ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல்.
நூலிலிருந்து:
” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான பலனை முடிவு செய்வது அந்தக் காலச்சக்கரமே. ஒரு போதும் அயராமல் சுழலும் அந்தச் சக்கரத்தின் சுழற்சியே காலமெனும் வெளி. அந்தக் காலவெள்ளத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் காரணகாரியங்கள் எங்குள்ளது என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் உணர்ந்து விட முடியாது. காரணமின்றி காரியங்கள் இல்லை. நன்றோ, தீதோ எப்படியிருப்பினும் செய்யும் கர்மங்களுக்கு விளைவுகள் இல்லாமல் போவதுமில்லை.”
மகாபாரதத்தைப் போல இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட இலக்கியம் வேறொன்றில்லை.
மகாஸ்வேதா தேவி, எம்.டி.வி, கார்வே, பைரப்பா போல ஏராளமானோர் எழுதி இருக்கிறார்கள். சசிதரூரின் Great Indian Novel மகாபாரத கதாபாத்திரங்கள் இன்றைய அரசியல் உருவங்களாக நடமாடும் புனைவு. லஷ்மி பாலகிருஷ்ணனும் மகாபாரதத்தின் ஒரு கண்ணியை எடுத்து மாலையாக்கும் முயற்சியை செய்திருக்கிறார். சித்ரா திவாகருணியின் மாஸ்டர்பீஸான The Palace of Illusion திரௌபதியின் கண்ணோட்டத்தில் மகாபாரதம். லஷ்மி, தன் நூல்களுக்கு பின்னால் வைக்கும் உழைப்பு, ஆய்வில் எனக்கு சித்ராவையே நினைவுறுத்துகிறார்.
இருவரும் வரலாற்றுப் புதினங்கள் எழுதுபவர்கள்.
வரலாற்றுப் புதினங்களுக்கும், புராணக்கதைகளுக்கும் பலவேறுபாடுகள் இருந்தாலும் முக்கியமான ஒற்றுமை ஏற்கனவே பதியப்பட்ட ஒரு விஷயத்தின் மீது
புனைவு கோபுரத்தை எழுப்புவது. அர்ஜூனனால் காண்டவவனம் எரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான நாகங்கள் அழிக்கப்படுகின்றன. அவனைப் பழிவாங்க கர்ணனை உபயோகிக்கிறான் அஸ்வசேனன். அர்ஜூனனின் வம்சாவளி பரிச்சித்து மகாராஜா நாகத்தால் கொல்லப்படுகிறான். இரு இனங்களுக்கிடையேயான பழிவாங்கவைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த நாவல்.
மானசா, பாற்கடலில் கயிறாக உதவிய வாசுகியின் தங்கை. அவள் மூலம் பிறக்கும் மகன், நாககுலத்தைக் காக்கிறான் என்பது மகாபாரதம் சொல்வது. மானசாவை அப்படி பிள்ளைபெறும் கருவி என்ற சிறிய வட்டத்தில் அடைக்காமல், அவளது விஸ்வரூபத்தைப் புனைவின் மூலம் காட்டியிருக்கிறார் லஷ்மி. மானசவிற்கு வடக்கே கோயில்கள் ஏராளம்.
சிறிய நாவல் இது. அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. தெளிவான மொழியாலும், சேகரித்து வைத்த தகவல்களைத் திறனாக உபயோகிப்பதாலும் சுவாரசியமானதாக மாற்றியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன்.
“ஆண்பெண் உறவென்பது துல்லியமான நியாய அநியாய நிர்ணயங்களுக்குள் அடங்குவதில்லை” என்று இவருக்குள் இருக்கும் உளவியலாளர் இடையிடை எட்டிப் பார்க்கிறார். வயதான பிராமணர் நூறு நிபந்தனைகளைப் போட்டு இளம்பெண்ணை மணக்கிறார். கருவைக் கொடுத்துக் காணாமல் போகிறார். கதை ஒன்றே. ஆனால் அது அங்கே முடிவதில்லை. பார்வைகளும் அதே போல் இருப்பதில்லை. அதற்குத்தான் பெண்கள் எழுத வரவேண்டும் என்று சொல்வது. லஷ்மியின் உழைப்பு நூலில் தெரிகிறது.
பிரதிக்கு:
பாரதி புத்தகாலயம் 044-24332424
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 130.
One thought on “மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :”