ஆசிரியர் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு ஊழியர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து எழுதிவரும் இவரது முதல் நூல் இது.
உலக அளவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் என்றால் ஆண்களே அதிகம். ஆனால் வாசிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டால் மூன்றில் இரண்டுபங்கு பெண்களே. அதே போல், எல்லா நாடுகளிலுமே எழுத்தாளர்களில் பெண்களின் சதவீதம் அதிகம். தமிழில் Serious writing என்றால், பெண்களின் எண்ணிக்கை இன்றும் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பது உண்மையில் துர்பாக்கியம். இந்த சூழலில்,
இலக்கியத்தில் விருதுப்பணம் என்ற வகையில் உலகின் உயரிய விருதாகக் கருதப்படுகின்ற ( நோபலை விட புக்கர் விருது பெற்றவர்கள் பிரபலமும், அதிக எண்ணிக்கையில் வாசகர்களையும் பெறுகிறார்கள்) நோபல் பரிசைப் பெற்ற பெண் எழுத்தாளர்கள் குறித்த ஸ்ரீதேவியின் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதுடன் ஒரு தூண்டுசக்தியாகவும் இருக்கக்கூடும்.
ஸெல்மாவையும், திலெத்தாவையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா? இருவருமே கிறிஸ்துவ இலக்கிய நூல்களை எழுதினார்கள் என்பதே ஒற்றுமை. அன்னையைத் தவிர்த்த திலெத்தாவின் அத்தனை படைப்புகளும் சராசரி ரகம். ஸெல்மாவிடம் இருந்த நுட்பம் திலெத்தாவிடம் என்றுமே இருந்ததில்லை.
சில எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும், Hot cakes போல விற்கும், முன்னோர்கள் புண்ணியம் செய்து பிறந்தவர்கள். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
சீனாவின் வரலாறு, கலாச்சாரம் பற்றிய நூல்களில் Pearl S Buckன் The Good earth நாவல் முக்கியமானது. நோபலை வென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி. Toni Morrisonன் The Bluest Eye, Beloved இரண்டுமே தவறாது வாசிக்க வேண்டியவை. Alice Munroவின் கதைகளில் நுட்பம் அதிகம், சாதாரண வாசிப்புக்குப் புலப்படாதவை.
நோபல் ஆரம்பித்ததில் இருந்து விருதை வென்ற நூற்றிப்பத்தொன்பது பேரில் பதினேழு பெண்கள் மட்டுமே இலக்கியத்திற்காக நோபல் விருதைப் பெற்றிருக்கிறார்கள் (7 சதவீதம்) என்ற தகவலே எனக்குப் புதிது. அதே போல நான் இதுவரை வாசித்திராத எழுத்தாளர்கள் குறித்தும் பல தகவல்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற பெண்கள் குறித்த கையேடு என்ற வகையில் இந்த நூல் முக்கியமானது.
ஸ்ரீதேவி தன் எழுத்துப் பயணத்தை இந்த நூலின் மூலம் ஆரம்பித்திருக்கிறார். வேலை, மற்ற பொறுப்புகள் இவற்றின் நடுவே எழுதுவது அதைப் புத்தகமாகக் கொண்டு வருவது என்பதே சவால் தான். ஸ்ரீதேவியின் மொழிநடை, நன்கு பழகியவரின் பேச்சை எதிரிருந்து கேட்பது போல் இயல்பும், நெருக்கமும் கொண்டதாக இருக்கிறது. பெண்கள் எழுத வந்தால் சும்மா விடலாமா என்று இவரது ஆதங்கமும் இதில் ஒரு எழுத்தாளர் பற்றிய கட்டுரையில் வருகின்றது.
இன்னும் ஏராளமான பெண்கள் தமிழில் எழுத முற்பட வேண்டும். இந்த நேரத்தில் இதையும் சொல்ல வேண்டியதாகிறது. பிரபல எழுத்தாளர்கள் படிக்காத நூல்கள் குறித்து (Of course summary மற்றும் Reviews படித்திருப்பார்கள்) தொடர் விமர்சனங்கள் எழுதுகிறார்கள். Wikipediaவெல்லாம் நூல்களாக மாறி விற்பனையில் சாதனை புரிகின்றன. ஸ்ரீதேவிக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்குமே சொல்ல வருவது, உங்களது சொந்த எழுத்தில் (புனைவு, அல்புனைவு) கவனம் செலுத்துங்கள். ஆராய்ச்சிக்காக நூல்களை, இணையத்தைத் தேடியே அல்புனைவுகளை எழுத முடியும். அதில் தவறில்லை. ஆனால் அந்த Sourcesஐ நூலில் குறிப்பிடுங்கள். வாசிக்காத நூல்கள் பற்றி குறிப்பு எழுதும் போதும் இதையே கடைபிடியுங்கள். உங்கள் மனமும், மூளையும், வாழ்வும் கலந்து வரும் மாயஎழுத்து உலகின் அத்தனை Wikipediaவையும் விட பன்மடங்கு மேல். ஸ்ரீதேவி தொடர்ந்து எழுதுவதற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.
பிரதிக்கு:
மெட்ராஸ் பேப்பர் 89290 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 190.