ஆசிரியர் குறிப்பு:

கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஒன்பது கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு தொகுப்பு, ஒரு குறுங்கதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். இது இவரது இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பு.

அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றில் கணவன் குழந்தைக்குத் திருத்தி திருத்திக் கடைசியில் அவனை அறியாமல் மனைவியிடம் ரிஷ்கா என்பான். நானும் அவ்வாறே தமிழின் பல குறுங்கதைகளைப் படித்து இப்போது ரிஷ்கா என்று சொல்லப் பழகிக் கொண்டேன். ஆனால் உண்மையிலேயே பெருந்தேவியின் இந்தத் தொகுப்பின் பெரும்பான்மைக் கதைகள் குறுங்கதை Formatல் கச்சிதமாகப் பொருந்துபவை.

வெளியாள் Mass hysteria பற்றிய கதை. கழுவேற்றப்பட்டவள் Fantasy. விரல்கள் Magical realism. எதனாலோ LGBTQ. மால் Scifi கதை. இப்படியே விட்டால் இந்தக் கதை ஜப்பானில் ஒரு காலத்தில் உண்மையாகிவிடும். கடைசியில் கதை Dystopian. நெருக்கத்தை அனுபவித்தல் காம உணர்வேயின்றி fantasize செய்தல். 15ரூ 50 காசு Gothic comedy. ஹனி ஒரு zoophilia கதையாக முடியும் என்றே நினைத்தேன். ஆனால் கடைசியில் வரும் Twist. பெருந்தேவியின் கதைகளில் Varietyக்குப் பஞ்சமேயில்லை.

எழுதப்படாத விஷயங்கள் அன்றாட வாழ்வில் எவ்வளவோ இருக்கின்றன. இலக்கியம் பேசும் அழகில்லாத பெண்ணிடம் உறவுகொள்ள முயன்று தோல்வியடைவதை ஆதவன் எப்போதோ எழுதி விட்டார். தமிழ்நதி முதியவன் இளம்பெண்ணிடம் உறவில் திணறுவதைப் பகடியாக எழுதி இருப்பார். பெருந்தேவியின் படமானவர்கள் அதே பிரச்சனையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கிறது. ஒவ்வொரு பெண்ணுமே எப்போதேனுமாவது எதிர்கொண்ட விஷயம் இது. கதைகளில் கொண்டு வர விருப்பமில்லாதது தான் பலவும் எழுத்தில் வராமையின் காரணம்.

புதுமைப்பித்தனின் துரோகம் கதையில் ஆதவன் அவரை செய்த பகடி வேறு. புதுமைப்பித்தனுக்குச் சிலை கதையில் அவரை வைத்து தமிழ்வாசகர்களை பெருந்தேவி செய்யும் பகடி வேறு. மகாமாசானத்தில் வரும் மாம்பழக்காரிகள் நின்ற இடத்தில் சிலை என்ற வரி Goosebumbsஐ ஏற்படுத்தியது. அங்கிருந்து பார்த்தால் அந்தக்குழந்தை கண்ணுக்குத் தெரியும் தானே!

தலைப்புக்கதையில் மெஜண்டாவே பூசிரலாம் என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. வாசகர்களுக்கு உதவ கடைசிப்பத்தி. நலவிசாரணை அவசர Chattingல் பொறுமையின்மை. இந்திய தாம்பத்யத்தின் monotony கொசு கதை. மானுடவியல் மனிதனின் அரசியல் மற்றும் குறிப்பெடுத்தலின் அபத்தம். செல்லம் போன்ற கதைகள் பெருந்தேவி தவிர்க்க வேண்டிய கதைகள்.

கடைசிக் கதையான இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். முதலாவதாக இதில் Autobiographical shades இருக்கிறது. கும்பகோணத்தருகே குக்கிராமத்தில் இவர் சில மாதங்கள் இருந்தார். அடுத்து நாம் பார்க்கும் மயில் வேறு, அது ஒய்யாரமாகத் தெரிகிறது, ஆனால் அதன் நிலைமை அதற்கு மட்டுமே தெரியும். அதை அப்படியே பெண்ணாக உருவகப்படுத்தி…….. சரி வேண்டாம். தலைமுறை இடைவெளியைச் சொல்லும் கதை இது. ஆனால் இரண்டு விஷயங்கள் இதில் முக்கியமானவை. முதலாவது, அத்தை, பசங்க மட்டுமில்லை, பொதுவாக எல்லோருமே நம்மை அறிவாளிகளாக நினைத்துக் கொள்கிறோம். மயில் அகவினாலும், கத்தினாலும் ஒரே செய்தி தான் அடுத்தவரைப் போய்ச்சேரப் போகிறது. அடுத்தது கேட்பதில் யாருக்கும் ஆர்வமில்லாது. எல்லோரும் ஆசான். எல்லோருக்கும் யாருக்காவது எதையாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

முப்பத்தி மூன்று குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு நேர்த்தியாக வந்திருக்கிறது. பெருந்தேவியின் மொழி நான் எப்போதுமே பார்த்து வியக்கும் ஒன்று, குறுங்கதைகளுக்கு அது மாப்பிள்ளை விநாயகர் சோடாவின் கோலிக்குண்டு போல கனகச்சிதம். இன்னும் கூட சில கதைகளில் வாசகருக்குப் புரியாமல் போய்விடக்கூடாது என்று சிலவரிகளைப் பெருந்தேவி சேர்த்தது போல் எனக்குத் தோன்றுகிறது. அது தேவையில்லை. தேனை இனிக்கும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் இவர்களும் எழுதுகிறார்கள் என்று நான் பார்த்து மகிழும் எனது சிறியபட்டியலில் பெருந்தேவியும் இருக்கிறார்.

பிரதிக்கு:

காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 120.

Leave a comment