Hilary Mantel மற்றும் Anne Tyler இருவரும் 2020 புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற பெரிய எழுத்தாளர்கள். இருவருக்கிடையே நோபல் தவிர மீதமிருக்கும் எல்லா உயரிய விருதையும் வாங்கியுள்ளனர். புக்கர் இறுதிப்பட்டியலில் இருவருமே இடம்பெறாமல், நான்கு புதுமுக எழுத்தாளர்கள் அவர்களின் முதல் நாவல்கள் மூலம் பட்டியலுக்குள் வந்தனர். Hilaryன் எதிர்வினை “Disappointed but freed’. Anneன் எதிர்வினை ‘Relieved’.
நோபல், புக்கரின் இரண்டு பரிசுகள், அமெரிக்காவின் மதிப்புமிக்க விருதுகளான Pulitzer மற்றும் National Book Award என எல்லா உயரிய விருதுகளுக்குமே Nominations அனுப்பினால் மட்டுமே இடம்பெற முடியும். Nobel பரிசு வாங்கியவர் கூட புக்கர் போட்டியில் இடம்பெற வேண்டுமென்றால் நாமினேஷன் அனுப்பியே ஆக வேண்டும். இவர் இலக்கியதாதா என்ற விதிவிலக்குகள் எதுவும் இந்த விருதுகளில் அளிக்கப்படுவதில்லை.
எல்லா விருதுகளிலுமே அதைப்பெற தகுதியானவர் ஒருவருக்கு மேல் இருப்பார்கள். அதனால் யாருக்கு வழங்கினாலும் சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. நோபல் பரிசைப் பின்னணியாகக் கொண்டு Irving Wallace எழுதிய The Prize புனைவென்றாலும் கூட
பல செய்திகளை உள்ளடக்கியது.
மல்லாக்கப்படுத்துத் துப்பியது போல் ஞானபீடப்பரிசு அகிலனுக்குக் கிடைத்தது. இன்றும் கூட தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களைப் பார்க்கையில், ஐயோ சாக்கடையைத் தோண்டுகிறார்களே என்ற கலவரம் எழுகிறது. இவை எல்லாம் தான் தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டிய விசயங்கள்.
மறைந்து எழுபது ஆண்டுகள் கழிந்தும் இன்றும் புதுமைப்பித்தனைத் தேடிப்படிக்கிறார்கள், ஆச்சரியப்படுகிறார்கள், கர்வப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் கொள்ளும் கர்வத்தைவிட, இலக்கிய வாசகர்கள் கர்வப்படும்படியான படைப்புகளே முக்கியமானவை. அதை நோக்கியே என் பயணம் என்பதே எழுத்தாளர்களின் இலட்சியமாக இருக்க வேண்டும். தேடல் இல்லாது இலக்கியஎழுத்தும் இல்லை, வாசிப்பும் இல்லை. Margaret Atwood நோபலுக்கு முழுதும் தகுதியானவர், அவருக்குக் கிடைக்கவில்லை, அதனால் உலக வாசகர்கள் அவரைக் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. தமிழில் எழுதியதை வேறு மொழியினர் கொண்டாடும்படி எழுதியவர் கர்வப்பட்டால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. நான் மலையை வில்லா வளைப்பேன் என்று யாரேனும் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?