ரசித்துப் படிக்கக்கூடிய படைப்பு.
பிரதிக்கு:
ஆதிரை வெளியீடு
விற்பனை உரிமை டிஸ்கவரி புக்பேலஸ்
99404 46650
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ.200.