வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணம். விடுதலைப்புலிகள் கோலோச்சிய பகுதி. நிலம் எதுவுமறியாதது போல் அமைதியாக இருக்கிறது. பல இடங்களில் கண்ணிவெடி அச்சுறுத்தல் இருந்தது இங்கே தான். தமிழ்நாட்டில் கண்ணகிக்குக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை ஆனால் கேரளாவில் இருக்கிறது. அது போல் முல்லைத்தீவிலும் இருக்கிறது. வைகாசி பண்டிகையின் போது தண்ணீர் கொண்டு விளக்கேற்றுவார்களாம்.
முதல் நாள் இரவு எல்லோரும் உறங்கிய பிறகு தண்ணீரில் எண்ணெயைக் கலப்பார்களா என்னவோ நமக்கெதற்கு வம்பு!
முல்லைத்தீவு கடல். கப்பல்கள் வந்து போன கடலில் இப்போது மூன்று உடைந்த கப்பல்கள் தரைதட்டி நிற்கின்றன. உலகின் மிக நீண்ட கழிப்பறை எனக் குறிப்பிடப்படுவது இந்தக் கடற்கரையே. புலிகளின் நவீன ஆயுதங்கள் கண்காட்சிக்கு வைத்திருந்ததை பின்யோசனையில் அவர்களுக்குப் புகழ் சேர்த்தது போல் ஆகும் என்று எடுத்துவிட்டார்கள். ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல் போன்று தொழில்நுட்பத்தில் புலிகள் யாருக்கும்
பின்தங்கியவர்களல்லர். பொது மக்களில் மரணமடைந்தவர்களின் நினைவுச்சின்னம் கடற்கரை அருகே. ஏராளமான சகோதர சகோதரிகள் கீழ்உறங்கும் மணலுக்கு மேல் நாம் நிற்கிறோம். அவசரமாக கிளம்பியோர், புலிகள் புதைத்து வைத்த புதையலுக்கு வேலி போட்டு சிங்களராணுவபூதம் காவல் காத்துக்கொண்டிருக்கிறது.
வட்டு வாகல் பாலம் (புனிதப்பாலம்) ஆண்கள் பெண்கள் குழந்தைகள் காயம் அடைந்தவர்கள் என்று அவசரமாக ஊரைவிட்டு இந்தப் பாலம் வழியாகவே கடந்தனர். இடையில் லட்சங்களில் மனிதர்கள் காணாமல் போயினர். சிங்கள அரசு வெற்றியின் நினைவாக ராணுவவீரன் சிலையை நிறுவியிருக்கிறது. இந்தியஅரசு இல்லாது இந்த வெற்றிசாத்தியமில்லை.
The Memory Police என்ற Yōko Ogawa நாவல் அரசாங்கம் திட்டமிட்டு மக்களின் நினைவுகளை அழிப்பது பற்றிய கதை. இனஅழிப்புக்குக் காரணமானவர்களை இலங்கையில் மறக்கவில்லை ஆனால் தமிழ்நாட்டில் மறந்து போனார்கள். மறதியைப் போலொரு பெருநோயில்லை.
விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு அனுமதியில்லை என்கிறார்கள். முழுக்கவே ஆர்மி கேம்ப் என்கிறார்கள். பார்க்க வெகுவான ஆவல். திரும்பி வரும் வழியில் மறுமுறை முயலலாம். ஆனையிறவு புலிகளின் சரித்திரத்தில் மைல்கல். இரண்டாயிரம் சிங்கள ராணுவத்தினருக்கு மேல் உயிரிழந்ததும், பின் அரசாங்கம் பணிந்து பேச்சு வார்த்தைக்கு வந்ததும், ம்..ம்…..ம் அது ஒரு கனாக்காலம்.