ஆசிரியர் குறிப்பு:

திருப்பத்தூர் மாவட்டம், பாபனபள்ளியில் பிறந்தவர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிகியுள்ளன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

குலசேகரனின் முதல் சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது, தமிழில் Underrated writers பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக இவர் இடம்பெறுவார் என்று தோன்றியது. ஏழு வருடங்களுக்குப்பின் வாசிக்கும், இரண்டாவது சிறுகதைத் தொகுதி அந்த எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது. குழுக்களில் சேராதவர்கள், எழுதுதற்கு இருபது மடங்கு ஆர்ப்பாட்டம் செய்யத் தெரியாதவர்களை தமிழ் இலக்கிய உலகம் பெரும்பாலும் திரைக்குப்பின் வைத்துவிடும்.

பத்து கதைகள் கொண்ட தொகுப்பில், பல கதைகள் ஏதாவது ஒரு பிரச்சனையை மையப்புள்ளியாகக் கொண்டு வட்டங்கள் விரிவது போல் செல்கின்றன. திடீரென கடைகளை மறைத்து மேல்பாலம் எழும்புகிறது, சாலை விஸ்தரிப்பில் நிலம் பறிபோகப்போகிறது, புலியைப் பார்த்த பயம், ஊரடங்கு காலத்தில் அப்பா இறந்து போகிறார் என்பது போல்ஒரு பிரச்சனை தான் கதைகளின் அடிநாதமாகிறது.

அடுத்து இவரை அறியாமலேயே Hallucinations பல கதைகளில் வருகின்றன.
சாக்கடை பெருகி படுத்திருப்பவனை ஜில் என்று தொடுவது, பணப்பை தொலைவது, பாம்பு விட்டுக்குள் வருவது, திரையுலகக் கனவுத் தாரகை முத்தம் கொடுப்பது, ஊரடங்கில் டாக்டர் வந்து போவது. நனவிலி மயக்கத்தைக் கதைகளின் நடுவில் சேர்ப்பது மட்டுமில்லாமல், அதற்கு விளக்கமின்றி நகர்ந்து கதைகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தொகுப்பில் சராசரித் தரத்திற்குக் குறைந்த கதை என்று என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை. பல கதைகள் எந்த அளவுகோலிலுமே நல்ல கதைகள். மறைந்து தொலையும் கதவு, வெளியில் பூட்டிய வீடு இரண்டும் மிகக்கச்சிதமாக வந்த கதைகள். ஒரு வார்த்தை கூட அதிகமில்லாது, ஒரு எழுத்தாளர் பகிர நினைக்கும் உணர்வை அப்படியே வாசகருக்குக் கடத்தும் கதைகள்.
தொற்று, சாலை விரிவாக்கம் போன்ற சமகாலப் பிரச்சனைகளில் கூட, பிரச்சாரத்தொனியின்றி, கதையம்சம் தான் முன்னால் வந்து நிற்கிறது.

குலசேகரனின் மொழிநடை எளிமையாக, யாரையும் Impress செய்தாக வேண்டும் என்ற கட்டாயங்களின்றி இயல்பாக நகர்கிறது.
முதல் தொகுப்பை விட இரண்டாவது தொகுப்பின் கதைகளில் நிச்சயமாக நேர்த்தி கூடியிருக்கிறது. பெரும்பாலான கதைகள் அச்சு இதழ்களில் வெளியானது போல் தெரிகிறது, இனி வரும் காலங்களில் அதைக் குறைத்துக் கொண்டு இணைய இதழ்களில் எழுதுவது தனிப்பட்ட முறையில் இவருக்கு நல்லது. Self projectionல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இணையம் ஒரு நல்ல மீடியம். வாசகவட்டமும் கூட விரிவடையும்.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.175.

Leave a comment