ஆசிரியர் குறிப்பு:
பொறியியல் பட்டம் பெற்றவர். திரைப்பட இயக்குனர். இதற்குமுன் நான்கு நூல்களை எழுதியுள்ள, இவரது சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.
ஐந்து சிறுகதைகள் கொண்ட இந்த நூலின் தலைப்பு, கொஞ்சம் Misleading ஆகக்கூட இருக்கக்கூடும். கடவுளை நம்பாதவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். கடவுளை வேண்டி உருகிக் கேட்டுக்கொள்பவர்களைக்
கடவுள் மறக்காமல் கைவிடுகிறார். பயம் என்பது கடவுள் நம்பிக்கையாக மாறி இன்று பலகோடிகள் வியாபாரத்தில் வந்து நிற்கிறது.
கடவுளைத் தரிசித்த கதையில் வழமை போல் நடுத்தரவயதைத் தாண்டிய தம்பதிகளிடையே மனப்பிரிவு ஏற்படுகிறது. கணவன் ஆன்மீகத்தில் மூழ்கி முத்தெடுக்க அலைகிறான். மனைவி, K R Meeraவின் Qabar அம்மாவைப்போல மனிதர்களை விட பிராணிகளே மேல் என்று பறவை, விலங்குகளுடன் காலத்தைக் கழிக்கிறாள்.
யாருக்கு அகஒளி வாய்க்கிறது என்பது தான் கதை. தன்னுடைய நம்பிக்கை, ரசனைக்கே மனைவியும் மீதி காலத்தைக் கழிக்க வேண்டும் என்று கணவர்கள் விரும்புவதும், அதை மனைவிகள் வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்வதுமாகிய காலகட்டத்தில் அன்னம் வித்தியாசமானவள்.
மரணம் விரைவில் என்று தெரியும் பொழுது மீதி இருக்கும் வாழ்வை கொண்டாடிக் கழிப்பது என்பது ஆரோக்கியமான மனநிலை. கடவுளும் சாத்தானும் சதா சண்டையிட்டு யாராவது ஒருவர் சாகட்டும் என்று நம்வேலையைப் பார்ப்பது உசிதமான விஷயம். இருவேறு மதத்தினர் மணம் செய்யும்பொழுது விதி இடையே வந்து சிரிப்பதும், காலம் நெருக்கமானவர்களைப் பிரித்து, அந்நியர்களை நெருக்கமாக்குவதும் எப்போதும் நடப்பவையே. ஏன் என்ற கேள்விகளை வாழ்க்கையில் அடிக்கடி கேட்டுக் கொள்கிறோம்.
தரணி ராசேந்திரன் வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு வருகிறார். மொழியும் சரளமாக இருக்கிறது. ஆனால் இந்தத்தொகுப்பின் எந்தக் கதையும் ஒரு அழுத்தத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியது என்று சொல்ல இயலாமல் சென்டிமென்ட்கள் முன் வந்து நிற்கின்றன. இலக்கியத்தில் சென்டிமென்ட்களை மெலோடிராமா என்று சொல்வார்கள். தரணி ராசேந்திரன் நல்ல கதைகளுக்கு இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 160.