ஆசிரியர் குறிப்பு:

மட்டக்களப்பு, தேத்தா தீவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிப்பவர். சிறுகதை, நாடகம் ஆகிய தளங்களில் இயங்கி வருகிறார். இதுவரை ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. 2000ல் இருந்து 2021 வரை எழுதிய கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தரவரிசையிலும் 2000ல் எழுதிய கதைகள் வெகுவாகப் பின் தங்கியும், 2021 கதைகள் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன. சுந்தரராமசாமியின் பிரசாதம் தொகுப்பிற்கும், ரத்னாபாயின் ஆங்கிலத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆனால் உரத்துக்கேட்கும் மௌனம் எழுதியவரே 2000ல் இது போன்ற கதைகளை எழுதி இருக்கிறார் என்பது நம்புவதற்கு சிரமமாக உள்ளது.

கனடாவும், இலங்கையும் சேர்ந்த வாழ்க்கையே அநேகமான கதைகளுக்கான களங்கள். கனடாவின் வாழ்க்கை பழகியபின், உங்கள் நாட்டில் சண்டை நின்று விட்டது, போய்விடுங்கள் என்றாலும் போவது சிரமம். முழு விருப்பத்துடன் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் போனவர்களே, விரைவில் வரவேண்டும் என்று தன்னையும், மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். சோமாலியா போன்ற கதைகள் பகடியாக எழுதப்பட்டாலும், கலவைக் கலாச்சாரத்தில் ஒரு இலங்கைக்காரனின் வாழ்க்கையை சொல்கின்றன.

2021ல் எழுதப்பட்ட மூன்று கதைகளுமே சிறப்பானவை. குறிப்பாக உரத்துக் கேட்கும் மௌனம். நாடகத்தில் காட்சிகள் மாறுவது போல் வாழ்க்கையிலும் மாறுகையில்யார் குற்றவாளி? யார் தேசபக்தன் என்பதே சந்தேகத்துக்குரியதாகிறது. அந்த உணர்வை Perfect ஆகப் படம்பிடித்திருக்கும் கதை.
ஒப்பீட்டிற்காக சிகப்பிக்குருவி ஐந்தாண்டுகள் உயிரோடு இருந்ததாக கதையில் வரும் சிறுகுறையை கண்டுகொள்ளாமல் விடும் அளவிற்கு அழுத்தமான கதை.

சக்கரவர்த்தியின் கதைகளில் இன்னொரு அம்சம் அவரது மொழிநடையில் இருக்கும் Casual tone. போர்க்குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள் என்பது போல் கனமான விசயங்களில் கூட மிகைஉணர்ச்சியைக் கூட்டும் வார்த்தைகளை இவர் உபயோகிப்பதில்லை. அதே போல் இயக்கமோ, சிங்கள ராணுவமோ எதுவாகினும் சார்புநிலை இல்லாது சம்பவங்களாகச் சொல்லிக் கடக்கப்படுகின்றன.

சக்கரவர்த்தியின் சென்ற சிறுகதைத் தொகுப்பைத் தமிழகத்தில் அதிகம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலகாலம் காத்திருந்து, 2021,22 கதைகள் பெரும்பான்மையாக வரும் தொகுப்பைக் கொண்டிருந்தால் சக்கரவர்த்தியின் முழுவீச்சை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் அறிமுகமாக இருந்திருக்கும்.
தொடர்ந்து எழுத வேண்டும் இவர். ஏதோ ஒரு கதையில் பகடியாக இவர் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுத்தை விமர்சித்த போதிலும், சமீபகாலமாக அவர்களது பங்கு தமிழிலக்கியத்திற்கு கணிசமான அளவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

பிரதிக்கு:

ஆதிரை வெளியீடு இலங்கை
தமிழகத்தில் யாவரும் பப்ளிஷர்ஸ், டிஸ்கவரி பேலஸ், பாரதி புத்தகாலயம்.
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 220

Leave a comment