Where the Crawdads Sing என்ற நாவலை அதன் ஆசிரியரே எதிர்பார்த்திருக்க மாட்டார், எழுபது வயதில் அவரது முதல் நாவல். உலகம் முழுதும் வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வெளியாகி ஐந்தாவது வருடத்திலும் விற்பனையில் சிறந்த பத்து நூல்கள் பட்டியலில் இருக்கிறது. இந்த அபாரமான வெற்றி, எழுத்தாளருக்கு ஒரு சோதனையையும் கொண்டு வந்தது. பல வருடங்கள் முன்பு, அவரது ஜாம்பியா பண்ணையில் அத்துமீறி நுழைந்த ஒருவர் கொல்லப்பட்டது காமிராவில் பதிவாகி, எழுத்தாளரின் சாட்சியத்தின் பேரில் கேஸ் மூடப்பட்டது. ஆனால் இந்த நாவலின் கதாநாயகி ஒரு கொலையை சாமர்த்தியமாகச் செய்து விட்டு தப்பித்தது, இவருடைய Subconscious என்று பழைய வழக்கைத் தூசி தட்டித் திரும்ப விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள்.

இப்போது டால்ஸ்டாயின் இந்த குறுநாவலுக்கு வருவோம். டால்ஸ்டாயின் நாட்குறிப்புகள், அவரது சொந்த வாழ்க்கை பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் எல்லாவற்றையும் படித்தால், இந்தக் கதையின் நாயகன் யூஜின் தன் பண்ணையைச் சேர்ந்த ஒரே பெண்ணிடம் விளையாடியது போல் டால்ஸ்டாய் நிறுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவரும். இந்த நாவல் 1889ல் எழுதப்பட்டு, கையெழுத்துப் பிரதி, ஒளித்து வைக்கப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து இந்த நாவலின் சுயசரிதைக் கூறுகளை நம்மால் கண்டுபிடிக்க முடியும் பொழுது, கூடவே அத்தனை ஆண்டுகள் வாழ்ந்த சோபியாவால் கண்டுபிடிக்க முடியாதா என்ன? நாவல் அவர் இறந்த பின் 1911ல் வெளியாகிறது.

காதலும், காமமும் மிதமிஞ்சிப் போகையில் ஒருவரை ஆட்டிவைக்கும் சாத்தான்கள் அவை. யூஜினைப் போல நாம் தான் எதிரிருக்கும் பெண்ணோ அல்லது ஆணோ சாத்தான் என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு மனிதனைக் குழிதோண்டிப் புதைக்க வல்லவை இவையிரண்டும். தனிமனிதனை அல்ல சாம்ராஜ்ஜியத்தையே தடம்புரள வைக்கும் சக்தி வாய்ந்தவை. காதல் ஒருவனை எந்த அளவு மாற்றும் என்பதற்கு Wuthering Heights, காமத்திற்கு The Devil. இந்த இரண்டு நாவல்களுமே மறக்க முடியாதவை.

யூஜினை எடுத்துக் கொள்வோம். இருபத்தாறு வயதில் அவன் வழக்கறிஞர் சொன்ன எளிய பாதையை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. தாத்தா காலத்திய பெருமையைத் திரும்பக் கொண்டு வரப் பாடுபடுகிறான். கடனுக்கு ஆவணம் இல்லை என்று திருப்பித்தர மறுப்பதில்லை. அம்மா சொல்லியது போல் செல்வந்தர் வீட்டில் பெண் எடுக்க முனையவில்லை. மனைவியே என்றாலும் பணத்திற்கு நிலத்தை அவளிடம் அடகு வைக்கிறான். எரிச்சலேற்படுத்தும் மாமியாரை மனைவிக்காக சகித்துக் கொள்கிறான். இவனை விட Perfect ஆக யார் இருக்க முடியும்? ஆனால் காமம்…… அவனைச் சின்னாபின்னப்படுத்துகிறது.

ஸ்டெஃபனிடாவின் Loose morals யூஜினுக்குத் தெளிவாகத் தெரிந்ததே. அவளது Adventuresல் பாதியாவது யூஜினுக்குத் தெரியும். நியாயமாகப் பார்த்தால் ஒரு வெறுப்பு, அசூயை தானே வந்திருக்க வேண்டும். அதையும் தாண்டிய அவள் மீதான Obsession. அதை உணரத்தான் முடியும், அடுத்தவர்களுக்கு விளக்க முடியாது. இரண்டு முடிவுகள் இந்தக் கதைக்கு. யோசித்துப் பார்த்தால், இரண்டில் ஒன்று தான் ஆகியிருக்க வேண்டும்.

டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாதது. ஒரு உன்னதமான கலைஞன் சிறிய நாவலைக்கூடக் காலத்தை வென்று நிற்கவைக்க முடியும் என்பதன் சான்று. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே
Realism என்பதற்கு டால்ஸ்டாயை விட வேறு யாரையும் சொல்வதற்கில்லை. மேம்போக்கில் ஒரு மனிதனின் கதையைச் சொல்வது போன்ற சிறிய நாவலிலும், Backdrop ஆக அக்காலத்திய சமூகம் கலந்து வந்திருக்கிறது. கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பை எப்போதுமே எனக்கு நெருக்கமாக உணர்வேன். இது போல பல நூல்கள் அவர் மொழிபெயர்க்க வேண்டும்.

பிரதிக்கு:

கனலி 90800 43026
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 120.

Leave a comment