ஆசிரியர் குறிப்பு:

கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கப் பல்கலையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
குறுங்கதைகள், மொழிபெயர்ப்பு போன்ற துறைகளிலும் பங்காற்றும் இவரது ஒன்பது கவிதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

தலைப்பிலேயே இருக்கும் நுட்பமான பகடி பெருந்தேவிக்கே சொந்தமானது. ஆண்கள் Blush பண்ணுவது அபூர்வம். இதில் செவ்வரளியின் சிவப்பு போதாது என்று ஹைப்ரிட் Varietyஐத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தக்கவிதை ஒரு Dark humour. அதுவல்ல பிரச்சனை. இந்த வரிகளில் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு அற்புதமான தேர்வு!
நல்ல கவிஞர்களிடம் வார்த்தைகள் சேவகம் செய்யும் என்கிறார்களே, உண்மையா?

” ஆயிரங்கால் மழை பெய்யத்
தொடங்குகிறது நிதானமாய்
குழந்தை தளர்நடை நடக்கிறான்
பாதம் முழுக்கச் சேறு
வேகமாக நடக்கத் தெரியவில்லை அவனுக்கு
இறந்தபின் யாரும் வளர்வதில்லை”

முழுக் கவிதை சொல்லும் விஷயம் வேறு. நினைவூட்டல்களுக்கும், அவை தேவைப்படாத இடங்களுக்கும் இடையே பெண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருப்பதன் அசூயை. பெருந்தேவியின் கவிதைககள் அதிகம் பயணப்படாத பாதைகளைத் தேர்ந்தெடுத்துச் செல்லும். இதில் அவன் ஏன் போக வேண்டும், ஏன் விட்டுச்செல்ல வேண்டும் என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்.

” நீண்ட உறவுக்குப் பின்
நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது
சென்றுவிடும் ஒரு காதலன் எனக்கிருந்தான்
அதில் பிரச்சனையில்லை ஆனால்
ஒவ்வொரு முறையும் அவன் சென்றபின்
அவன் விட்டுச்சென்ற Condom
என் பாதத்தில் இடறும்
தூக்கம் கலைந்துவிடும்
தூக்கத்தின் முன்பான அமிழ்தம்
கசந்து போய்விடும் …… “

சென்னையைக் கணவனாகவும், பிடித்த ஊர்களைக் காதனாகவும் உருவகம் செய்யும் பெண். Guilt என்பது ஆண், பெண் இருவருக்கும் சமம். சில பெண்கள் கணவனிடம் அப்பாவியாகப் பேசுகையில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன், எப்படி இவர்களால் முடிகிறதென்று. அது இப்படித்தான்:

” சென்னைக்குத் திரும்பிய அன்று
அன்று மட்டும்
ஜன்னலுக்கு வெளியே பார்க்காமல்
கண்களைத் தாழ்த்திக் கொள்வேன்
சென்னையிடம் சொல்வேன்
அப்படி எதுவும் நடக்கவில்லை
உன் சாந்தோம் கடற்கரையைக் காட்டிலும்
அகன்ற நெஞ்சம்
வேறு யாருக்குமில்லை
வழக்கமாகப் பொய்சொல்லும் பெண்ணின்
வழக்கமான பொய்யை நம்பும்
கணவனின் மந்தகாசச் சிரிப்புக்கு
நிகர் எதுவுமேயில்லை”

இது போல் எத்தனை காதல்கள் நமக்கும்? அதையெல்லாம் எழுதினால் எப்படியும் மிஸ் யூவின் அளவில் முக்கால் பங்கு வரும். இவருக்காவது தனிமை, வேறு தொந்தரவில்லை, நாம் இன்னைக்கும் வாங்கிட்டு வரலையா என்ற வீட்டின் பழகிய குரலைக் கேட்டதும், வெகுநேரம் அடக்கி வைத்த சிறுநீர் வெளியேறுவது போல காதலும் கழிந்துவிடும்.

” வானம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருந்த
கண்ணாடிக் கூரைக்கு அடியில்
கை கோர்த்துக் கொண்டோம்
மீன் மாதிரியே
சோயாவில் செய்த மீனை
ஒரே முட்கரண்டியால்
பிய்த்தபடி
ஒருவர் கண்ணை
மற்றொருவர்
தின்றபோது
காதல் மாதிரியே இருந்தது
இங்கிருந்து கிளம்பும் போது
என் கன்னத்தில்
கண்ணீர் மாதிரியே
கண்ணீர் ஓடும்
அதன்பின்
அடியும் மூடியுமற்ற
என் கனத்த உருளைக்குத்
திரும்புவேன்
நிஜமான
கரப்பான் பூச்சிகளைத் தவிர
வேறேதும்
மயிர்க்கூச்சம்
தராத
என் தனிமைக்கு”

Anti-Poetry என்பது வழக்கமான சந்தங்கள், மான்விழி இத்யாதிகள் இல்லாதது மட்டுமல்ல, பாடுபொருளே அதில் வேறு. இப்போது கடைசிக் கவிதையை எடுத்துக் கொண்டால், இதில் உணர்வுகள் இல்லாமலில்லை. கண்ணீர் வரை வந்துவிட்டு வாழ்க்கை Uturn செய்து பழையநிலைக்கே திரும்புகிறது. இதுவே நிதர்சனம். One night standஐ வைத்துக் கூட அழகான எதிர்கவிதை எழுதலாம். Call boyக்கும் காதலனுக்கும் செயல் வேறுபாட்டின் தன்மைகளைச் சொல்லலாம். அவலநகைச்சுவை, சமூகப்பொறுப்பு இல்லை என்ற விமர்சனங்களில் உண்மை இருந்த போதிலும் ஞானக்கூத்தனின் “அம்மணி தங்கள் மேனி சிந்தினால்
யாருக்காகும்?” என்பது எதிர்கவிதை.

பாரம்பரியமான கவிதைபாணியை எதிர்ப்பது எதிர்கவிதை என்றாலும், எதிர்ப்பவை எல்லாமே எதிர்கவிதையாகாது. அதற்கு Classic Example ஆக இந்தக் கவிதையைச் சொல்லலாம். உணவு விடுதியுடன் திரும்பாது, தனியறைக்குப் போயிருந்தாலும் கூட, கடைசியில் அவள் உருளைக்குத் திரும்புதல் உறுதி. கரப்பானைப் பார்த்துப் பயப்படும் தனிமை நிஜம். இக்கவிதைப்பெண், இருபத்திஒன்றாம் நூற்றாண்டில், பொருளாதார சுதந்திரமும், ஒழுக்கவிழுப்ப சுதந்திரமும் கொண்ட பெண்.
அவளை அசலாகப் பிரதிபலிப்பதாலேயே, காலங்காலமாக தலையில் சுமந்து வந்த, காதல் புனித்துவமூட்டையை இறக்கிவைத்து விட்டு வந்ததாலேயே இது எதிர்கவிதை.

பெருந்தேவி மொழியில் தொடர்ந்து பரிசோதனையில் ஈடுபடுபவர். Academic என்ற மீன்வலையில் இருந்து தப்பித்த மீன். (பண்டிதர்களைப் பார்த்தாலேயே எனக்குத் தொடையெல்லாம் நடுங்குகிறது). பகடி இவருக்கு இயல்பாக வருகிறது, செடிகள் கால்மேல் கால் போட்டுக்கொள்வதில்லையா என்ன! கவிதைகளில் இருக்கும் Universal touch காரணமாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அனைவரும் அப்படியே புரிந்துகொள்ள ஏதுவாகும் கவிதைகளைத் தமிழில் எழுதுபவர்கள் வெகுகுறைவு. பெருந்தேவி அந்தப் பட்டியலில் வருபவர்.

பிரதிக்கு:

Zero degree publishing 89250 61999
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 120.

Leave a comment