ஆசிரியர் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிகிறார். இதற்கு முன் வெளிவந்த,
இவரது பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற நாவலும் நூறு ரூபிள்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும், பலத்த வரவேற்பைப் பெற்றன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஆதவனின் சிறுகதைத் தொகுப்பை என்னிடம் வாங்கிச் சென்ற பெண், அவசரமாகத் திருப்பித் தந்தார். அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆதவன் எல்லோருக்குமான எழுத்தாளர் இல்லையென. சில கதைகளைப் படிக்கையில் ஆதவன் நினைவுக்கு வந்தார், குறிப்பாக ஓர் அயல் சமரங்கம், ஏவாளின் ஆதாம்.. முதல் கதையை ஆதவன் படிக்க நேர்ந்திருந்தால் புன்னகைத்திருப்பார். ஒரு Restlessnessஐச் சொல்லவரும் கதையில் எத்தனை நுணுக்கங்கள்!

ஆண் பெண் உறவுகள், பெரும்பாலும் சீட்டுக்கட்டு கோபுரங்கள். எல்லாம் இனிமையாகப் போய்க் கொண்டிருக்கையில் காதல் இனிது,
பிரச்சனைகள் தான் உறவின் தீர்க்கத்தை பரிசோதிக்கும் தேர்வுகள். உறவுச் சிக்கல்கள் மயிலன் அடித்து ஆடும் களம். ஐ- பில், ஆகுதி, ஔபத்யம், ஏவாளின் ஆதாம் ஆகிய கதைகள் உறவுச்சிக்கல்களை மையப்படுத்துபவை.. ஏவாளின் ஆதாம் தமிழில் அதிகமாக வராத கதைக்களம், ஒரு சிற்பி நேர்த்தியாக செதுக்குவது போல் இந்தக் கதையைச் செதுக்கியிருக்கிறார்.

நிதர்சனத்தை எந்தசார்புமில்லாது யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒற்றைமனை போல் ஒரு கதையை எழுதுவது வெகுசிரமம். மேலோட்டமாக பார்க்கையில் புறக்கணிப்பு, காம்ப்ளக்ஸ் என்பதோடு முடிவதாகத் தோணும் கதை, வீடியோ காரை விபத்துக்குள்ளாக்காமல் சேர்க்கும் லாகவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. நிலம் விற்றல், வாங்கல் என்ற பரிவர்த்தனையைத் தாண்டி கூத்தபெருமாள் அவசரமாக மறுப்பது, சுதாகர் எதையும் Visualஆகப் பார்ப்பது என்று இந்தக்கதையில் பல மின்னல்கள். சாதிப் பிரிவினைகள், இருதரப்பில் இருந்தும் பல கதைகளில் அலசப்படுகிறது.

சார்வாகன் தொழுநோய் குறித்து கதை எழுதியிருப்பதாக என் நினைவில் இல்லை. ஆனால் இவருடைய இந்தத் தொகுப்பில், மருத்துவத்தைப் பின்ணணியாகக் கொண்ட,
ஓர் அயல் சமரங்கம், ஆகுதி, உலர், அன்நோன் போன்ற கதைகள் வந்துள்ளன. கதைக் கருக்கள் வேறு ஆனால் மருத்துவம் குறித்த தகவல்கள் கதையின் அழுத்தத்தை அதிகரிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன.
ஆகுதி, அன்நோன் முதலியவை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே Authoritativeஆக எழுதக்கூடியவை.

உயிர் எழுத்துக்களை கலைத்துப் போட்டது போல் பன்னிரண்டு கதைகளின் தலைப்பின் முதலெழுத்து உயிரெழுத்து. கதையாகச் சொல்லப்படுவதைத் தாண்டி ஒரு Intensityஐ சம்பவங்கள், உரையாடல்கள் மூலமாக அதிகப்படுத்துவதில் மயிலன் வெற்றி பெறுகிறார். ஆகுதி கதையை உதாரணமாகச் சொல்லலாம். புதிதாக வரும் மருத்துவர்கள் மரத்துப்போகாமல் உயிர்ப்புடன் இருப்பது, அழகான பெண்கள் எல்லாத்துறையிலும் Level playing fieldன் சமநிலையைக் குலைப்பது, மோகனா- ராஜூக்கிடையேயான Love and hate relationship, நோயாளியின் உயிருள்ள உடல் பயிலும் களமாவது போன்ற ஏராளமான விசயங்களைப் பேசினாலும், கௌரவமே முக்கியம் என்ற மத்தியவர்க்க மனப்பான்மையைச் சொல்லவரும் கதையின் அழுத்தத்தைக் குறைக்கவேயில்லை. தொகுப்பில் Odd man out என்று இடர் கதையை மட்டுமே சொல்ல வேண்டும். அகச்சிடுக்குகளை தத்ரூபமாக, in depthஆக எல்லோராலும் கதைகளில் வடிக்க முடிவதில்லை. மயிலன் அதை எளிதாகச் செய்வது போல் எனக்குத் தோன்றுகிறது. அவசியம் வாசிக்கவேண்டிய தொகுப்பு இது.

பிரதிக்கு :

தமிழினி 86672 55103
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.240.

Leave a comment