கிளிநொச்சி நிறையவே மாறி இருப்பதாக உடன் வந்தவர்கள் அபிப்ராயப்பட்டார்கள்.
வைஜயந்திமாலாவை அவரது அறுபது வயதில் முதன்முதலாய் சந்தித்தது போலவே கிளிநொச்சியை வெகுதாமதமாய் 2023ல் முதலாகப் பார்க்கிறேன். கருணாகரன் சிவராசா நான் இங்கே வருவதற்கு முன்பே என்னைச் சந்திக்க ஆவல் என்று கூறியிருந்தார். அவரிடம் கிளிநொச்சி பற்றிய விஷயங்கள் நிறையவே கேட்டிருக்க முடியும். வெகு ஆவலாய் இருந்தேன். பஞ்ச சிவனார்களில் கோணேஸ்வரர், நகுலேஸ்வரர் ஆகிய இருவரைப் பார்த்துவிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரரைப் பார்க்காமல் போகிறீர்களே என்று யாரோ திரியைப் பற்ற வைத்ததால் இப்போது மன்னார் நோக்கிப் பயணம். தொண்டீசுவரம் Portuguese படையெடுப்பில் முற்றிலும் அழிக்கப்பட்டது.
உயிலங்குளம், பாலாவி தீர்த்தம் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் மன்னாரில். மாதோட்டம் தேவாரத்தில் பாடல் பெற்ற தலம். திருக்கேதீஸ்வரர், சோழர் காலத்தில் பிரபல்யமாக இருந்தவர். பின் மண்மூடிக் கோவில் அழிக்கப்பட்டு, சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு கோவில் மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது. மாதோட்டம் பகுதி மக்கள் 1993ல் சிங்கள ராணுவக்கொடுமைக்குப் பயந்து பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து பதினான்கு வருடங்கள் கழித்து மாதோட்டம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பதினான்கு வருடம் காடேகுவது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் போலிருக்கிறது.
முன்னேஸ்வரம், Chilawவில் இருக்கிறது. பஞ்ச ஈஸ்வரர்களில் நான்காவது. சிவனருகே வடிவாம்பிகா, பெயருக்கு முற்றிலும் பொருந்தும்படி. சிங்களப் பகுதியான இங்கே வரும் பக்தர்களில் தொன்னூறுசதவீதம் சிங்களவர்களே. மாதம்பை ஹலஹிட்டியாவ கலியுகவரத முருகன் கோவிலில் எல்லா சிலைகளுமே மெகா சைஸில். கலா ஸ்ரீரஞ்சன் இல்லாத நீர்க்கொழும்பை ஆரவாரமின்றிக் கடந்து சென்றோம். பிரமிளா பிரதீபன் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவரது மொத்தக் குடும்பத்தின் விருந்தோம்பலையும் அனுபவித்து விட்டு
கொழும்பு வந்து சேர்ந்தோம்.