இந்த வல்லினம் இதழ் கதைகள் அனைத்தும் புதியபடைப்பாளிகளின் பங்களிப்புகள். கடந்த ஐந்து வருடங்களுக்குள் எழுத ஆரம்பித்தவர்களைப் புதிய படைப்பாளிகள் என்று வரையறுத்தாலும் சிலருக்கு முதல்கதையும் இந்த இதழில் வந்திருக்கிறது.
இந்தக் கதைகளின் களங்களில் இருக்கும் Variety உண்மையில் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. Erectile dysfunction, lesbianism,
Zoophobia, survival instinct, தாந்தரீகம், super natural, ஆதிக்குடிகள் கதை என்று எத்தனை வித்தியாசமான கதைகள்! நவீனுக்கும் வல்லினம் ஆசிரியர் குழுவிற்கும் பாராட்டுகள்.
அனல் அவித்தல் – பாலாஜி பிருத்திவிராஜ்:
சிறுவயதில் கிராமத்தில் சாவுவீட்டுக்குப் போய் வந்த நினைவு மீண்டது இந்தக் கதையைப் படித்த போது. நுணுக்கமாக விவரங்கள், எந்த விசயத்தையும் விளக்காமல் சட்டென்று நகரும் மொழிநடை, சின்ன ஊரின் வம்புப்பேச்சுகள், இழவுவீட்டுச் சடங்குகள் என்று எல்லாமும் சேர்ந்து நல்ல கதையாக்கி இருக்கின்றன. தங்கமணி இந்தக் கதையில் கேட்காவிட்டாலும் கட்டத்தாத்தாவிடம் கண்டிப்பாக டிப்ஸ் கேட்பான். கட்டத்தாத்தா நல்ல ஒரு கதாபாத்திரம். வாசிக்க ஒரு நிறைவைத் தரும் கதை.
மரணக்குழி- ஜி.எஸ்.எஸ். நவீன்:
மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர் காலத்திய கதை. சூழல், காலம் வேறு ஆனால் ஒரே குழி ஒருவருக்கு வாழும் வேட்கையும் இன்னொருவருக்கு துறவு நாட்டமும் தருகிறது. மரணபயத்தை சொல்லும் வர்ணனைகளும், கூறாமல் சந்நியாசம் கொள்ளும் குழியடி சித்தன் கதையும் அழகாக syncஆகி வாசிப்பனுபவத்தை இனிதாக்குகின்றன. நவீன் நல்ல கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். ‘” குழிந்தரனின் கையை தன் வலதுகையால் இறுகப்பற்றிக் கொண்டு நடந்தான்” என்பது போன்ற பல வரிகளை ஏன் என்று யோசிக்காமல் படித்து முடித்தாலும் இது சுவாரசியமான கதை, ஒருவேளை கேட்டால் கதையின் அழகியல் கைவசப்படும்.
ம்ருகமோஷம்- விஜயகுமார்:
கதை எழுதியது யார்? நான் தான். படித்தது? நான் தான். விமர்சிப்பது? நான் தான். விமர்சனத்திற்கு எதிர்வினை செய்யாமல் இருப்பது?.அதுவும் நான் தான்.
வெண்நாகம் – ஹரிராஸ் குமார் ஹரிஹரன்:
Super Natural கதை போல நகரும் கதை சட்டென்று வேறு ஒரு வடிவம் கொள்கிறது.
கடைசி வரைக்கும் எழுத்தாளர் Gripஐக் கதையிலிருந்து விடாமல் பிடித்திருக்கிறார்.
சிலர் காதல் தோல்வி கதைகளை நாதழுதழுக்க சொல்லும் போது பார்த்திருக்கிறேன், கண்ணில் ஏராளமாக நீர்வடியும். நாம் நம்பாவிட்டால் என்ன, அவர் நம்புகிறார் இல்லையா. நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அணைத்தல்- அரவின் குமார்:
coincidence நிகழ்வுகளும் வாழ்க்கையின் Ironyயும் சந்திக்கும் கதை. நல்ல Presentation.
இந்தோனேஷியப் பெண்ணின் பணம் தான் Multiplier schemeக்குப் போயிருக்க வேண்டும்.
குமார் ஒரு சுவாரசியமான கேரக்டர். அதனால் தான் கன்னியம்மா அவனைப் பாயில் சுருட்டியிருக்க வேண்டும். எதிர்பாராத முடிவு. நல்ல கதை.
ஒப்புரவு- சிவமணியம்:
தமிழில் புதிதான கதைக்களம் இது. Take over subject. இளைஞன் சொல்வதில் சில Conceptகளில் இன்னும் Finetuning செய்திருக்கலாம். ஒரு முதலீடு செய்பவரின் பார்வை, எதிர்பார்ப்புகள் வேறு. அதிலும் இது Hostile take over. அதைத் தவிர்த்துப் பார்த்தால் முதல் சிறுகதையிலேயே ஒரு புதிய களத்தை, Subjectஐக் கொண்டு வருவது, Presentation எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆறஅமர எடிட் செய்து எழுதினால் இவரால் நல்ல படைப்புகளை அளிக்க முடியும்.
பூஜாஅன் ஹாத்திக்கு – ஸ்ரீவிஜி:
பரமேஸ்வரி வளர்ந்த சூழ்நிலையைக் கருத்தில் கொள்கையில் அவள் நடந்து கொண்ட விதம் புரிகிறது. எல்லா tomboyயும் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. அவள் அன்பைத்தேடிக் காமத்தில் அதைக் கண்டிருக்கக்கூடும். சரளமான மொழிநடையில் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லி முடிவை மாற்றிக்கொள்வதில் ஒரு யதார்த்தம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
சிறுத்தை – த.குமரன்;
மீண்டும் Super natural சாயலில் ஒரு கதை. மாலன் பாவம் ஏகமாக பயந்து போயிருக்கிறான். ஆரம்பிக்கையில் வரும் கதை சொல்லி கதாபாத்திரத்திற்கும், பிறகு வருவதற்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறது. காட்டுக்குள் நடப்பது வெகு இயல்பாக வர்ணிக்கப்படுகிறது.
வெண்ண புட்டு- பிரானா:
சிறுவர்கள் உலகம் வேடிக்கைகளில் சாப்பாட்டில் மூழ்குவது. பெரியவர் உலகம் லோகாதய உலகம், அதில் வரவு செலவு மட்டுமே உண்டு. கதையின் நடுவில் வரும் ஒப்பாரிப் பாடலும் கதையின் ஆரம்பவரிகளும் சிறப்பு.
காவல்காரன் – ப்னாஸ் ஹாசிம்:
வித்தியாசமான கதை. கையாண்ட மொழி கூட வித்தியாசமானது. ஏவல், தாந்தரீகம் எல்லாம் இந்து மதத்தில் மட்டும் தான் என்று நினைத்திருந்தேன். கதையின் முடிவில் கூட ஒரு டிவிஸ்ட். புதிய வாசிப்பனுபவம்.
செந்தாழை- முகம்மது ரியாஸ்:
ஜப்பானியர்கள் ஆக்கிரமித்திருந்த போது நடக்கும் கதை. ஒரு துரோகம் தான் கதைக்கரு என்ற போதும் ஏராளமான தகவல்கள் இந்தக்கதையில். யானை குறித்த தகவல்களும் கச்சிதமாய் பொருந்துகிறது. தங்கத்தைத் தாண்டிய போதை இந்த உலகில் வேறென்ன இருக்கிறது. பெண்களின் உள்ளுணர்வே அவள் அவனிடம் நடந்து கொள்வது. நல்ல கதை.
நட்சத்திரங்களின் வாக்குமூலம்- பிரசன்ன கிருஷ்ணா:
பழைய சம்பவம் கொஞ்சமாக நடப்பு கொஞ்சமாக மாறிமாறி சொல்லும் யுத்தி நன்றாக இருக்கிறது. Guilty conscious என்பது Ok ஆனால் அதற்கான காரணம் வலுவாகவில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு பரபரப்பைக் கடைசிவரை தன் வசம் வைத்திருக்கும் கதை.
உயிர்மரம்- பிரதீப் கென்னடி:
வாய்மொழிக் கதையை செந்தமிழ் வார்த்தைகளைக் கலந்து சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்தக் கதை. காட்டில் வாழ்ந்த சமூகத்தின் கதை புனைவில் விரிகிறது. நல்ல முயற்சி. நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.