என்.சந்தியா ராணி:
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வரலாறு, இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
ஊடகங்களில் பணியாற்றியவர். இதுவரை ஒன்பது நூல்களை எழுதிய இவரது சமீபத்திய பயணநூல் இதது.
கே.நல்லதம்பி:
மைசூரில் பிறந்து, வளர்ந்தவர். தனியார் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஏராளமான நூல்களை கன்னடத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்தவர்.
கர்நாடக சாகித்ய அகாதமி என்பது மாநிலஅரசின் நிதிஉதவியில் நடக்கும் நிறுவனம். பத்துகோடிக்கும் குறையாது ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு அரசிடம் இருந்து நிதிபெறுகிறது. இந்த ஆண்டில் மட்டும் நூற்றுஅறுபத்தெட்டு கன்னட நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இந்த நூல், கர்நாடக சாகித்ய அகாதமி நிதிஉதவியில் சென்ற பயணத்திட்டத்தின்படி எழுதப்பட்ட நூல். இது தவிர Kannada Sahitya Parishat போன்ற பிற இலக்கிய அமைப்புகளும் கன்னட இலக்கியத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நாம் என்ன செய்கிறோம் என்பது உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.
கடலை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதற்காகவே மற்ற சங்கடங்களை சகித்துக் கொண்டு சென்னையில் இருப்பவர்களைத் தெரியும்.
சென்னையின் கரையை நனைக்கும் வங்காளவிரிகுடா, பாண்டியில் Auro Beach, Serenity Beach, Paradise Beach முதலியவற்றை உருவாக்கி இருக்கிறது.
பெண்கள் தனியாகப் பயணம் செய்வது குறித்து இவர் எழுதியிருக்கும் விஷயம் முக்கியமானது. ஆண்களை விடப் பெண்கள், குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையுடனேயே எப்போதும் இருப்பதால் தனிப்பயணத்தில் அந்த உபரிஎடையைத் தூக்கிச் செல்லும் நிர்ப்பந்தம் இல்லாது போகிறது.
பாண்டிச்சேரி எப்படி உருவானது என்பதை பல்லவ,சோழ காலத்தில் இருந்து விளக்கமாகச் சொல்லி விட்டு, அதில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த குறிப்புகளைச் சொல்கிறார். பாண்டிச்சேரி, வங்காளம், தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் எல்லைகளில் இணைவதால் கலவைக் கலாச்சாரம் கொண்டது. பிரெஞ்சு பாதிப்பு இன்னும் அதிகம். உணவுகள், குட்டிக்கதைகள், பல கவிஞர்களின் கவிதைகளில் ஒரிரு வரிகள் என்று பயணநூலை சுவாரசியமாக்கி இருக்கிறார். KGFல் வளர்ந்தவர்களுக்கு கன்னடம், தெலுங்கு, தமிழ் சரளமாக வரும். அதனால் மொழிப்பிரச்சனை இல்லை. சில நாட்களே தங்கியிருந்தாலும் பாண்டிச்சேரியை முழுமையாகச் சுற்றியிருக்கிறார்.
கர்நாடகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு மட்டுமல்ல, இது போன்ற பல மாநிலங்களுக்கு கன்னட எழுத்தாளர்களை அனுப்பி, கன்னடத்தில் நூல்கள் வெளியிடுகிறார்கள். போகாத ஊர்கள் குறித்தும் பல தகவல்கள் நூல் மூலம் அவர்களை வந்து சேரும். அழகிய பெண்களை முதலில் பார்க்கும் பிரமிப்பு நாளாக ஆகக் குறைவதற்கு எதிர்த்திசையில் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு பணியைப் பார்க்கப் பார்க்க அதிகரிக்கிறது. இந்த நூலிலேயே அடுத்து இவரிடமிருந்து விரைவில் வரவிருக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கு நான்கு, கன்னடத்தில் இருந்து தமிழுக்கு ஏழுநூல்கள் குறித்த குறிப்பும் இருக்கிறது. பின் பிரமிப்பு ஏற்படாமல் எப்படி இருக்கும்?
பிரதிக்கு:
அகநாழிகை 70101 39184
முதல்பதிப்பு நவம்பர் 2022
விலை ரூ. 180.