இஹ்சான் அப்துல் குத்தாஸ்:

எழுத்தாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர்.
தன்னுடைய எழுத்துகளுக்காக பலமுறை சிறை சென்றவர். பல நாவல்களையும், நூற்றுக்கணக்கில் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

அ.ஜாகிர் ஹுசைன் :

சென்னை பல்கலையில் அரபுத்துறை பேராசிரியர். திருக்குறள், ஆத்திச்சூடி உட்பட பல நூல்களை தமிழில் இருந்து அரபிக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

அரபியில் சமீபகாலத்தில் உலக இலக்கியத்தின் Main streamல் கலக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. 2019ல் அரபியை மூலமாகக் கொண்ட இரண்டு நாவல்கள் புக்கர் நீண்டபட்டியலில் இடம்பெற்றன.
Naguib Mahfouz 1988ல் நோபல் பரிசை வென்றார். இன்று Dunya Mikhail போன்றோர் தங்களது படைப்புகள் மூலம் உலக இலக்கியத்துடனான பெரிய இடைவெளியைக் குறைக்கப் பாடுபடுகிறார்கள். ஏற்கனவே அறுபது பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. தமிழை எடுத்துக்கொண்டால், சமீபத்தில் ஜான்சிராணி அரபுப்பெண் எழுத்தாளர்களின் கதைகளை
தமிழில் மொழிபெயர்த்தார். அரபியைப் பொறுத்தவரை பெண்களின் கதைகள் ஒரு சிறிய வட்டத்தைத் தாண்டவில்லை.

நானறிந்தவரை இஹ்சான் அப்துல் குத்தாஸ்ஸே ஆண் பெண் சமத்துவத்தைப் பேசும் முதல் ஆண் அரபி எழுத்தாளர். இவரது கதைகளில் பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு கதையில் ஆணுக்கு கற்பு இல்லையா என்று ஒரு பெண் கேட்கிறாள். இன்னொன்றில் இறைவன் ஆணா என்ற கேள்வி எழுகிறது. கணவன் வீட்டைவிட்டு வெளியேறி வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தினால் பெண்கள் போராடி குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வருகிறார்கள். முந்தைய தலைமுறை போல் மௌனமாக ஏற்றுக்கொள்ளாமல் கணவனை மீட்கப் போராடுகிறார்கள்.

அப்துல் குத்தாஸ் பலவிதமான கதைக்களங்களை இந்தத் தொகுப்பில் கையாண்டிருக்கிறார். சிறிய வட்டத்திற்குள் சுற்றிவரும் பெண்எழுத்தாளர்கள் கதைகளில் இருந்து வேறுபட்ட கதைகள். பள்ளிகொண்டபுரம் நாவலில் வருவதைப் போல் கணவனின் சந்தேகம் மனைவியைக் காதலனிடம் கொண்டு சேர்க்கிறது. இறந்த உடன் சொர்க்கத்திற்கா இல்லை நரகத்திற்கா அனுப்புவது என்ற விசாரணைக்கதைகள் சில இருக்கின்றன.
மனைவியின் தவறான உறவை ஆதாரத்துடன் நிரூபித்த நண்பனைக் கொலைசெய்பவன், அறியாமை எனும் மகிழ்ச்சியில் இருந்து உண்மை எனும் துன்பத்திற்குக் கூட்டிச்சென்ற பாவி என்கிறான் கணவன். நீரும் நெருப்பும் திரைப்படம் போல மகள் அனுபவிக்கும் எல்லா உணர்வுகளையும் அம்மாவும் அனுபவிக்கிறாள்.

குறுகிய காலத்தில் அரபி இலக்கியத்திற்கான முழுத்தொகுப்பு இரண்டாம் முறையாகத் தமிழுக்கு வருகிறது. பிற்போக்கான சிந்தனைகள், மதக்கட்டுப்பாடுகள், தணிக்கை மற்றும் அரசியல் நிர்பந்தங்கள் அரபு இலக்கியத்தை உலக வாசகர்களிடம் இருந்து ஒதுக்கியே வைத்திருக்கின்றன. அரபியில் சிறந்த எழுத்தாளர் என்று கருதப்படும் அப்துல் குத்தாஸ் இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை சராசரிக்கும், அதற்குக் கீழாகவுமே கதைகளை எழுதியிருக்கிறார்.
புக்கர் போன்ற பட்டியல்களில் இடம்பெறும் தரமுடைய அரபி மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழுக்கு நேரடியாக அரபியிலிருந்து வரவேண்டும் அவையே அரபி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒரு சிறிய அறிமுகமாக அமையக்கூடும்.

பிரதிக்கு :

காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.175.

Leave a comment